அந்துமணி பதில்கள்!
* கே. சிவனேசன், சென்னை: மும்மொழிக் கொள்கை, சரி என்கிறேன்... தங்கள் கருத்து என்ன?சரி தான்; அதைவிட ஐந்து மொழிக் கொள்கை, இன்னும் உதவும்! ஜெர்மன், பிரெஞ்ச் இன்னும் பயன்பாடு உள்ளதாக இருக்கும்... அவை, உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறதே!அஜித், சென்னை: ஞாபக மறதி... யாருக்கு வரம், யாருக்கு சாபம்?கடன் வாங்கிய முதலாமவருக்கு வரம்... கொடுத்தவருக்கு சாபம்!ஆர். ஜவகர் பிரேம்குமார், பெரியகுளம்: ஆளுவோருக்கு சுகவீனம் என்றால், அரசு மருத்துவமனைகளை விட்டு, 'அப்பல்லோ' போன்ற மருத்துவமனைகளை நாடுகின்றனரே... இது ஏன்?அரசு மருத்துவமனைகள் மீது உள்ள, 'நம்பிக்கை' ஒன்றே காரணம்! அன்றைய காங்., அமைச்சர், கக்கன் போன்றவர்கள் இல்லையே, இன்றுள்ள ஆளுவோர்!எஸ்.ஏ. மாரப்பன், கோவை: என் நண்பனின் மகன், பத்திரிகை நிருபராக ஆசைப்படுகிறான். என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்? நிறைய இருக்கிறது! முதலில், தமிழில், தவறு இல்லாமல் எழுத பழகிக் கொள்ள வேண்டும்... அதிலும், 'ழ' பயன்பாடு மிக முக்கியம்! 'ழ'விற்கு பதில் 'ள'வை பயன்படுத்தி விடக் கூடாது!ஆர். சரவணன், சிவகாசி: ஆங்கிலத்தை, தபால் மூலம் படிக்க முடியுமா?ஓ தாராளமாக! இதன் மூலம் அம்மொழி பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் மட்டுமே படிக்க முடியும்; சரளமாக பேச வராது. 'பிரிட்டிஷ் கவுன்சில்' போன்ற கல்வி நிறுவனங்களில் நேரில் படித்தால், ஆங்கில உரையாடலில் வெளுத்துக் கட்டலாம்!* ஆ. நாகராஜன், மேட்டூர்: தமிழகத்தில் மதுவிலக்கு சட்டம் கொண்டு வந்தால், வெற்றி கிடைக்குமா?ம்ஹும்! இதற்கு, ஒரு நாட்டில் கூட வெற்றி கிடைக்கவில்லை. இச்சட்டம், அமெரிக்காவில் கூட படுதோல்வி அடைந்தது. சுவிட்சர்லாந்திலும் அதேதான். நம் மாநிலத்திலும் முடியவே முடியாது!எஸ். பேபி, திருப்பூர்: நீங்கள் மிக நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்தால், கேள்விகளுக்கு யார் பதில் சொல்வர்?ஒரு மாதத்திற்குரிய கேள்வி - பதில் முடித்து விட்டேன்! 'டாப்பிக்கல்' ஆக ஏதேனும் கேள்வி வந்தால், அலுவலகத்திலிருந்து, தொடர்பு கொள்வர்! அலைபேசி தான் இருக்கிறதே... அதில், பதிலைக் கூறி விடுவேன்; அச்சிட உடனே சேர்த்து விடுவர்!