உள்ளூர் செய்திகள்

இதயத்திற்கு இதம் தரும் இருதயாலீஸ்வரர்

நோயாளிகள் ஒரு கோவிலுக்கு வந்து தங்களுக்கு குணமாக வேண்டும் என வேண்டுவது வாடிக்கை. ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், தங்கள் சிகிச்சை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இறைவனை வேண்டி வருகிறார்கள் என்றால், அந்த அதிசய கோவிலை நீங்களும் பார்க்க வேண்டுமல்லவா! இந்தக்கோவில் தான் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் ஆகும். தல வரலாறு: நாயன்மார்களில் ஒருவரான பூசலார் திருநின்றவூரில் பிறந்தவர். இவர் அவ்வூரிலுள்ள சிவலிங்கம் ஒன்றை தரிசித்து வந்தார். மேற்கூரை இல்லாத அந்த லிங்கம் வெயிலிலும், மழையிலும் நனைந்தது. இதைப்பார்த்த பூசலாருக்கு சிவனுக்கு கோவில் கட்ட ஆசை எழுந்தது. ஆனால் அவரோ பரமஏழை. எனவே சிவனை தன் மனதில் இருத்தி, தன்னிடம் ஏராளமான பணம் இருப்பது போல் கற்பனை செய்து, மனதுக்குள்ளேயே கோயில் கட்டி முடித்தார்.இந்த நேரத்தில் காஞ்சிபுரத்தில் ஒரு மன்னன் சிவனுக்கு கோவில் கட்டி கொண்டிருந்தான். அவன் கட்டி முடித்த நேரமும், பூசலார் தன் மனக்கோவிலை கட்டி முடித்த நேரமும் ஒன்றாக அமைந்தது. இருவரும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்த நாள் குறித்தனர். ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய சிவன், “நீ கும்பாபிஷேகம் நடத்தும் நாளில் திருநின்றவூரில் பூசலார் என்ற அடியார் கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்து விட்டார். நான் அங்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே நீ வேறொரு நாளில் கும்பாபிஷேகம் வைத்து கொள்,”என்று கூறி மறைந்தார். அதன்பின் பூசலாரை சந்தித்த மன்னன், மனதிலேயே கோவில் கட்டிய விஷயமறிந்து ஆச்சரியப்பட்டான். அன்பினால் மனதில் கட்டும் கோவிலுக்கும், பெருமைக்காக கட்டும் கோவிலுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டான். குறிப்பிட்ட நாளில் பூசலார் எழுப்பிய மனக்கோவிலில் சிவபெருமான் எழுந்தருளினார். அவரது இருதயத்தில் நடந்த கும்பாபிஷேகத்தை பக்தர்கள் கண்டுகளித்தனர். அன்றே ஈசனின் திருவடியை அடைந்தார் பூசலார். பூசலாரின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மன்னன் இங்கு நிஜக்கோவில் கட்டி லிங்கம் பிரதிஷ்டை செய்து, 'இருதயாலீஸ்வரர்' என்று பெயர் சூட்டினான். இங்குள்ள அம்பாளை மரகதாம்பிகை என்கின்றனர்.தல சிறப்பு: சிவனின் மூலஸ்தானத்திலேயே பூசலார் நாயனாரின் சிலை இருக்கிறது. பூசலார் நாயனார் தன் மனதில் கோவில் கட்டியதால், இருதயம் தொடர்பான நோய்களுக்கு இங்கு வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது. இருதயநோய் டாக்டர்கள் தங்களது நோயாளிகள் விரைவில் குணமாக வேண்டும் என திங்கட்கிழமைகளில் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நடராஜர் சன்னிதிகள் உள்ளன. இங்கு விளக்கேற்றி வழிபட்டால் லட்சுமி கடாட்சம் பெருகும், ஆயுள் விருத்தியாகும். கல்வி அபிவிருத்தியாகும்.திருவிழா : வைகாசி விசாகத்தன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு, ஐப்பசி அனுஷத்தில் பூசலார் குருபூஜை, மார்கழி திருவாதிரையில் ஆருத்ரா தரிசனம்.இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் ரயிலில் 33 கி.மீ., தூரத்தில் திருநின்றவூர். ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் கோவில். சாலை வழியாக பூந்தமல்லி - திருப்பதி ரோட்டில் 13 கி.மீ.,நேரம்: காலை 6.30 - 12.30 மணி, மாலை 4.30 - இரவு 8.30 மணி.அலைபேசி: 94441 64108.