சொத்து பிரச்னை தீரவேண்டுமா! குருங்குடில் வாங்க சகோதரர்களே!
சகோதரர்களுக்கு இடையே சொத்து பிரச்னை இருந்து அது தீர வேண்டுமானால், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள குருங்குடில் காத்தாயி அம்மன் கோவிலில் உள்ள மூன்று அம்மன்களை தரிசித்து வரலாம். மூவரும் ஒரே கருவறையில் இருப்பது சிறப்பு. தல வரலாறு: முதலாம் விக்கிரமசோழன் தன் குல தெய்வமாக காத்தாயி அம்மனை வழிபட்டு வந்தான். ஒருமுறை இவன், மதுரையை ஆண்ட வமிச சேகர பாண்டியன் மீது படையெடுத்தான். பாண்டியனுக்கு போர் செய்வதிலும், உயிர்கள் அழிவதிலும் உடன்பாடில்லை. சிவபக்தனான அவன், சோழனிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும்படி மதுரை சொக்கநாதரிடம் வேண்டி கொண்டான். மன்னனின் வேண்டுதலை ஏற்ற சிவன், குறவன் வேடத்தில் சென்று சோழனுடன் போரிட்டார். அவரை எதிர்க்க முடியாத மன்னன், வந்திருப்பது சிவன் என அறிந்து, அவரது பாதத்தில் சரணடைந்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து, “மண்ணாசையால் நடக்கும் போரினால், உயிர் இழப்பு தான் ஏற்படும்,” என உபதேசம் செய்து, 'மறுபிறப்பிலும் மன்னனாகப் பிறந்து நல்லாட்சி புரிவாய்' என ஆசிர்வதித்து மறைந்தார்.இம்மன்னனே மறுபிறப்பில் இரண்டாம் விக்கிரம சோழனாக பிறந்தான். அவனுக்கு முற்பிறப்பு நினைவு வந்தது. எனவே அப்போது வழிபட்ட காத்தாயி அம்மனையே தொடர்ந்து வழிபட்டான். மன்னனின் பங்காளிகள் ஆட்சிக்கு எதிராக தொந்தரவு செய்தனர். அவர்களை ஏதும் செய்ய விரும்பாத மன்னன், அம்பிகையிடம், “தாயே! நான் முற்பிறப்பில் பாண்டியனுடன் போர் செய்யச் சென்றபோது, சிவனே நேரில் வந்து போரை தடுத்து என்னை ஆட்கொண்டாய். இப்போது பங்காளிகளே எனக்கு தொந்தரவு தருகின்றனர். இதிலிருந்து நீயே என்னைக் காக்க வேண்டும்,” என வேண்டினான். மன்னனின் வேண்டுதலை ஏற்ற அம்மன், குறத்தி வேடத்தில் வந்து, பங்காளிகளிடம் பேசி, பிரச்னையை தீர்த்து வைத்தாள். மகிழ்ந்த மன்னன், குறத்தி வடிவில் ஒரு அம்பிகையை வடித்து, காத்தாயி அம்பாள் அருகில் பிரதிஷ்டை செய்தான்.மூன்று அம்பிகை: மூலஸ்தானத்தில் காத்தாயி அம்பாள், இடுப்பில் முருகனைத் தூக்கி வைத்தபடி இருக்கிறாள். இவளை, 'குழந்தையம்மன்' என்பர். இவளுக்கு வலப்புறம் சங்கு, சக்கரத்துடன் பச்சைவாழியம்மனும், அடுத்து குறத்தி வடிவில் பூங்குறத்தியம்மனும் அருள்கின்றனர். சகோதரர்களுக்கிடையே சொத்து பிரச்னை இருந்தால், அது தீர்ந்து சுமூக உறவு கொள்வதற்கு மூன்று அம்பிகையருக்கும் பன்னீர் அபிஷேகம் செய்து வழிபடலாம். சுகப்பிரசவம் ஆவதற்கு இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.சிவன் சன்னிதி: கைலாய சிவன் சன்னிதி தெற்கு நோக்கி உள்ளது. சிவன் இங்கு உருவ வடிவில் காட்சி தருகிறார். இவர், தட்சிணாமூர்த்திக்குரிய தென்திசை நோக்கி இருப்பதால், கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகிறார்கள். இங்கு சிவன், விநாயகர், முருகன், முத்து முனி, செம்முனி, ஜடாமுனி, லாடமுனி, கருமுனி, வீரமாமுனி, வாழுமுனி ஆகிய காவல் தெய்வங்களும் அருளுகின்றனர்.இருப்பிடம்: சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் 29 கி.மீ., இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ., தூரத்திலுள்ள வடவாற்றங்கரையில் கோவில்.திறக்கும் நேரம்: காலை 6.00 - 11.30 மணி, மாலை 4.00 - 8.30 மணி.அலைபேசி: 99424 44928