உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / வாயு அதிகரிக்கும் உணவை தவிர்க்கலாம்!

வாயு அதிகரிக்கும் உணவை தவிர்க்கலாம்!

வயிறு உப்புசம் ஏற்பட காரணம், அதற்கான தீர்வுகளை கூறும், குடல், இரைப்பை அறுவை சிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணன்: உடலில் வாயு உண்டாக, இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இரைப்பை மற்றும் சிறுகுடலில் செரிமானமாகாத சில உணவுப் பொருட்கள், பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவால் உடைக்கப்படும் போது உண்டாகும் வாயு. மற்றொன்று, வாய்வழியாக உடலுக்குள் செல்லும் வெளிக்காற்று.இவை இரைப்பையிலிருந்து, ஏப்பமாகவோ, குடலை சென்றடைந்ததும் ஆசனவாய் வழியாகவோ, உடலில் இருந்து வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கி விட்டால், வயிறு வீங்கி, உப்புசம் ஏற்படும்.சாப்பிடும்போது பேசுவது, அவசரமாக சாப்பிடுவது, 'ஸ்ட்ரா' மூலம் உறிஞ்சிக் குடிப்பது, சூயிங்கம் மெல்வது, மிட்டாய் சப்புவது போன்ற சமயங்களில், நம்மையும் அறியாமல், காற்றையும் சேர்த்து விழுங்குகிறோம்.மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம், காலிபிளவர், முளைகட்டிய தானியம், வாழைக்காய், முட்டை, கிழங்கு வகைகள், செயற்கை பழச்சாறு சாப்பிடுவது... 'லாக்டோஸ் ஒவ்வாமை' இருப்பவர்கள், பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது...சிறுகுடலில், அதிகமாக தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா சேர்வது, உணவு வேளை இடைவெளி, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, மலம் மற்றும் சிறுநீரை அடக்குவது, எண்ணெயில் பொரித்த இறைச்சி, பாக்கெட்டுகளில் அடைத்த மசாலா, கொழுப்பு அதிகமுள்ள உணவு சாப்பிடுவதால், வயிறு உப்புசம் ஏற்படலாம்.இவை தவிர, வயிற்றில் எரிச்சல் பிரச்னை, சர்க்கரை நோய், 'குளூட்டன்' என்னும் புரதம் செரியாமை, அசுத்தமான நீர்நிலைகளில் வாழும், 'ஜார்டியா' எனும் பூச்சி, நீர் மூலம் உடலுக்குள் செல்வது உள்ளிட்ட, பல்வேறு பிரச்னைகளாலும் ஏற்படலாம்.வயிறு உப்புசத்தால், வயிறு அல்லது அடிவயிறு வீங்குதல், வாயுத் தொல்லை, சாப்பிட்டதும் அசவுகரியமாக உணர்தல், வயிறு இரைச்சல், குமட்டல் ஏற்படும். இதை தவிர்க்க, நன்மை செய்யும் பாக்டீரியா உள்ள தயிர் போன்ற உணவுகளை சாப்பிடலாம். மலம், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால், தாமதிக்காமல் செல்லலாம்.மருத்துவரின் பரிந்துரையின்றி, சுயமாக மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தினமும், 3 லி., நீர் அருந்த வேண்டும். வாயு அதிகரிக்கும் உணவை, முடிந்தவரை குறைக்க வேண்டும். தொல்லை தொடர்ந்தால், உணவா, நோயா என, மருத்துவரிடம் பரிசோதித்து, சிகிச்சை பெறுவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை