மனசு சரியில்லையா? திங்களன்று இங்கே வாங்க!
''மனசே சரியில்லே.... எவ்வளவு தான் மாற்ற முயன்றாலும், அந்த சம்பவத்தை மறக்க முடியலே...'' என்று உங்களுக்கு நடந்த விரும்பத் தகாத சம்பவங்களால் மனம் புண்பட்டு போயிருக்கிறீர்களா! திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் ஒத்தாண்டேஸ்வரரை வணங்க வாருங்கள். உங்களுக்கு அவர் மனோபலத்தை அருள்வார். தல வரலாறு: மன்னன் கரிகால் பெருவளத்தான், இத்தலம் அருகிலுள்ள ஊருக்கு யானையில் புறப்பட்டான். வழியில், யானையின் கால் ஒரு கொடியில் சிக்கியது. வாளைக் கொண்டு மன்னன் கொடிகளை வெட்ட, அந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சியுற்ற மன்னன், கொடிகளை விலக்கியபோது ஒரு சிவலிங்கம் தென்பட்டது.லிங்கத்தின் மேல் பகுதியில் இருந்து ரத்தம் கொட்டியது. பதறிய மன்னன், லிங்கத்தை வெட்டிய பாவம் தீர தன் வலக்கையை வெட்டி எறிந்தான். அவனது செயல் கண்டு நெகிழ்ந்த சிவன், ரிஷப வாகனத்தில் காட்சி தந்து, கையை மீண்டும் பொருத்தினார். அதனால் இத்தல சிவன் 'கை தந்த பிரான்' என்னும் பெயருடன் இங்கு வீற்றிருக்கிறார். இவருக்கு 'ஒத்தாண்டேஸ்வரர்' என்றும் பெயருண்டு. காயத்தால் அவதிப்பட்ட மன்னனுக்கு ஆறுதல் கூறி குளிர்வித்ததால், அம்பாளுக்கு 'குளிர்ந்த நாயகி' என பெயர் வந்தது. தலவரலாறு சுதை சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.மனவலிமை தருபவர்: சிவலிங்கத்தின் தலையில் வெட்டுப்பட்ட அடையாளம் உள்ளது. கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் அம்மனுடன் சுவாமி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர்களை தரிசித்தால் பாவம் நீங்கி நன்மை உண்டாகும். இவரை வழிபட்டவருக்கு மனபலம் அதிகரிக்கும் என்பதால் 'மன அனுகூலேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. மனோகாரகரான சந்திரனுக்குரிய திங்கட்கிழமை, பவுர்ணமியன்று தரிசித்தால் விரும்பத்தகாத சம்பவங்களால் ஏற்பட்ட துயர் நீங்கி, மனோபலம் அதிகரிக்கும்.பிரிந்தவர் கூடுதல்: இங்குள்ள நடராஜர், சிவகாமியைப் பார்த்தபடியும், அம்மன் நடராஜரைப் பார்த்தபடியும் இருக்கின்றனர். இவர்களை தரிசித்தால் பிரிந்த தம்பதி ஒன்று சேருவர்.தடைகளை நீக்கி முயற்சியில் வெற்றி தரும் 'பிரசன்ன விநாயகர்' இங்குள்ளார். 'பிரசன்ன' என்றால் 'அனுகூலம்'. கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் அமைந்துள்ள கருவறையின் கோஷ்டத்தில், மேற்கு நோக்கியபடி பெருமாள் சன்னதி உள்ளது. பிரகாரத்தில் சனீஸ்வரர், ரிஷப நாயகருக்கு சன்னதிகள் உள்ளன.மூன்று நந்திகள்: சுவாமிக்கு முன்புறம் அதிகார நந்தி, பிரதோஷ நந்தி இருப்பதுடன், பின்புறத்தில் கிழக்கு நோக்கியபடி தர்ம நந்தியும் உள்ளது. தலவிருட்சமாக வில்வ மரம் உள்ளது.எப்படி செல்வது: சென்னை - திருப்பதி ரோட்டில் 25 கி.மீ.,விசேஷ நாட்கள்: பங்குனி உத்திர திருவிழா, ஆனி திருமஞ்சனம், கார்த்திகை லட்ச தீபம், ரதசப்தமிநேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:30 - 8:00 மணிதொடர்புக்கு: 98415 57775