அறிவியல் ஆயிரம்
பச்சரிசியில் ஆய்வுகள்
தென் மாநிலங்களில் தான், அதிக அளவில் புழுங்கல் அரிசி பயன்படுத்தப்படுகிறது. விரத காலங்கள், சமயம், ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் மட்டுமே பச்சரிசி சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.வட மாநிலங்கள் முழுவதும் பச்சரிசியே சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. பச்சரிசி தயாரிக்கும் நடைமுறையில், உமி முற்றிலும் நீக்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுகிறது.பாலீஷ் செய்யப்பட்ட பச்சரிசியில் சத்துக்கள் அழிகின்றன. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் வராமல் தடுக்க, பச்சரிசி அளவை குறைத்து பயன்படுத்த வேண்டும். ஒரு மாதத்திற்கு 20 முறைக்கு மேல் பச்சரிசியைப் பயன்படுத்தக் கூடாது.அமெரிக்காவில் தற்போது பச்சரிசி உண்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நியூயார்க்கில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை, அமெரிக்க இந்தியர்களை குறைவாகவே பச்சரிசியை சேர்த்து கொள்ளுமாறு பரிந்துரை செய்துள்ளது.
தகவல் சுரங்கம்
பெண்களுக்கு பிரதிநிதித்துவம்
முதன்முதலாக 1911 மார்ச் 8ல் தான், பெண்கள் தினம் அறிவிக்கப்பட்டது. இதனை சிறப்பிக்கும் வகையில் 2011ம் ஆண்டு பெண்கள் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. பெண்கள் சுதந்திரம், முன்னேற்றம் வளர்ந்திருந் தாலும் 'யு.என்.உமன்' என்ற தலைப்பில் அமைந்த ஐ.நா.,வின் அறிக்கை, பணியிடங்களில் பெண்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டுகிறது. பணியிடங்கள் தவிர, வீடுகளில் பெண்களின் மீதான வன்முறைச் செயல்கள் பதிவு செய்யப் படாமல் உள்ளன என ஐ.நா.,வின் அறிக்கை மேலும் கூறுகிறது.தெற்காசிய நாடுகளில், மற்ற நாடுகளை விட பெண்களின் நிலை மோசமாக உள்ளது. நீதித் துறை, காவல் துறை முதலியன பெண்களால் எளிதில் அணுக முடியாத வகையில் தான் இன்னும் உள்ளன. நீதித்துறை, காவல் துறையில் பெண்கள் பிரதிநிதித்துவம் போதிய அளவில் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என, ஐ.நா.,வின் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.