உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / எண்ணுார் சிறப்பு அனல்மின் நிலையத்தில் 2026 மார்ச்சில் உற்பத்தி துவக்க அட்வைஸ்

எண்ணுார் சிறப்பு அனல்மின் நிலையத்தில் 2026 மார்ச்சில் உற்பத்தி துவக்க அட்வைஸ்

சென்னை:நம் நாளிதழ் செய்தியை அடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் எண்ணுார் சிறப்பு அனல்மின் நிலையத்தின் கட்டுமான பணியை, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அடுத்தாண்டு மார்ச்சுக்குள் மின் உற்பத்தியை துவக்குமாறு, மத்திய அரசின், பி.எச்.இ.எல்., எனும், 'பெல்' நிறுவன அதிகாரிகளை அறிவுறுத்திஉள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் தலா, 660 மெகாவாட் திறனில், இரு அலகுகள் உடைய எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டலம் உட்பட ஐந்து அனல்மின் நிலையங்களை, பல்வேறு இடங்களில் மின் வாரியம் அமைத்து வருகிறது. 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மின் நிலையங்களில், ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை. இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் விரிவாக செய்தி வெளியானது. இதையடுத்து, மின் வாரிய தலைவர் ராதா கிருஷ்ணன், எண்ணுார் சிறப்பு மின் நிலையத்தின் கட்டுமான பணிகளை, நேற்று ஆய்வு செய்தார். 'திட்ட பணிகளை விரைந்து முடித்து, வரும் 2026 மார்ச்சுக்குள் மின் உற்பத்தியை உறுதி செய்ய வேண்டும்' என, மத்திய அரசின், 'பெல்' நிறுவன அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேலும், அதன் அருகில் உள்ள வட சென்னை, வட சென்னை விரிவாக்கம், வட சென்னை - 3 ஆகிய அனல்மின் நிலையங்களிலும் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன், 'பருவ மழை துவங்குவதற்குள், மூன்று அனல்மின் நிலையங்களிலும் முழு அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டும்' என, மின் வாரிய பொறியாளர்களுக்கு உத்தர விட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !