உள்ளூர் செய்திகள்

என்னை செதுக்கிய பெற்றோர்

இளைஞன் ஒருவனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை.'பேனை ஆப் பண்ணாமல் போகிறாய், ஆளில்லாத ரூமில் 'டிவி' ஓடுது பார், பேனாவை எடுத்து வை, கீழே கிடக்குது பார்' இப்படி சின்னச் சின்ன விஷயத்திற்கும், அப்பா நச்சரிப்பது கோபத்தை மூட்டியது.அவன் விண்ணப்பித்த வேலைக்கான நேர்காணல் அழைப்பு வீட்டுக்கு வந்தது.''வீட்டில் இருப்பதால் தானே அப்பா நச்சரிப்பதை கேட்க வேண்டியிருக்கு. வேலை கிடைச்சா வெளியூரில் போய் நிம்மதியா இருக்கணும்'' என நினைத்தான்.அப்பா அவனை கூப்பிட்டு, ''தம்பி! இன்டர்வீயூல கேட்கிற கேள்விக்கு தெளிவா பதில் சொல்லு; தெரியவில்லை என்றால் தைரியமாக எதிர்கொள்'' என்று சொல்லி பணம் கொடுத்து வழியனுப்பினார்.நேர்காணல் நடக்கும் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான் இளைஞன். கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி யாருமில்லை. கதவு சற்று திறந்தபடி, அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டியபடி இருந்தது. அதை சரிசெய்து, கதவை சாத்திவிட்டு நுழைந்தான். பாதையின் இருபுறமும் பூச்செடிகள் வரவேற்றன.தண்ணீர் பாய்ச்சிய காவலாளி, மோட்டாரை நிறுத்த குழாயை அப்படியே விட்டபடி போயிருந்தான். செடிகளுக்குப் பாயாமல் தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது.செடிகளுக்கு தண்ணீர் விழும்படி, குழாயை வைத்துவிட்டு கடந்தான். வரவேற்பு அறையில் யாரும் இல்லை. முதல்தளத்தில் நேர்காணல் நடப்பதாக அறிவிப்பு இருந்தது. மெதுவாக படியேறினான். காலை மணி பத்தாகியும் விளக்கு எரிந்தபடி இருந்தது. ''வீணாக எரிகிறதே?'' என்ற அப்பாவின் கண்டிப்பு நினைவுக்கு வர, விளக்கை அணைத்தான். மாடியில் பலர் அமர்ந்திருப்பதைக் கண்டு திகைத்தான். ''வேலை கிடைக்குமோ...கிடைக்காதோ?'' என மனம் துடித்தது.பதட்டமுடன் சென்றவன், மிதியடியில் 'வெல்கம்' என்பது தலைகீழாக இருக்கவே, அதனை காலால் திருப்பி விட்டு நுழைந்தான். ஹாலின் முன்புறத்தில் வந்தவர்கள் அமர்ந்திருக்க, பின்புறத்தில் மின்விசிறிகள் ஆள் இல்லாமல் சுற்றின. அப்பாவின் ஞாபகம் வர, மின்விசிறிகளை நிறுத்தி விட்டு உட்கார்ந்தான்.நேர்காணலுக்கு ஒவ்வொருவராக உள்ளே அழைத்த நிர்வாகத்தினர், வேறு வழியில் வெளியே அனுப்பினர். இதனால் கேள்வி எப்படி கேட்கிறார்கள் என்பது புரியவில்லை.தனக்கான அழைப்பு வந்ததும் அதிகாரியிடம் சென்றான்.சான்றிதழ்களை வாங்கினாலும் அதைப் பார்க்காமலேயே, ''எப்போது நீங்கள் பணியில் சேருகிறீர்கள்?''என கேட்டார் அதிகாரி.'' புத்திக்கூர்மைக்கான கேள்வியா, இல்லை வேலை கிடைத்ததற்கான அறிகுறியா?'' என மனதிற்குள் குழம்பினான். ''என்ன யோசிக்கிறீர்கள்?'' என்றார் அதிகாரி. ''நாங்கள் யாரிடமும் கேள்வியே கேட்கவில்லை. கேள்வி - பதிலால் ஒருவரின் மேலாண்மையை அறிவது சிரமம். செயலின் அடிப்படையில் தேர்வு நடத்தி, கேமரா மூலம் அனைவரையும் கண்காணித்தோம். தேவையின்றி ஓடிய தண்ணீர், எரிந்த விளக்கு, மின்விசிறியைக் கண்டதும் நீங்கள் ஒருவர் மட்டும் அதனை சரி செய்தீர்கள்.அதனால் உங்களை தேர்வு செய்து விட்டோம்'' என்றார்.'அப்பா மீது எரிச்சல் பட்டேனே! இன்று அந்த ஒழுங்குமுறை தானே எனக்கு வேலை கொடுத்திருக்கிறது. அப்பாவுக்கு மனதார நன்றி தெரிவித்தான். அவரின் நல்ல எண்ணமே, ஒழுங்கு இல்லாத என்னையும் அழகான சிலையாக உருவாக்கியுள்ளது'' என மனம் நெகிழ்ந்தான்.வேலையில் சேர்ந்து வெளியூரில் தங்கும் போது, பெற்றோரை அழைத்துச் செல்லும் முடிவுக்கு வந்தான். உளி பட்டால் வலிக்குமே என பாறை நினைத்தால் சிலையாக முடியுமா? நாம் அழகான சிலையாக உருவாக, நமக்குள் இருக்கும் வேண்டாத தீயகுணங்களை, கண்டிப்பால் திருத்தும் போது தந்தை வில்லனாக கூட தோன்றலாம். ஆனால் உளியாக பெற்றோர் செதுக்கினால் தான், பிள்ளைகள் வெற்றியாளர்களாக திகழ முடியும். இளைஞர்களே! இனியாவது பெற்றோரை உதாசீனப்படுத்தாதீர்.