பிறவியை போக்கும் பெருமாள்
முன்பு செய்த வினைகளை கழிக்கவே பிறவி எடுக்கிறோம். நல்லதை செய்திருந்தால் நன்மையையும், கெட்டதை செய்திருந்தால் தீமையையும் அனுபவிக்க வேண்டும். இதில் இருந்து விடுபடுவதுதான் மோட்சம். இதை யார் தருவார்? ஆதிகேசவ பெருமாள். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் இவர் கோயில் கொண்டுள்ளார். பிரம்மா ஒருமுறை யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால், யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் பெருமாளிடம் முறையிட்டனர். அவர் கேசனை அழித்து, கேசியின் மேல் சயனம் கொண்டார். பெருமாளை பழிவாங்கும் நோக்கத்துடன் கேசியின் மனைவி, கங்கை, தாமிரபரணி நதியை துணைக்கு அழைத்தாள். அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர். பூமாதேவி இதையறிந்ததும் பெருமாள் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். இதனால் அவர்கள், பெருமாள் இருந்த இடத்தை சுற்றி வணங்கி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் 'வட்டாறு' என அழைக்கப்பட்டது. கேசனை அழித்ததால் 'கேசவப் பெருமாள்' என்ற திருநாமமும் இவருக்கு வந்தது. கேசியின் மீது சயனித்த போது, அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். அப்போது 12 ருத்ராட்சங்களை அவனது கைகளில் வைத்து தப்பிக்க விடாமல் செய்தார் பெருமாள். இவையே திருவட்டாறை சுற்றி 12 சிவன் கோயில்களாக அமைந்தன. இதனால் இன்றும் மகாசிவராத்திரியின் போது 12 கோயில்களையும் ஓடியவாறு தரிசித்து, கடைசியில் இவரை வணங்குகின்றனர். பெருமாளின் திருமேனி 'கடுசர்க்கரை' யோகம் என்னும் கலவை, 16,008 சாளக்கிராம கற்களை இணைத்து உருவானது. திருமுகம், திருக்கரம், திருப்பாதம் என்று மூன்று வாசல்கள் வழியாக இவரை தரிசிக்கலாம். கருவறையில் கருடன், சூரியன், பஞ்சாயுத புருஷர்கள், மது, கைடபர் என்னும் அரக்கர்கள் உள்ளனர். சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு அமர்ந்துள்ளார். நடுவாசலில் உள்ள உற்ஸவர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார். பங்குனி 3 முதல் 9 வரை, புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது படும். 108 திவ்ய தேசங்களில் இத்தல பெருமாளே, 'கிடந்த கோலத்தில்' பெரிய அளவில் உள்ளார். இவர் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபரை பார்த்த நிலையில் மேற்கு நோக்கி அருளுகிறார். இப்படி இடது கையை தொங்கவிட்டு, வலது கையில் முத்திரை காட்டி, தெற்கே தலை வைத்தும், வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார். இத்தகைய கோலத்தை தரிசிப்பது சிறப்பு. மரகதவல்லி நாச்சியார் தாயாராக உள்ளார். எப்படி செல்வது : நாகர்கோவிலில் இருந்து 30 கி.மீ., விசேஷ நாள்: ஓணம் ஐப்பசி பிரம்மோற்ஸவம், வைகுண்ட ஏகாதசி நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94425 77047அருகிலுள்ள தலம்: மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் 22 கி.மீ.,நேரம் :அதிகாலை 5:00 - 10:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 04651 - 222 596