| ADDED : ஜூலை 23, 2024 12:48 AM
திருவனந்தபுரம், மேற்கு வங்கத்தின் முர்சிதாபாதைச் சேர்ந்தவர் ஷியாம் சுந்தர். இவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் புலம்பெயர் தொழிலாளியாக கேரள மாநிலத்துக்கு வந்தார்.தன் வாழ்வாதாரத்திற்காக, கட்டட பணிகளுக்கு சென்ற அவருக்கு, வருமானம் போதவில்லை. இதன் காரணமாக, குறைந்த வாடகையில் வீடு எடுத்து தங்க முடியாத சூழல் நிலவியது.இதற்கிடையே, தன் நண்பரின் வாயிலாக அப்பகுதியில் ஜாய் என்பவரது வீட்டில் உள்ள பழைய நாய் கூண்டில், கடந்த சில மாதங்களாக தங்கியிருந்தார். இதற்காக அந்த கூண்டில் கார்ட் போர்டு வைத்து அடைத்த அவர், உணவு சமைப்பது, உறங்குவது, மொபைல் போனுக்கு சார்ஜ் செய்வது போன்ற வசதிகளையும் ஏற்படுத்தி கொண்டார்.இந்த நிலையில், நாய் அடைக்கப்படும் கூண்டிற்குள் தொழிலாளி ஒருவர் தங்கியிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், அரசுக்கு தகவல் அளித்தனர்.இதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி அதிகாரிகள், ஷியாம் சுந்தர் வசித்த இடத்தை ஆய்வு செய்தனர். மனிதர்கள் தங்குவதற்கு ஏற்றச் சூழல் இல்லாத அந்த இடத்தில் அவர் தங்கியிருப்பதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.எனினும், இந்த கூண்டில் அவர் விருப்பப்பட்டு தங்கி வருவதாகவும், யாரும் தன்னை கட்டாயப்படுத்தவில்லை எனவும், இங்கு தங்குவதற்கு மாதந்தோறும் 500 ரூபாய் அளித்து வருவதாகவும் ஷியாம் சுந்தர் குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாக, வீட்டின் உரிமையாளர் ஜாய் மீது இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அரசு காப்பகத்தில் அவர் தங்க வைக்கப்பட்டார். இந்த விவகாரம் குறித்து தொழிலாளர் கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டு உள்ளார்.