உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

நண்பர் ஒருவரின் அக்கா மகன், எட்டாம் வகுப்பு படிக்கிறான்... வகுப்பில் முதல் மூன்று இடத்திற்குள் வரும் அளவில் நன்கு படிப்பான்; திடீரென, அவனுக்கு படிக்கும் திறன் குறைந்தது. வகுப்பில், துாங்கித் துாங்கி வழியவே, பெற்றோரைக் கூப்பிட்ட வகுப்பாசிரியர், பையனை ரகசியமாக கண்காணிக்கக் கூறியிருக்கிறார்.பையனின் அப்பாவிற்கு ஊர் ஊராக செல்லும் வேலை... மாதத்தில் ஒரு வாரம் வீட்டில் இருப்பதே பெரிது. அதனால், அவரால் பெயரளவுக்கு கூட மகனை கவனிக்க இயலாது.அம்மாவுக்கோ, இரவு - பகல் என மாற்றி மாற்றி வரும், 'மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன்' பணி. போதாக்குறைக்கு ஒன்றரை வயது கைக் குழந்தை... குழந்தையை கவனித்துக்கொள்ள வயதான ஒரு ஆயா...குடும்பத்தில் மொத்தமே இவ்வளவு பேர் தான்!கீழும், மாடியுமான தனி வீட்டில் குடியிருக்கின்றனர். பையனுக்கு மாடியில் தனி ரூம்!இவர்கள் வீட்டுக்கு அடுத்ததும், தனி வீடு. பையனின் வீட்டு அமைப்பு, முதல் மாடியிலிருந்து அடுத்த வீட்டை பார்க்கும் அமைப்பில் ஜன்னல் எதுவுமே கிடையாது.கம்மிங் பேக் டு தி பாயின்ட்... பையனின் அம்மா முதல் வேலையாக கொஞ்ச நாள் இரவு, பணி வேண்டாம் எனக் கூறி, அனுமதி பெற்று, பையனை ரகசியமாய் கண்காணிக்கத் துவங்கியுள்ளார். இரவு, 9:00 மணி வரை படித்து விட்டு, நல்ல பையனாக லைட்டை அணைத்து பையன் துாங்கச் செல்வதை கவனித்த அம்மாவுக்கு திருப்தி! ஆனால், இதற்கு மேல் தான் சிறுவனின், 'சில்மிஷம்' ஆரம்பமாகிறது என்பது அந்த தாய்க்கு தெரியவில்லை!ஒரு வாரத்திற்கு பின், மீண்டும் பள்ளியிலிருந்து அழைப்பு... திரும்பவும், பையன் துாங்கி வழிகிறான் என்று புகார் செய்திருக்கிறார், வகுப்பாசிரியர்.இரவு, ஒன்பது மணிக்கு மேல் பையன் அப்படி என்ன தான் செய்கிறான்... பூனை போல நடந்து மொட்டை மாடிக்கு சென்று, அங்கு அடர்த்தியாக உள்ள மரத்தில், சாய்ந்தபடி இருக்கும் மரக்கிளையில் பதுங்கி, பக்கத்து வீட்டை நோட்டம் விடுகிறான். பையன் வீட்டுப் பக்கம் ஜன்னல் ஏதும் இல்லாததால், யாரும் தம் வீட்டு பெட்ரூமை பார்க்க, 'சான்ஸ்' இல்லை என நினைத்து, அடுத்த வீட்டில் வசிக்கும் நடு வயது தம்பதியர், காற்றுக்காக, ஜன்னலை திறந்து வைத்து, லைட்டை, 'ஆப்' செய்யாமலே, 'தாம்பத்யத்தில்' ஈடுபட்டுள்ளனர்.இதை ஒவ்வொரு நாளும் கண் கொட்டாமல் பார்த்துள்ளான், சிறுவன்.வகுப்பாசிரியர் புகார் செய்த அன்று இரவு, 'குரூப் ஸ்டடி' என்ற பெயரில், வகுப்பு தோழர்கள் இருவர், இவன் வீட்டுக்கு வந்துள்ளனர்.'சரி... குழந்தைகள் படிக்கட்டும்...' என நினைத்த தாயார், இரவு, 10:00 மணி அளவில் சிறுவர்கள் குடிப்பதற்காக, டீ போட்டு, மாடிக்கு எடுத்துச் சென்று இருக்கிறார்... மூவரையும் அறையில் காணவில்லை.டீயை அங்கேயே வைத்து விட்டு ஓசைப்படுத்தாமல் மொட்டை மாடி சென்று இருக்கிறார். அங்கே, மரக்கிளையில் மறைந்து, 'பலான' சீனை மூவரும் காண்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.வளரும், 'டீன் ஏஜ்' பிள்ளைகள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள் பெற்றோரே...இந்த சம்பவத்தை கூறி முடித்ததும், இதே போன்ற ஒரு சம்பவத்தை கூறினார் இன்னொரு நண்பர்...'நான், 9ம் வகுப்பு படித்த நேரம்... அப்போ, சென்னை, மந்தைவெளியில் குடி இருந்தோம். இரண்டு தெரு தள்ளி, அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் குடியிருந்தான், என் வகுப்பு தோழன். மூன்று அடுக்கு மாடி வீடு அது!'மூன்றாவது அடுக்கில் உள்ள ஒரு வீட்டுக்கு, புது மண ஜோடி ஒன்று குடி வந்தது... அந்த ஜோடியின் பெட் ரூம் ஜன்னலைத் திறந்தால், கண்ணுக்கெட்டிய துாரம் வரை வேறு வீடுகள் கிடையாது; அதனால், அவர்கள் ஜன்னலை திறந்தே வைத்து இருப்பர்.'இரண்டாவது தளத்தில் இருக்கும் என் வகுப்புத் தோழன், மொட்டை மாடியில் காற்று வாங்கியபடியே படிப்பதாக வீட்டில் கூறி, அங்கு சென்று விடுவான். ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும், மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரை தாண்டி, அந்த ஜோடிகளின் பெட்ரூம் ஜன்னல் சன் ஷேடில் இறங்குவான்.'மிகவும் அபாயகரமான இறக்கம் அது! கரணம் தப்பினால் மரணம் தான். என்ன செய்வது... 'டீன் - ஏஜ்!' இறங்கியவன்; அப்படியே படுத்து, சன் ஷேடின் வெளியே தலையை மட்டும் தொங்கப் போட்டு அறையினுள் நடப்பதை எல்லாம் பார்ப்பான்.'இப்படி கூட நடக்கும் என்று யார் தான் எதிர்பார்ப்பர்... இந்த தரிசனம் பார்க்க என்னையும் ஒரு நாள் கூப்பிட்டான்; தலைக்கு மேலே கையை துாக்கி வணங்கி, அவனை அனுப்பி வைத்தேன்.'இப்போது கூட வெளியூர் சென்று தங்கினால், ஜன்னல் திரையை சோதனை செய்து, இழுத்து இழுத்து விடுவேன்... ஏன் வாயிற்கதவு சாவித்துளையை கூட சாக்ஸ் அல்லது துண்டால் அடைப்பேன். 'ஏன் இப்படி செய்றீங்க?'ன்னு என் மனைவி கேட்பாள்... என்னத்த சொல்றது... பேச்சை மாற்றி சமாளிப்பேன்...' என்று முடித்தார்.'இதையும் கேட்டுக்கங்க...' என, மற்றொரு நண்பர் ஆரம்பித்தார்...'சென்னையில் பிரபலமான பெண்களின் உள் ஆடைக் கடை அது... அதுல உள்ள, 'பிட்டிங் ரூம்' ஒண்ணுல, அந்தக் கடையில வேலை பார்க்கிற பையன், சிறு துளை போட்டு வச்சுட்டான்.'உங்களுக்குத் தான் தெரியுமே... பல ஷோரூம்களிலும் 'பிட்டிங் ரூம்'கள் அடுத்தடுத்து இருக்கும்; இரு ரூம்களுக்கு ஒரே தடுப்பு தானே இருக்கும்... 'பிட்டிங்' பார்க்க பெண்கள் அந்த அறைக்குள் நுழையும் போது, இவன் பக்கத்து அறைக்குள் புகுந்து, துளை வழியே பார்ப்பானாம்... பெண்களுக்கு எப்போதுமே தற்காப்பு உணர்வு அதிகமல்லவா... ஒருநாள், இதை பார்த்து விட்டாள், ஒரு பெண். 'அறைக்கு வெளியே வந்து கூச்சல் போட, பக்கத்து அறையை தட்டினால், இவன் வெளியே வரவே இல்லை. பெரிய போராட்டத்திற்கு பின் வெளியே இழுத்து வந்தனர். போலீசுக்கு போனால் பப்ளிசிட்டி ஆகிவிடும் - என்று நாலு தட்டு, தட்டி அனுப்பி விட்டனர்...' என்று முடித்தார்.வீடோ, கடையோ, 'டீன் -ஏஜ்' பையன்களோ... எச்சரிக்கை தேவை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !