சகல வரமும் அருளும் சதுரகிரியார்
சகல வரமும் அருளும் சதுரகிரி மகாலிங்க சுவாமி கோவில் மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லையில் வத்திராயிருப்பு அருகே உள்ளது. ஆடி அமாவாசையன்று மலையேறி மகாலிங்க சுவாமியை வழிபடுவோர், சகல நன்மையும் பெறுவர். தல வரலாறு: சதுரகிரி மலை மீது பச்சைமால் என்பவர் பசு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு பசு மட்டும் பால் கொடுக்கவில்லை. ஒருநாள் அந்தப் பசு ஒரு குறிப்பிட்ட இடத்தில், தன்மடிப்பாலை சொரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பச்சைமால் பசுவை அடித்தார். மாடு ஓடி விட்டது. அது பால் சொரிந்த இடத்தில் ஒரு அடியவர் தலையில் ரத்தம் வடிய நின்றார். பச்சைமால் அவரிடம் மன்னிப்பு கேட்டு ரத்தம் வடிந்த இடத்தில் அருகிலிருந்த மூலிகை செடியின் இலையைப் பறித்து வைத்து கட்டினார். ரத்தம் நின்று விட்டது. அப்போது அந்த அடியவர் தன் சுயரூபத்தைக் காட்டியதும் பச்சைமால் அதிர்ந்தார். ஏனெனில் வந்தவர் சிவன். அந்த இடத்தில் லிங்கமாக எழுந்தருளிய அவருக்கு மகாலிங்க சுவாமி என பெயரிடப்பட்டது. பல சித்தர்கள் இங்கு தங்கினர். மற்றொரு வரலாறு: சதுரகிரி அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவர் பச்சைமால். இவர் பசுக்களை மேய்த்து பிழைத்தார். இவனது பெற்றோர் தில்லைக்கோன் திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்றபோது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக் கொண்டாள். வழக்கத்தைவிட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தார். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு 'சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனம் திருந்திய பச்சைமால், சதுரகிரிக்கு வரும் அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தார். சுத்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினார். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன், அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக் கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தார். உடனே துறவி புலித்தோல் அணிந்த சிவனாகக் காட்சி கொடுத்தார். பச்சைமால் வருந்தி அழுதார். சிவபெருமான் அவரைத் தேற்றி, “நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்ல தேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி மகாலிங்கம் என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. அடி வாங்கும் போது சற்று தலை சாய்த்ததால், மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பு இருப்பதையும் காணலாம்.பெயர்க்காரணம்: திசைக்கு நான்கு கிரிகள் (மலைகள்) வீதம், பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். மகாலிங்கம் கோவிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை சஞ்சீவி மலை என்கின்றனர். சந்தன மகாலிங்கம் கோவில் அருகே 18 சித்தர்கள் சன்னிதி உள்ளது. பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்தார் என்பர். இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள். சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் அபிஷேகம் நடக்கும். சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோவில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். சுந்தரமூர்த்தி: கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். இவர் தங்கியிருந்த குன்றை கும்ப மலை என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுத்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் சுந்தரமூர்த்தி லிங்கம் எனப்படுகிறது. அருளை வழங்குவது சுந்தரமகாலிங்கம், பொருளை வழங்குவது சுந்தரமூர்த்தி லிங்கம் எனக் கூறுவர். சதுரகிரி கோவிலின் நுழைவுப் பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது.எல்லாம் சந்தன மயம்: சுந்தர மகாலிங்கம் கோவிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய் விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்கத்திற்கு சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன், பார்வதியை தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் என தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னிதி அருகில் ஓடும் தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். இக்கோவிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரியம்மன் என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள். இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோவில் உள்ளது.லிங்க வடிவ அம்பிகை சிவனை போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் ஆனந்தவல்லி என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோவில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால் பலரிடமும் உதவி கேட்டும் பணம் சேரவில்லை. முனிவர் ஒருவர், சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும், என்றார். வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றில் காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னிதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை பிலாவடி கருப்பர் என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.இருப்பிடம்: மதுரை வத்திராயிருப்பு சாலையில் 58 கி.மீ., கடந்தால் தாணிப்பாறை. இங்கிருந்து சதுரகிரி மலை அடிவாரத்திற்கு 7கி.மீ., இங்கிருந்து மலையில் 10 கி.மீ. தூரம் ஏறினால் கோவிலை அடையலாம். இதில் ஏற மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை ஆகும்.