வேலை ஒன்று சம்பளம் இரண்டு
சத்ரபதி சிவாஜியின் அரண்மனையில் வேலை செய்தவர்களில்.ஒரு பணியாளருக்கு 50 ரூபாயும், இன்னொருவருக்கு 100 ரூபாயும் சம்பளம். ஆனால், இருவருக்கும் ஒரே வேலை தான். குறைந்த சம்பளம் வாங்கியவன், இதுபற்றி சிவாஜியிடமே கேட்டு விட்டான்.அப்போது வாசலில் ஏதோ சப்தம் கேட்டது.சிவாஜி, அந்தப் பணியாளனிடம், “வாசலில் சத்தம் கேட்கிறது, போய் பார்த்து வா,” என்றார். அவன் போன வேகத்தில் திரும்பி வந்தான்.“ராஜா! ஒரு யானை போய்க் கொண்டிருக்கிறது,” என்றான்.“அது என்ன யானை?” என்றார் சிவாஜி. இவன் திரும்பவும் போய் வந்து, “ஆண் யானை மகராஜ்” என்றான்.“அதன் விலை எவ்வளவாம்?” என்றதும், திரும்ப யானைக்காரனை பார்க்க ஓடினான் பணியாளன்.இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் ஓடி ஓடி சென்று பார்த்து வர வேண்டியதாயிற்று.சிவாஜி, அடுத்த பணியாளனை அழைத்தார். “வாசலில் சத்தம் கேட்கிறது. பார்த்து வா,” என்றார்.அவன் சற்றுநேரத்தில் திரும்பி வந்தான். “மகராஜ்! அங்கே ஒரு ஆண் யானை போகிறது. மிகுந்த லட்சணமானது. தந்தத்தின் நீளம் மட்டும் ஐந்தடி இருக்கும். விலை ஆயிரம் பொன் பெறும்,” என்று விபரமாக எடுத்துரைத்தான்.சிவாஜி, முதல் பணியாளனை ஒரு பார்வை பார்த்தார். அதன்பிறகு அவன் அவரிடம் கூலி பற்றி வாய் திறக்கவே இல்லை.