| ADDED : ஆக 25, 2026 11:10 PM
'தங்கள் அரசியல் விளம்பரத்துக்காக, விளையாட்டு வீரர்களை சிறுமைப்படுத்தலாமா...?' என, மஹா ராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே பற்றி கொதிப்புடன் கூறுகின்றனர், அம்மாநில மக்கள். மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 'மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை' என்ற கொள்கையுடன் செயல்பட்டு வரும் ராஜ் தாக்கரே, அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரர். மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஐரோப்பாவின் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் சமீபத்தில் நடந்தது. இதில், மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த திலீப் கேவிட் என்ற வீரர், ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார். சமீபத்தில், நாக்பூருக்கு ராஜ் தாக்கரே சென்றிருந்தார். அங்கு திலீப் கேவிட்டை, ராஜ் தாக்கரேயுடன் சந்திக்க வைக்க, உள்ளூரைச் சேர்ந்த அவரது கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், நான்கு மணி நேரத்துக்கும் மேலாக திலீப் கேவிட் காத்திருந்தும், அவரை சந்திக்காமலேயே ராஜ் தாக்கரே மும்பை சென்று விட்டார். இதையறிந்த பொதுமக்கள், 'நாட்டுக்காக பெருமை சேர்த்த வீரரை இப்படியா அவமதிப்பது...?' என, ராஜ் தாக்கரேயை கடுமையாக விமர்சிக்கின்றனர்.