தாயாருக்கு தங்க மனசு
கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி கோவிலில் அருள்பாலிக்கும் கனகவல்லித் தாயாருக்கு நெய்தீபமேற்றி வழிபட எண்ணியதெல்லாம் விரைவில் நிறைவேறும். தங்க மனம் படைத்த இந்த தாயாரை வரலட்சுமி விரதத்தன்று வழிபடுவது சிறப்பாகும். மூன்று நரசிம்மர்: தன் பக்தன் பிரகலாதன், அவனது தந்தை இரணியனால் கொடுமைப் படுத்தப்படுவதை அறிந்த திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனைக் கொன்றார். அவர் 16 கைகளுடன் இங்கு எழுந்தருளியுள்ளார். அவரது கோபத்தை தணிக்கும் வகையில் நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மர் உள்ளனர். இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும். உற்ஸவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். நரசிம்மர் கைகளில் பிரயோக சக்கரம், க்ஷீரிகா எனப்படும் குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவற்றை ஏந்தியுள்ளார். மற்ற கைகள் இரணியனை வதம் செய்த நிலையில் உள்ளது. தாயாருக்கு தங்கமனசு: இங்கு லட்சுமி தேவி, கனகவல்லித்தாயார் என்ற பெயருடன் தனி சன்னிதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். 'கனகா' என்றால் 'தங்கம்'. செல்வத்தையும், சுமங்கலி பாக்கியத்தையும் அள்ளித்தரும், தங்க மனம் கொண்ட இந்த தாயாருக்கு வெள்ளிக்கிழமையில் நெய் தீபமேற்றி வழிபட்டால் விருப்பங்கள் எல்லாம் விரைவில் நிறைவேறும். லட்சுமியின் அம்சமான வில்வமரம் இங்கு தல விருட்சமாக உள்ளது. திருவிழா காலத்தில் கோவிலின் பின்புறம் உள்ள பத்து தூண் மண்டபத்தில் தாயாருக்கு ஊஞ்சல் உற்ஸவம் நடக்கிறது.கோவில் அமைப்பு: ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட இந்தக் கோவிலில் ஐந்து நிலை ராஜ கோபுரம் உள்ளது. ராமர், ஆண்டாள், கருடன், விஷ்வக்சேனர், பன்னிரு ஆழ்வார், மணவாள மாமுனிகள், தும்பிக்கை ஆழ்வார், விஷ்ணு துர்க்கை, ஆஞ்சநேயர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். அகோபிலம் 4வது ஜீயரின் பிருந்தாவனம் உள்ளது. இங்குள்ள ஐந்து தீர்த்தங்களுக்கு ஜமத்கனி, இந்திர, பிருகு, வாமன, கருட தீர்த்தம் என பெயரிடப்பட்டுள்ளது. பிரார்த்தனை: சுமங்கலி பாக்கியம் மட்டுமின்றி, மன அமைதி வேண்டியும், கடன் தொல்லை, கிரக தோஷம், திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் தாயாருக்கு நெய் விளக்கேற்றி பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் தாயாருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வஸ்திரம் சாத்துகின்றனர். வரலட்சுமி விரதத்தன்று பிரார்த்தனைகளைச் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.இருப்பிடம்: கடலூர் - புதுச்சேரி சாலையில் 15 கி.மீ., தூரத்தில் தவளைக்குப்பம். இங்கிருந்து பிரியும் சாலையில் ஒன்றரை கி.மீ தூரத்தில் கோவில். நேரம்: காலை 7.00 - 12.00, மாலை 4.30 - இரவு 9.00 மணி.தொலைபேசி: 04142 - 224 328.