உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டுக்கு ஒரு முறை கோவில் திறப்பு: பாரம்பரிய முறைபடி வழிபட்ட பக்தர்கள்

ஆண்டுக்கு ஒரு முறை கோவில் திறப்பு: பாரம்பரிய முறைபடி வழிபட்ட பக்தர்கள்

குன்னுார்: குன்னுாரில், 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு மகாலிங்கேஸ்வரர் கோவிலில், நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகத்துடன் பூஜை நடந்தது.
குன்னுார் – கோத்தகிரி சாலையில், சிம்ஸ்பார்க் அருகே, படுகர் இன மக்களின் பூர்வீக கோவிலான, மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கும், 600 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த வனக்கோவிலில், ஆண்டுதோறும் ஜூன் மாதம்,  திங்களன்று மட்டும் நடை திறந்து, அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

நடப்பாண்டுக்கான விழா, நேற்று நடந்தது. காலை, 7:30 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, பகல், 12:30 மணி வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்; பின், நடை அடைக்கப்
பட்டது. படுக இனமக்கள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர். படுக இன மக்கள் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாத வினியோகம் செய்யப்பட்டது.  படுக இன மக்களின் பாரம்பரிய சிவன் கோவில்களில் இங்கு மட்டுமே பெண்கள் அனுமதிக்கப்படுவதால், நீலகிரி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் உள்ள படுக இன மக்கள் உட்பட அனைத்து மக்களும் பங்கேற்று வழிபட்டனர். விழாவை நடத்தி வரும், கோடமலை கிராம  நிர்வாகிகள் கூறுகையில், ‘கோடமலை கிராமத்தில், முதல் கன்று ஈன்ற, மாட்டின் பாலை, பச்சை மூங்கிலில் சேகரித்து, எடுத்துவரப்பட்டு மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.  இதே மாட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய் மட்டும், கோவிலில் விளக்கெரிய பயன்படுத்தப்படும்.  ‘இவ்வாறு ஏற்றப்படும் விளக்கு அணையும் வரை மட்டுமே, கோவில் நடை திறந்திருக்கும். தெவ்வகுடி என அழைக்கப்படும் இந்த வனக்கோவிலில், ஆண்டிற்கு. 3 அல்லது 4 மணி நேரம் மட்டுமே திறக்கப்படும். நினைத்தது கைகூடும் என இங்கு வந்து சென்றவர்கள் கூறி வருவதால், அனைத்து தரப்பபு மக்களும் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்,’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !