வேணுகோபால சுவாமி கோவிலில் உறியடி விழா
ஊத்துக்கோட்டை:சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று நடந்த உறியடி திருவிழாவில், திரளானவர்கள் பங்கேற்றனர். ஊத்துக்கோட்டையில் உள்ளது, சந்தான வேணுகோபால சுவாமி கோவில். பக்தர்கள் பங்களிப்புடன் இக்கோவிலை சீரமைத்து, சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலில், ஒவ்வோர் ஆண்டும், ஆவணி மாதம் உறியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழா, நேற்று காலை துவங்கியது. மாலை, 3:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து உறியடி நிகழ்ச்சி துவங்கியது. இதில் உள்ளூர் வாலிபர்கள் திரளானவர்கள் பங்கேற்றனர். பெண்கள், மஞ்சள் தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றி, மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இரண்டாம் நாளான இன்று, ஞாயிற்றுக்கிழமை காலை, 9:00 மணிக்கு சுவாமியின் உருவம் பொறித்த படம் சிறப்பு அலங்காரம் செய்து, வீதிஉலா நடைபெறும்.