பூரநாளில் பூப்புனித நீராடல்
UPDATED : ஜூலை 24, 2020 | ADDED : ஜூலை 24, 2020
ஆடிப்பூரத்தன்று பார்வதி பூப்படைந்ததாக ஐதீகம். இந்நாளில் சிவன் கோயில்களில் உள்ள அம்மனுக்கு பூரச்சடங்கு என்னும் பெயரில் பூப்புனித நீராட்டு விழா நடத்துவர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இதற்காக கருவறை முன் மண்டபத்தில் சிறு பந்தலிட்டு உற்ஸவர் அம்மனை எழுந்தருளச் செய்வர். மூலவர் மீனாட்சிக்கும், உற்ஸவர் அம்மனுக்கும் ஒரே நேரத்தில் 'சீக்காளித்தல்' என்னும் சடங்கு நடக்கும். ஒருபடி உழக்கில் அரிசி அல்லது சோறு நிரப்பி, அதை அம்மனின் தலை முதல் பாதம் வரை மூன்று முறை ஏற்றி இறக்குவதற்கு 'சீக்காளித்தல்' என்று பெயர். அதன் பின் உற்ஸவர் அம்மனின் முன் சுமங்கலிப்பெண்கள் நலுங்கு செய்வர். இந்த வைபவத்தை சில கோயில்களில் ஐப்பசி பூரத்திலும் நடத்துவதுண்டு.