நிலத்தடி குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியின், 51 வார்டுகளில் 1,060க்கும் தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் வசிப்போருக்கு பாலாறு, திருப்பாற்கடல் மற்றும் வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக, மாநகராட்சி சார்பில், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதி, நான்கு முனை சந்திப்பில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, நான்கு நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,கோரிக்கை எழுந்துள்ளது.