ஓங்கி உலகளந்த உத்தமன்
ஓண நாயகனான வாமனர், எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரையில் அருள்பாலிக்கிறார்.தல வரலாறு : அசுரகுலத்தில் பிறந்த மகாபலிச் சக்கரவர்த்தி தன் செல்வத்தை, கேட்டவருக்கு எல்லாம் தர்மம் செய்தார். இதனால் தன்னை விட சிறந்த தர்மம் செய்பவர் உலகில் யாருமில்லை என்ற அகந்தை ஏற்பட்டது. அந்த அகந்தை மட்டும் அழிந்து விட்டால், அவர் தன்னை வந்து சேர தகுதி பெற்று விடுவார் என எண்ணிய மகாவிஷ்ணு, குள்ள வடிவில் 'வாமனர்' என்ற பெயரில் பூமிக்கு வந்தார். மகாபலியிடம் தானமாக மூன்றடி நிலம் கேட்டார். “குள்ளமான தங்களின் காலடியால் மூன்று அடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே! இன்னும் அதிகமாக கேட்கலாமே!” என்றார் மகாபலி.அசுரர்களின் குலகுரு சுக்கிராச்சாரியார், வந்திருப்பது விஷ்ணு என அறிந்து மகாபலியிடம், ''நீ தானம் செய்யாதே!'' என தடுத்தார். ஆனால் மகாபலி, குருவையும் மீறி தானம் அளிக்க சம்மதித்தார்.உடனே விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு, ஓரடியால் பூமியையும், இன்னொரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பின், “மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே?” என கேட்டார். அகந்தை அடங்கிய மகாபலி தலை வணங்கி, “பகவானே... என் தலையைத் தவிர வேறு ஏதுமில்லை,” என்றார். விஷ்ணு தன் காலால் அவரை பூமிக்குள் அழுத்தி ஆட்கொண்டார். இந்த சம்பவம் நடந்த இடம் எர்ணாகுளம் அருகிலுள்ள காக்கரை. இங்கு பெருமாள் காக்கரையப்பன் (வாமனர்) என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பெருஞ் செல்வநாயகி என்னும் பெயரில் தாயார் சன்னதி உள்ளது.வட்டக் கோயில்: கோயிலுக்கு வெளியே தேவி பகவதி, சாஸ்தா, சுந்தர யக்க்ஷி, கோபால கிருஷ்ணர், நாகர் சன்னதிகள் உள்ளன. பரசுராமர் இக்கோயிலை நிறுவினார். மகாபலி வழிபாடு செய்ததாக கூறப்படும் லிங்கம் இருக்கிறது. நுழைவு வாயிலில் மகாபலியின் சிம்மாசனம் உள்ளது. விளக்கேற்றி பக்தர்கள் மகாபலியை வழிபடுகின்றனர். கேரள பாணியில் ஓடு வேய்ந்த, வட்ட வடிவ கோயில் இது. முன் மண்டபத்தில் வாமனரின் மரச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கருவறையில் வாமன மூர்த்தி, நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார்.எப்படி செல்வது: எர்ணாகுளத்திலிருந்து 20 கி.மீ.விசேஷ நாட்கள்: ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி திருவோணம் வரை பத்து நாள் திருவிழா.நேரம்: அதிகாலை 5:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 99952 16368, 97475 36161அருகிலுள்ள தலம்: கூத்தாட்டுக்குளம் பகவதி, எர்ணாகுளத்திலிருந்து 48 கி.மீ.,