வாழ்வில் என்றும் முன்னேற்றமே
கேரள மாநிலம் மூணாறு மலையின் மீது முதிரைப்புழை ஆற்றங்கரையில் முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கிறார். முதுவன்குடி வேடர் இன மக்களின் குலதெய்வமான இவர் 'பிரணவ ஸ்ரீசுப்பிரமணியர்' என அழைக்கப்படுகிறார். இவரை தொடர்ந்து மூன்று மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று தரிசிப்பவர் வாழ்வில் என்றும் முன்னேற்றம் உண்டாகும். வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி இருக்கிறார். பிரகாரத்தில் சிவன், ஐயப்பன், நவக்கிரகம் சன்னதிகள் உள்ளன. அரசமரத்தடியில் விநாயகர், நாகர் சன்னதிகள் உள்ளன. கேரள மலைக்கோயில்களில் இங்கு மட்டுமே அரசமரம் இருப்பது குறிப்பிடத்தக்கது. பழநியைப் போல இங்கு பூஜை முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஐப்பசி கந்தசஷ்டி விழாவின் நிறைவாக திருமணக்கோலத்தில் முருகனை தரிசிக்கலாம். தைப்பூசத்தன்று பறவைக்காவடிகள் காண்போரை பரவசப்படுத்தும். திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திர நாட்களில் அருகிலுள்ள மூலக்கடை பார்வதியம்மன் கோயிலுக்கு முருகன் எழுந்தருள்கிறார். கொடிமரம் இல்லாததால் கொடியேற்ற நாளில் சுவாமியின் கையில் காப்பு கட்டப்படுகிறது. தேர்த் திருவிழாவில் வடத்தைப் பிடித்திழுக்க பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அன்றாடம் மூன்று கால பூஜை நடக்கும் இக்கோயிலை மூணாறு ஹிந்து தேவஸ்தானம் நிர்வகிக்கிறது. 1938ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் வழங்கப்பட்ட பித்தளை தீபஸ்தம்பம் இங்குள்ளது. அக்.25, 2021ல் பாலாலயம் செய்யப்பட்டு தற்போது திருப்பணி நடக்கிறது. எப்படி செல்வது: மதுரையில் இருந்து தேனி 77 கி.மீ., அங்கிருந்து மூணாறு 83 கி.மீ.,விசேஷ நாள்: கந்தசஷ்டி திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்தொடர்புக்கு: 94474 70935நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:30 - 7:30 மணிஅருகிலுள்ள தலம்: மூணாறு மூலக்கடை பார்வதியம்மன் கோயில் 1 கி.மீ.,நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94469 33612