உள்ளூர் செய்திகள்

நமசிவாய என சொல்வோமே.... நன்மைகள் ஆயிரம் கொள்வோமே...!

மார்ச் 7ல் மகாசிவாரத்திரி வருவதை ஒட்டி சிவனை வழிபடும் விதத்தில் இந்த வழிபாடு தரப்பட்டுள்ளது. சிவராத்திரியன்று இரவில் நான்கு கால அபிஷேகத்தை தரிசிக்கும் போது இதைப் படியுங்கள். * உலகாளும் சிவனே! காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்னும் திருநாமம் சொல்பவர்களுக்கு நன்மைகளை வாரி வழங்குபவனே! பிறைச்சந்திரனை முடியில் தரித்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடாமுடி கொண்டவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! நன்மைகளை வாரி வழங்குபவனே! எங்களை காத்தருள்வாயாக. * பார்வதி பிரியனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! கங்கையைத் தலைமேல் கொண்டவனே! பக்தர் மேல் பாசம் கொண்டவனே! பயத்தைப் போக்குகிறவனே! அன்பு மயமானவனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.* ஜோதியாய் ஒளிர்பவனே! சிவனே என்ற திருநாமம் சொல்வோரைக் காப்பவனே! எதிரிகளின் எதிரியே! நெற்றிக்கண் கொண்டவனே! காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே! எங்கள் நெஞ்சத்தில் நிரந்தரமாக குடி கொள்ள வருவாயாக.* ஐந்து முகம் கொண்டவனே! தங்கமயமான புலித்தோல் உடுத்தியவனே! மூவுலகுக்கும் அதிபதியே! பிறவிக்கடலில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே! நீலகண்டனே! கைலாயநாதனே! பிரபஞ்சத்தை இயக்குபவனே! பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக.* புண்ணியம் செய்தவர்களுக்கு அருள்புரிபவனே! சூலாயுதம் கொண்டவனே! மானும், மழு என்னும் கோடரியும் ஏந்தியவனே! சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்குப் பிரியமானவனே! எங்களுக்கு தீர்க்காயுளையும், நல்ல குழந்தைகளையும் தந்தருள்வாயாக.* தேவாதி தேவனே! மகாதேவனே! விரும்பிய பொருட்களைத் தருபவனே! கவுரியுடனும், மகாகணபதியுடனும் காட்சி அளிப்பவனே! வேல் முருகனின் தந்தையே! மகனிடம் உபதேசம் பெற்ற மாணவனே! எங்களுக்கு கல்வியறிவையும், சிறந்த பணியையும், நற்புகழையும் தந்தருள்வாயாக.* திரிபுர சம்ஹாரம் செய்தவனே! அகத்தியரை பொதிகைக்கு அனுப்பியவனே! வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! நாட்டியத்தின் நாயகனே! எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம் ஆகிய குணங்களை நீக்குவாயாக.* கிரகதோஷம் போக்குபவனே! சிவசிவ என்பவரின் தீவினையை மாய்ப்பவனே! சிந்தனைக்கு எட்டாதவனே! பாரெல்லாம் ஆளும் பரம்பொருளே! சங்கரனே! நாங்கள் எங்கு வசித்தாலும் அங்கெல்லாம் வந்து எங்களோடு இருந்து பாதுகாப்பாயாக.* இன்பத்தின் எல்லையே! இகபர சுகமே! உலக பாரத்தை தாங்குபவனே! பாவம் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் நெருப்பாய் உயர்ந்து நின்றவனே! அண்ணாமலையாய் உயர்ந்தவனே! சரணடைந்தவரைக் காப்பவனே! நல்லவர் நெஞ்சில் வாழ்பவனே! எங்கள் மனம் நிறையும் வண்ணம் பொருள்வளம் தந்தருள்வாயாக.* மங்கள குணம் உடையவனே! பயத்தைப் போக்குபவனே! பூதகணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் கொண்டவனே! காளையை வாகனமாகக் கொண்டவனே! யானைத்தோல் போர்த்தியவனே! மகேஸ்வரனே! எங்கள் நாடும், வீடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.