குருபாட்டி கண்ட கனவு
UPDATED : ஜூன் 02, 2023 | ADDED : ஜூன் 02, 2023
ஜூன் 3 - காஞ்சி மஹாபெரியவர் பிறந்த நாள்சென்னை கற்பகாம்பாள் மீது பக்தி கொண்டவர் 'குருபாட்டி' எனப்படும் முத்துலட்சுமி. இவரது தலைமையில் பெண்கள் லலிதா சகஸ்ரநாமத்தை பாடுவது வழக்கம். பாட்டியின் கனவில் ஒருநாள், காசுமாலையை அணிந்த நிலையில் கற்பகாம்பாளும், அருகில் காஞ்சி மஹாபெரியவரும் நின்றிருந்தனர். ''காஞ்சிபுரம் காமாட்சியம்மனுக்குத் தானே மஹாபெரியவர் காசுமாலை செய்திருக்கிறார். உனக்கு ஏதும்மா காசுமாலை?'' எனக் கேட்டாள் குருபாட்டி. ''ஆமா... காமாட்சி மாதிரியே கற்பகாம்பாளுக்கு நீயுந்தான் காசுமாலை பண்ணேன்'' என்றார் மஹாபெரியவர். ''ஏழையான எனக்கு சாத்தியம் இல்லையே'' என்று தயங்க, 'உன்னால் முடியும்' என்றார் மஹாபெரியவர். அத்துடன் கனவு கலைந்தது. காலையில் கோயிலுக்கு சென்றார் குருபாட்டி. பாராயணக் குழுவினர் காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவரிடம் நடந்ததை தெரிவித்தனர். சுவாமிகளின் முன்னிலையில் பக்தை ஒருவர் தான் அணிந்திருந்த இரண்டு வளையல்களை நன்கொடையாக வழங்கினார். அதன்பின் பலரிடம் நன்கொடை பெற்றனர். கற்பகாம்பாளுக்கு காசுமாலை தயாரானதும் மீண்டும் காஞ்சி மடத்திற்கு சென்றனர். மஹாபெரியவர் அதன் மீது உதிரிப்பூக்களைத் துாவி ஆசியளித்த போது கூட்டத்தை விலக்கியபடி ஒரு சிறுமி வந்தாள். பிரசாதம் பெற்று விட்டு அங்கிருந்து மறைந்தாள். வந்த சிறுமி காமாட்சியம்மனே என உணர்ந்த பக்தர்கள் நெகிழ்ந்தனர். ஒரு நல்ல நாளில் காசுமாலையை கற்பகாம்பாளுக்கு அணிவித்தனர். கனவு நனவானதை எண்ணி குருபாட்டி ஆனந்தக் கண்ணீர் விட்டார். எங்கோ நின்ற பசு ஒன்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு அப்போது சன்னதிக்கு வந்தது. காஞ்சி மஹாபெரியவரே கோமாதாவின் வடிவில் தரிசனம் செய்ய வந்திருக்கிறாரோ என அங்கிருந்தவர்கள் மகிழ்ந்தனர்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.எஸ்.கணேச சர்மாganesasarma57@gmail.com