கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலுக்கு 70 அடி உயர புதிய கொடி மரம்!
ADDED :3364 days ago
கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலுக்கு, 70 அடி உயரத்திற்கு, புதிய கொடி மரம், மலேஷியாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் கொடி மரம், 100 ஆண்டுகள் பழமையானதால், சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, அங்கு புதிய கொடி மரம் நிறுவ முடிவு செய்யப்பட்டது. உபயதாரர் மூலம், இக்கோவிலுக்கு மலேசியாவிலிருந்து வேங்கை மரம், துாத்துக்குடிக்கு கப்பல் மூலம் எடுத்து வரப்பட்டது. 25 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த வேங்கை மரம், 70 அடி நீளம், 2 அடி அகலம் உடையது. சித்திரை திருவிழாவிற்குள் புதிய கொடி மரத்தை நிர்மாணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று கோவிலுக்கு வந்த கொடி மரத்திற்கு, பட்டாச்சாரியார்கள் சிறப்பு அர்ச்சனை செய்தனர்.