திருவள்ளூரில் வாழும் வெங்கடேசா...
நாம் கோயிலுக்கு சென்று பூஜை, அர்ச்சனை செய்கிறோம். இதெல்லாம் எதற்காக? நிம்மதிக்காக. நம் குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகத்தானே. இதற்காக பல கோயிலுக்கு சென்று, பல கடவுளிடம் முறையிடுகிறோம். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக ஓரிடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும். அதுதான் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில். அதுமட்டும் இல்லை. அங்கு சென்று வந்தால் திருப்பதி சென்று வந்த புண்ணியமும் கிடைக்கும். இவரை தரிசிக்க ஆசையா... திருவள்ளூர் நகர் சத்தியமூர்த்தி சாலைக்கு வாருங்கள். பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. பக்தர் ஒருவரது கனவில் தோன்றிய வெங்கடேசப்பெருமாள், தனக்கு இங்கே கோயில் உருவாக்கும்படி சொன்னதோடு, திருப்பதி செல்ல இயலாதவர்கள் என்னை இங்கே தரிசித்து அருள்பெறுமாறு தெரிவித்தார். பெருமாளின் விருப்பப்படியே கோயிலும் உருவானது. திருப்பதியில் உள்ள மூலவரை போன்றே இங்கும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் காட்சி தருகிறார். அவரது கண்கள் அழகா? இல்லை அவரை அலங்கரிக்கும் நகை அழகா? என்று ஒருநிமிடம் நம்மை யோசிக்க வைக்கும். கடைசியில் அவரது புன்னகைதான் அழகு என்று தோன்றும். பாரம்பரியம் மிக்க புராதனமான கோயில்கள் தரும் பரவசம், ஆன்மிக உணர்வு இதெல்லாமும் சிறிதும் குறையாமல் இக்கோயில் நமக்குத் தரும். வலப்புறம் பத்மாவதி தாயாரும், இடப்புறம் ஆண்டாள் தாயாரும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தை சுற்றி வரும்போது ஸ்ரீராமர், ஆஞ்சநேயர், ராமானுஜர், பன்னிரு ஆழ்வார்களை தரிசனம் செய்துவிடலாம். மாமரம் தல விருட்சமாக உள்ளது. இங்கு வந்தால் மனநிம்மதியும், சந்தோஷமும் பொங்கும். எப்படி செல்வது: திருவள்ளூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., விசேஷ நாள்: கிருஷ்ண ஜெயந்தி அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி, ஸ்ரீராமநவமிநேரம்: காலை 7:00 - 10:30 மணி; மாலை 5:30 - 7:30 மணிதொடர்புக்கு: 96772 14691அருகிலுள்ள தலம்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் 1 கி.மீ., நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிஅமாவாசை நாட்களில் அதிகாலை 5:00 - இரவு 8:30 மணிதொடர்புக்கு: 97894 19330, 0442 - 766 0378