| ADDED : ஜூன் 29, 2024 05:39 AM
போடி : போடி அருகே விசுவாசபுரம் வரதராஜபெருமாள் கோயில் அருகே தாழ்வாக சென்ற உயரழுத்த மின் கம்பிகள் தினமலர் செய்தியின் எதிரொலியால் மாற்றி அமைக்கப்பட்டது.போடி ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விசுவாசபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. அருகே தென்னை, மக்காச்சோளம், சம்பங்கி, கால்நடை தீவனத்திற்கான சீமைப்புல் ஆகியவை 10 ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ளன. விளை பொருட்களை கோயில் பாதை வழியாக கொண்டு வருகின்றனர். கோயிலுக்கு பக்தர்கள் அதிகம் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் கோயில் அருகே தொடும் உயரத்தில் தாழ்வாக உயரழுத்த மின் கம்பிகள் தொங்கி கொண்டு இருந்தது. மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது.செய்தி எதிரொலியாக புதிதாக மின் கம்பம் அமைத்தும், தாழ்வாக சென்ற உயரழுத்த மின் கம்பிகளை மின்வாரிய அதிகாரிகள் சீரமைத்தனர்.