சாலையோர தடுப்புகள் சேதம் சீரமைக்கு பணி எப்போது?
சோழவரம்:சோழவரம் அடுத்த தேவனேரி, செம்புலிவரம், ஆத்துார் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள் சேதமடைந்துள்ளன.இந்த தடுப்புகள் கனரக வாகனங்கள் மோதி சேதமான நிலையில், கால்நடைகள், இந்த வழியாக தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.மேலும், ஆத்துார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வருவோரும், மது போதையில் சேதமடைந்த தடுப்புகள் வழியாக, தள்ளாடியபடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர். இதனால், விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.கால்நடைகள், பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க கூடாது என்பதற்காகவே, இணைப்பு சாலைகளின் ஓரங்களில் தடுப்புகள் பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது, அவை ஆங்காங்கே சேதமடைந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது.எனவே, தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக பயணிக்கும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதியும், அவர்களது வாகனங்கள் எந்தவொரு இடையூறும் இன்றி பயணிக்கவும், சேதமடைந்த இரும்பு தடுப்புகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.