உள்ளூர் செய்திகள்

குட்டி மதுரையில் குடியிருக்கும் சுக்கிரன்

துர்முகி ஆண்டின் ராஜா சுக்கிரன். இதை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்கோவில் அருகிலுள்ள கஞ்சனூர் அக்னிபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்று வரலாம். இவ்வூரை 'குட்டி மதுரை' என்பார்கள். சுக்கிரன் வணங்கிய தலம் என்பதால் சுவாமிக்கு சுக்கிரபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.தல சிறப்பு: மதுரையில் மீனாட்சியைப் போல, இங்கும் அம்பிகைக்கே சக்தி அதிகம். மதுரையில் மீனாட்சி அம்மன் சுவாமியின் வலப்புறம் இருப்பது போல் இங்கும் கற்பக நாயகி அம்பிகை வலப்புறம் இருக்கிறாள். பிரம்மாவின் விருப்பத்திற்கேற்ப சுவாமியும், அம்பிகையும் திருமணக்காட்சி கொடுத்த இடம். திருமணத்தடை உள்ளவர்களும், செல்வ வளம் பெறவும் இங்கு சென்று வரலாம். மற்ற கோவில்களில் அம்பாள் சுவாமியை வணங்கி திருமணம் செய்ததாக வரலாறு இருக்கும். இங்கே சுவாமி அம்பிகையை வேண்டி அவளைத் திருமணம் செய்து கொண்டார். எனவே பெண்களின் கோரிக்கைகளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். பெரிய புராணத்தில் வரும் மானக்கஞ்சாற நாயனார் இங்கு பிறந்தவர். சிவனுக்காக தன் மகளின் கூந்தலையே அறுத்து கொடுத்தவர் இவர்.நந்தியின் கதை: இந்த தலத்திலுள்ள நந்தி மிக விசேஷமானது. ஒரு சமயத்தில் கனமான புல்லுக்கட்டு ஒன்றை ஒரு அந்தணர் கைத்தவறி கீழே போட, அடியில் கிடந்த கன்றுக்குட்டியின் மீது அது விழுந்தது. கன்று இறந்து விட்டது. பசுதோஷம் ஏற்பட்டதால் வருந்திய அந்தணர் ஹரதத்தன் என்ற பக்தரிடம் இதற்கு நிவாரணம் கேட்டார். ஹரதத்தனின் அறிவுரைப்படி, அந்தணர் ஒரு கைப்பிடி புல்லை இத்தலத்து நந்திக்கு கொடுக்க, அந்த கல்நந்தி புல்லைத் தின்று விட்டது. பசுதோஷம் நீங்கியது. மூன்று சனீஸ்வரர்: ஒரு சனீஸ்வரரைக் கண்டாலே ஓரமாய் நின்று வணக்கம் போட்டு வந்து விடுவோம். கஞ்சனூர் கோவிலில் மூன்று இடத்தில் சனீஸ்வரர் சிலைகள் உள்ளன. அம்பிகை மற்றும் சிவனருள் பெற இத்தலத்துக்கு அவர் மாறி மாறி வந்ததால் இவ்வாறு சிலைகள் அமைக்கப்பட்டதாக சொல்கின்றனர்.சுக்கிரனின் கதை: அந்தகாசுரன் என்பவன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அப்போது அசுரர்களின் குருவாக இருந்தவர் பார்க்கவ முனிவர். தேவர்கள் அந்தகாசுரனை அழிக்க முற்பட்டனர். அசுரர் தரப்பில் உயிர்ச்சேதம் கடுமையாக இருந்தது. இதைத் தடுக்க சிவபெருமானை நோக்கி தவமிருந்து சஞ்சீவி மந்திர வரம் பெற்றார் பார்க்கவர். இவ்வரம் மூலம் இறந்தவர்களை உயிர் பிழைக்க வைத்தார். எனவே அசுரர்களின் அட்டகாசம் அதிகரித்தது. தேவர்கள் சிவனை சரணடைய, சிவன் பார்க்கவரை விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் சென்ற பார்க்கவர், அங்கும் தவமிருந்து வெளியே வந்தார். சிவனின் வயிற்றுக்குள்ளேயே கிடந்ததால் அவரது உடல் வெள்ளை ஆயிற்று. எனவே அவர் 'சுக்கிரன்' எனப்பட்டார். ('சுக்கிரன்' என்றால் 'வெள்ளை நிறத்தவன்'. இதனால் தான் நவக்கிரக மண்டபத்திலுள்ள சுக்கிரனுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்துவார்கள்) அவர் மீண்டும் அசுர குருவானார். மகாபலி மன்னனுக்கு குருவாக இருந்து தன் ஒரு கண்ணை இழந்தார். காசிக்கு சென்ற இவர் விஸ்வநாதரை வழிபட்டு, நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்றார்.சுக்கிரன் சன்னிதி: ஆரம்ப காலத்தில் இங்கு சுக்கிரனுக்கு சந்நிதி இல்லை. மூலவர் அக்னீஸ்வரருக்குள் சுக்கிரன் அடக்கமாக இருக்கிறார் என்றே சொன்னார்கள். நவக்கிரக கோவில்கள் பிரபலமானதை அடுத்து சுக்கிரன் தன் தேவியருடன் அருள்பாலிக்கும் சிலை தனி சன்னிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார்கோவில் 22 கி.மீ., இங்கிருந்து 3 கி.மீ., தூரத்தில் கஞ்சனூர்.