உள்ளூர் செய்திகள்

ஆசிய ஜோதி!

ரோஜாவின் ராஜா என்றால் நினைவிற்கு வருபவர், மறைந்த பிரதமர் நேரு. நாளை அவரது, 132ம் பிறந்த நாள்.மோதிலால் நேரு - சொரூபராணி தம்பதியருக்கு, நவ., 14, 1889ல் பிறந்தார் ஜவஹர்லால் நேரு. இவரை, 'ஆசிய ஜோதி' என்று பாசத்தோடு அழைக்கின்றனர். அவர் பிரதமர் பதவி வகித்த போது பெரும் முயற்சியால் கட்டி முடிக்கப்பட்டது, பக்ராநங்கல் அணை. இது, இமாசலபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. அதன் திறப்பு விழாவில், 'இந்த அணைக்கட்டில் மணல், சிமென்ட், கல் இவற்றுடன், இதைக் கட்டிய தொழிலாளர்களின் வியர்வையும் கலந்திருக்கிறது...' என்று கூறி, அணைக்கட்டும் பணியில் ஈடுபட்ட பெண் ஊழியரை திறக்க வைத்தார்.பிரதமராக பொறுப்பேற்றபோது, அறையில், குளிர்சாதன வசதி எதுவும் இல்லை. அது, முக்கிய தேவை என, பொருத்த ஏற்பாடு செய்தனர் அதிகாரிகள். அதை கண்டதும் கடும் கோபத்துடன், 'சரியான கூரையுடன் வீடுகள் கூட இல்லாத மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில், பிரதமருக்கு இம்மாதிரி ஆடம்பரங்கள் தேவை இல்லை...' என்று மறுத்தார்.நேருஜியுடன், 1959ல் அப்போதைய ஆஸ்திரேலிய பிரதமர் ராபர்ட் மென்சிஸ் டில்லியில் சொந்த பணியாக உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது, 'இந்த உலகத்தில் உங்கள் புகைப்படம் வெளிவராத செய்தித்தாளே கிடையாது... அதைப் பார்த்து தற்பெருமை அடைவீர்களா...' என்று கேட்டார்.அதற்கு, புன்னகையுடன் நேரு கூறியதாவது...'செய்திதாள்களில் பிரசுரமாகும் என் படங்களைப் பார்த்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்; ஆனால், தற்பெருமை அடைய மாட்டேன்! எங்கள் நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு படிப்பறிவு இல்லை... அவர்களால் நாட்டில் நடக்கும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து, செய்தித்தாள்களை படித்து தெரிந்து கொள்ள முடியாது...'அதனால் தான், வளர்ச்சி திட்டங்களில் பங்கு கொள்ளும் போதெல்லாம் புகைப் படங்களுக்கு, 'போஸ்' கொடுக்கிறேன். அந்த புகைப்படங்களைப் பார்த்தாவது திட்டங்கள் மீது மக்கள் நம்பிக்கை கொள்வர் என நம்புகிறேன்; நாட்டு மக்கள் மகிழ்ச்சிதான், என் லட்சியம்...'இவ்வாறு கூறினார் நேரு. வாயடைத்து போனார், ஆஸ்திரேலிய பிரதமர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !