உள்ளூர் செய்திகள்

தூக்கமும் கண்களை...

துாங்கச்செல்லும் நேரம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இரவு 8:00 மணிக்குள் உணவு முடித்து, படுக்கையில் விழுந்தால், 9:00க்குள் உறங்கியது ஒரு காலம். அது, 10:00 மணியாகி, நள்ளிரவாகி, அதிகாலை 4:00 மணி வரை கூட விழித்திருக்கும் நிலை உள்ளது.இரவு வேலையால் கண் விழிப்பது, என்றோ ஒருநாள் விழித்திருப்பது எல்லாம் தனி வகை. அவை பெரிய பாதிப்பு ஏற்படுத்துவதுமில்லை.எந்த உடனடி காரணமும் இன்றி, இரவுகளில் கண் விழிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக நோய்கள் பெருகிவருகின்றன. இரவுத் துாக்கம் தள்ளிப்போவதற்கும், நோய்க்கும் நேரடித் தொடர்பு உண்டு. தவறான வாழ்வியல் முறையால் தான் இது ஏற்படுகிறது.இரவு துாக்கம் தள்ளிப்போவதற்கு, உடல் பிரச்னையும், மனக்கவலையும் காரணம் என நினைக்கிறோம். இது முழு உண்மை அல்ல. உறக்கத்தைத் தள்ளிப்போடும் ஒவ்வொரு நிமிடமும், பெரிய நிறுவனங்கள் பலகோடி ரூபாய் வருமானம் பார்க்கின்றன. இது தான் உண்மை.இரவு சந்தையில்தான், நினைத்துப் பார்க்க முடியாத அளவு வியாபாரம் நடக்கிறது. இது, முழுக்க முழுக்க டிஜிட்டல் சந்தை. அதிகரித்துவரும், 'காஸ்ட் ஆப் லிவிங்' மற்றும் குடும்ப பணச்சுமையை சமாளிக்க, பிடிக்காத வேலை என்றாலும் செய்தாக வேண்டும். குறைந்தது, 10:00 மணி நேரமாவது உழைக்க வேண்டும். டார்கெட்டை எட்ட வேண்டும்.மன உளைச்சல் தரும் வேலையை முடித்து, வெளியே வந்தால், நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டும். சோர்வுடன் வீடு திரும்பியதும், 'டிவி-' என்ற மாய உலகில் விரியும் காட்சிகளில் மயங்குகின்றனர் அல்லது ஸ்மார்ட்போனில் மூழ்கி விடுகின்றனர். சமூக வலைதள உலகத்துக்குச் சென்றுவிட்டால், பிரத்யேக வேடம் தரித்து ஒன்றிவிட நேர்கிறது.இரவு உணவு முடித்து, திண்ணையில் நண்பர்களுடன் அரட்டையடித்து உறங்கச் சென்றது அந்த காலம். நேற்றைய திண்ணை, இன்றைய, சமூக வலைதளம் ஆகியுள்ளது. மவுன உரையாடலில் நேரம் போவதே தெரிவதில்லை. நள்ளிரவைத் தாண்டிய சாட்டிங்குக்குப் பின், 'குட்மார்னிங்' சொல்லி படுக்கையில் விழுகின்றனர். உறங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென எழுந்து, 'முகநுாலில் பதிவேற்றிய போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ்... வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா' என தேடுகின்றனர். இதை, 'கம்பல்சிவ் பிகேவியர்' என்ற மனநலப்பிரச்னை என்று வரையறுத்துள்ளனர். இதுதான், 'கண்டிஷனல் இன்சோம்னியா' என்ற துாக்கமின்மை நோயாக மாறுவதாக கணித்துள்ளனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். சமூக வலைதளங்களுக்கு, மனிதன் அடிமையாகி வருவதையே இது காட்டுகிறது.உடலுக்குள், மன சுழற்சிக் கடிகாரம் இருக்கிறது. உதயத்தின்போது எழுந்து உற்சாகமாக வேலைசெய்வதும், சூரியன் மறைந்ததும், இரவு உணவை முடித்து உறங்கச் செல்வதும்தான் இயற்கையோடு இயைந்த வாழ்வு. ஏன் சூரிய வெளிச்சத்தில் மட்டும் இயங்க வேண்டும் என்பதற்கு அறிவியல் ரீதியான விளக்கமும் உண்டு. துாக்கம் தள்ளிப்போவதை கண்டிப்பாக கவனியுங்கள். அதிலிருந்து விடுபட முயலுங்கள்.- ஜோ.ஜெயக்குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !