சென்னை :இருமல் மருந்து குடித்து, 22 குழந்தைகள் பலியான விவகாரத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் உட்பட மூன்று பேரை, மத்திய பிரதேச சிறப்பு புலனாய்வு குழு போலீசார், சென்னை அசோக் நகரில் நேற்று கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த ஆகஸ்டில், 'கோல்ட்ரிப்' என்ற இருமல் மருந்து குடித்த குழந்தை ஒன்று பலியானது. இக்குழந்தைக்கு டாக்டர்களின் பரிந்துரையின்படியே இருமல் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. ரசாயனம் எனினும், அடுத்தடுத்து இதே இருமல் மருந்து குடித்த 20 குழந்தைகள் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தன. நேற்று மேலும் இரு குழந்தைகள் உயிரிழந்தன. பிரேத பரிசோதனையில் குழந்தைகளின் சிறுநீரகங்களில், 'டை எதிலீன் கிளைக்கால்' என்ற ரசாயனம் படிந்திருப்பது தெரியவந்தது; இது, விஷத்தன்மை உடையது. சிறுநீரகங்களில் படிந்து, அதை செயலிழக்கச் செய்யும் தன்மை உடையது . அதனால், 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், நச்சுத்தன்மை உள்ள ரசாயன பொருட்கள் கலந்திருப்பதை கண்டறிந்தனர். இந்த இருமல் மருந்து, தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வந்த, 'ஸ்ரீசன் பார்மா' என்ற மருந்து கம்பெனியில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ம.பி., மாநில போலீசார், ஸ்ரீசன் பார்மா மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்தனர். குழந்தைகளின் உயிர்பலிக்கு காரணமான நிறுவனத்தின் உரிமையாளர் உள்ளிட்டோர் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழு போலீசார், நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரம் வந்தனர். சம்பந்தப்பட்ட கம்பெனி செயல்படுகிறதா என்று ஆய்வு செய்தனர்; ஆனால், பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து, சென்னை அசோக் நகரில் வசித்து வரும் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன், 75, அவரது நிறுவனத்தின் மேலாளர் ஜெயராமன், ஆய்வக உதவியாளர் மகேஸ்வரி ஆகியோரை நேற்று அதிகாலையில் கைது செய்தனர். இந்த இருமல் மருந்து குடித்து, மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்; அதுபற்றியும் விசாரணை நடக்கிறது. 48.6 சதவீதம் நச்சு 'கோல்ட்ரிப்' மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தியதில், 'டை எதிலீன் கிளைக்கால்' என்ற நச்சுத்தன்மை உடைய வேதிப்பொருள் 48.6 சதவீதம் கலந்திருப்பது“இந்த அளவுக்கு அதிகமான டை எதிலீன் கிளைக்கால் கலப்பு என்பது மிகவும் ஆபத்தானது,” என, தமிழக முன்னாள் மருந்து தர ஆய்வாளர் சிவபாலன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 'கோல்ட்ரிப்' என்பது, காய்ச்சல் மற்றும் இருமலுக்கான மருந்து. இதிலுள்ள பாரசிட்டமால், தண்ணீரில் முழுதும் கரையாது; மிக குறைந்த அளவே கரையும். இது கரைவதற்கு, 'புரோப்பிலின் கிளைக்கால்' சேர்க்க வேண்டும். அப்போது தான், 'சிரப்' உருவாக்க முடியும். இந்த புரோப்பிலின் கிளைக்காலில், டை எதிலீன் கிளைக்கால் எனும் துாய்மையற்ற வேதிப்பொருள் உள்ளது. இது மருந்துகளில், 0.1 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், கோல்ட்ரிப் மருந்தில், 48.6 சதவீதம் இருந்திருக்கிறது. இதுதான், மருந்தை நச்சுதன்மையாக மாற்றி, உடல்நலத்தை பாதித்துள்ளது. இந்த மருந்தை தயாரித்த நிறுவனம், தயாரிப்புக்கு முன், தயாரிப்பின் போது, அதன்பின் என, மூன்று நிலைகளில் தரத்தை ஆய்வு செய்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வு செய்யாத 2 பேர் 'சஸ்பெண்ட்' தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிர மணியன் கூறியதாவது: மத்திய பிரதேசத்தில், இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து தமிழகத்துக்கு தகவல் கிடைத்தவுடன், உடனடியாக மருந்து உற்பத்தி நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 'கோல்ட்ரிப்' மருந்தில் நச்சுத்தன்மை அதிகளவு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசும், மத்திய பிரதேச மாநில அரசும், இந்த மருந்தில் நச்சுத்தன்மை இல்லை என்று தெரிவித்தன. இருப்பினும், நாம் தான் இந்த இருமல் மருந்தில் நச்சுத்தன்மை உள்ளது என கண்டறிந்து, உடனடியாக அதன் உற்பத்தியை நிறுத்தினோம்; ஆலையை மூடவும் உத்தரவிட்டுள்ளோம். இந்த விவகாரம் குறித்து, மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மீது, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம், மருந்தில் நச்சுத்தன்மை பொருள் கலப்பு குறித்து விசாரிக்கப்படும். தற்போது, மருந்து நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மூன்று நாட்களில் முடிவு செய்யப்படும். அதேநேரம், குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மருந்தின் தரத்தை ஆய்வு செய்யவில்லை என்பதற்காக, மூத்த மருந்து தர ஆய்வாளர்கள் இரண்டு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். மேலும் இரு குழந்தைகள் உயிரிழப்பு ம.பி.,யின்
சிந்த்வாரா மாவட்டத்தில், 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து குடித்து, ஏற்கனவே,
20 குழந்தைகள் இறந்த நிலையில், மேலும் இரண்டு குழந்தைகள் சிறுநீரக தொற்றால்
நேற்று உயிரிழந்தன. மஹாராஷ்டிராவின் நாக்பூரில் சிகிச்சை பெற்று வந்த
விஷால், 5, மயங்க் சூர்யவன்ஷி, 4, என்ற இரு குழந்தைகள் உயிரிழந்ததால்,
இறப்பு, 22 ஆக அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை உச்ச
நீதிமன்றத்தில், வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் தாக்கல் செய்த பொதுநல
மனு: ராஜஸ்தான் மற்றும் ம.பி.,யில், கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து
குழந்தைகள் பலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அனைத்து வழக்குகளையும்,
சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும், மருந்து பாதுகாப்பு
வழிமுறைகளை மறுசீராய்வு செய்ய வேண்டும். இதை, அவசர வழக்காக விசாரிக்க
வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற
நீதிமன்றம், இன்று விசாரிக்கிறது. உலக
சுகாதார அமைப்புக்கு கடிதம் உலக சுகாதார அமைப்புக்கு, மத்திய மருந்துகள்
தரக் கட்டுப்பாட்டு அமைப்பு எழுதியுள்ள கடிதம்: 'கோல்ட்ரிப், ரீலைப்,
ரெஸ்பிப்ரெஷ் டி.ஆர்' என்ற மூன்று இருமல் மருந்துகள், விற்பனையில் இருந்து
உடனடியாக திரும்பப் பெறப்பட்டு உள்ளன. அவற்றின் உற்பத்தியை நிறுத்த
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து,
இந்த இருமல் மருந்துகள் எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படவில்லை.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ***