துாய்மை பணியாளருக்கு வழங்கிய காலை உணவில் ‛கரப்பான் பூச்சி
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவாக வழங்கிய வெண்பொங்கலில் 'கரப்பான் பூச்சி' இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரியகுளம் நகராட்சி 30 வார்டுகளில் 15 நிரந்தரப் பணியாளர்கள், 164 ஒப்பந்தப் பணியாளர்கள் என 179 தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பிப்.,9 முதல் காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. நேற்று காலை போடி பகுதியில் உணவு தயாரித்து அதனை 'ஹாட் பாக்ஸில்' வைத்து வடகரை பஸ் ஸ்டாண்ட், 3ம் பகுதி நகராட்சிப் பள்ளி, தென்கரையில் நகராட்சி அலுவலகம் வளாகம், தெற்குரத வீதி மகாத்மா காந்தி பூங்கா அருகே என 4 இடங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு வினியோகம் செய்தனர். வடகரை 5வது வார்டில் பெண் தூய்மைப் பணியாளர் குணம் 56, என்பவர் வெண்பொங்கல், சாம்பார் உளுந்து வடையை டிபன் பாக்ஸில் வாங்கினார். அப்போது வெண்பொங்கலில் 'கரப்பான் பூச்சி' இறந்து கிடந்தது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகராட்சி தலைவர் சுமிதா கூறுகையில், 'இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். உணவுகள் தூய்மையாக வழங்கப்படுகிறதா என தினமும் கண்காணிக்கப்படும்' என்றார்.