ஈரோட்டில் கடலானது காவிரி; கடவுளை தரிசிக்க கட்டுப்பாடு
ஈரோடு: காவிரி ஆற்றில் கடல் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால், கரையோர கோவிலில், தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து, காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில், மின் கதவணைகளில், மின்னுற்பத்தி தொடங்கியுள்ளது.
ஈரோடு மாவட்ட பகுதியில், ஊராட்சிக்கோட்டை, பி.பி., அக்ரஹாரம், வெண்டிபாளையம், பாசூர் ஆகிய இடங்களில் மின்னுற்பத்திக்காக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பணையிலும், தலா, 15 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து, 10 ஆயிரம் கன அடி தண்ணீர், தற்போது திறக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் அமைந்துள்ள அனைத்து தடுப்பணைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
வெண்டிபாளையம் தடுப்பணையில் தேங்கிய தண்ணீரால், கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் கடல் போல் தேங்கியுள்ளது. காவிரிக்கரை பெருமாள் கோவில் சுற்றுச்சுவர் வரை தண்ணீர் நிற்கிறது. இதனால், கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் சுவர் ஓரத்துக்கு செல்லக் கூடாது. கோவில் உள்பிரகார வழியாக நுழைந்து ஆற்றுக்குள் இறங்க கூடாது. கூட்டமாக நின்று தரிசனம் செய்யக் கூடாது என, பல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.