உள்ளூர் செய்திகள்

தலைமுறை அறிவுரை!

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை, ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1992ல், 9ம் வகுப்பு படித்தேன். சராசரியாக படிக்கும் மாணவி நான்; ஒரு நாள், வீட்டுப்பாடம் எழுத தவறிவிட்டேன். வகுப்பு ஆசிரியர் ஜோதிமணி, வரிசையாக சோதனை செய்தபடி வந்தார். என்முறை வந்ததும், கை, கால்கள் நடுங்கியபடி அழ ஆரம்பித்து விட்டேன்.என்னை எதுவுமே கேட்கவில்லை; பாடம் நடத்த ஆரம்பித்தார். பின், தனியாக அழைத்து, 'எதற்கும் பெண் அழக் கூடாது; அழுவது பலம் அல்ல; ஆயுதமும் அல்ல. அது பலவீனம்... வீட்டுப் பாடம் எழுதவில்லை என்றால், மன்னிப்பு கேள்; அதை விடுத்து அழுவதால் பயன் இல்லை...' என்று அறிவுரைத்தார்.வாழ்வில் மறக்க முடியாத நாளாக அது அமைந்தது; அன்று முதல் வீட்டுப்பாடம் எழுத தவறியதில்லை. எப்போதும் துணிவை கைக்கொண்டு வருகிறேன். இப்போது என் வயது, 43; அந்த ஆசிரியரின் அறிவுரையை, வாழ்வில் பின்பற்றுகிறேன். அவரை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன். அவர் கூறியதையே, என் பிள்ளைகளுக்கும் சொல்லிவருகிறேன்.- கலைமணி, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !