அந்துமணி பா.கே.ப.,
பா - கேசென்னை, கல்லுாரி ஒன்றில், 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' படிக்கும் அந்துமணி வாசகி ஒருவர், என்னை சந்திக்க, அவ்வப்போது, அலுவலகம் வருவார்.கடந்த முறை வந்தபோது, 'கொரோனா' தொற்று காரணாக, கல்லுாரிகள் இயங்காததால், புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள விரும்புவதாக, என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தார். அப்போது, அருகிலிருந்த லென்ஸ் மாமா, புகைப்பட கலையை கற்றுத் தருவதாக, தானாக முன் வந்தார். வாசகியும் அதை ஏற்று, லென்ஸ் மாமாவிடம் அக்கலையை கற்று வந்தார்.வழக்கம்போல், அன்றும் அலுவலகம் வந்திருந்தார், வாசகி. லென்ஸ் மாமா வர தாமதமானதால், உதவி ஆசிரியர் ஒருவரின், 'கம்ப்யூட்டர்' முன் அமர்ந்து, 'மணி... உனக்கு நான் கம்ப்யூட்டர் பயன்பாட்டை பற்றி சொல்லிக் கொடுக்கட்டுமா...' என்றார்.'கரும்பு தின்ன கூலியா...' என, சம்மதித்தேன். 'கூகுள்' வலைதளத்துக்குள் சென்று, எப்படி தகவல்களை திரட்டுவது என்று, பாடம் எடுக்க ஆரம்பித்தார்.அப்போது, 'இந்த, 'கொரோனா' வந்தாலும் வந்தது, தினம் ஒரு சட்டம் போட்டு கொல்லுறாங்கப்பா... ரோடுல ப்ரீயா நடமாட முடியல... போலீஸ்காரங்க ஏக கெடுபிடி செய்யிறாங்க... இதனாலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்படறது. இதையெல்லாம் கடந்து வருவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது...' என்று அலுத்தபடி, வந்து அமர்ந்தார், மாமா.'ஏன் மாமா... அலுத்துக்கறீங்க. அவங்க கடமையை செய்யிறாங்க. நாமளே சட்டத்தை மதிக்கலேன்னா எப்படி? வெளிநாடுகள் எங்காவது சென்றால், அங்குள்ள சட்டத் திட்டங்களுக்கு பணிந்து நடந்து கொள்ள மாட்டீரா... நாம் எவ்வளவோ தேவலை. சில வெளிநாடுகளில் இருக்கும் சில சட்டங்கள், விசித்திரமாக இருக்கிறது தெரியுமா?'கூகுளில், 'உலக நாடுகளின் விசித்திர சட்டங்கள்' என்ற, 'சைட்'டுக்கு சென்று பாருங்கள். 'இதுக்கெல்லாமா சட்டம் போடுவர்' என்று தோன்றும்...' என்று கூறிய வாசகி, 'கம்ப்யூட்டரில்' அந்த, 'சைட்'டை, 'ஓபன்' செய்து, காட்டினார். ஆங்கிலத்தில் இருந்ததால், வாசகியே படித்து, தமிழில் கூறினார். அது:* வட அமெரிக்காவில், அரிசோனா மாநிலத்தில், கள்ளிச்செடிகளை வெட்ட அனுமதில்லை* தாய்லாந்தில், சட்டை போடாமல் திறந்த மார்புடன், வாகனங்களை இயக்கக் கூடாது* ஆஸ்திரேலியாவில், புறாக்களை பிடிக்கவோ, கொல்லவோ அனுமதியில்லை. மீறினால், 6,000 ரூபாய் அபராதம்* ஸ்விட்சர்லாந்தில், இரவு, 10:00 மணிக்கு மேல், மாடியில் வசிப்பவர்கள், 'டாய்லெட்'டை சுத்தம் செய்தல் கூடாது. கீழ் வீட்டுக்காரர், 'ரிப்போர்ட்' செய்தால், தண்டனை நிச்சயம்* கென்யா மற்றும் அரபு நாடுகளில், நடுத்தெருக்களில் வாய் சண்டையோ, மிரட்டல், உருட்டலோ செய்தால், தண்டனை உண்டு* தென் அமெரிக்காவின் மெக்சிகோவில், கடந்த பல ஆண்டுகளாக காற்று மிகவும் மாசு பட்டுள்ளது. இதை சமாளிக்க, ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு சனிக்கிழமையில், வாகனங்களை இயக்க தடை உள்ளது* இலங்கையில், புத்தரை முன்னிலைப்படுத்தி, 'செல்பி' எடுப்பது குற்றம். புத்தரை கையில் பச்சை குத்திக்கொள்ள கூடாது* மடகாஸ்கர் தீவில், கர்ப்பிணி பெண்கள், தலையில் தொப்பி அணியக் கூடாது* அமெரிக்காவில் , 'பிங்கோ' என்ற சூதாட்ட விளையாட்டை, தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கு மேல் விடையாட தடை; மீறினால் தண்டனை* எகிப்தில், ஓட்டு போடவில்லை என்றால், அபராதம் மற்றும் சிறை தண்டனை; ஆண்கள், 'பெல்லி டான்ஸ்' ஆட அனுமதியில்லை * பிரான்சில், கார் ஓட்டும்போது, சிகரெட் சாம்பலை கொட்டும், 'ஆஷ்ட்ரே' அருகில் இருப்பது குற்றம்; ரயிலினுள் ஆணும், பெண்ணும் முத்தம் கொடுத்துக் கொள்ளக் கூடாது. ஸ்டேஷனில் ரயில் வரும் முன், அதுவும், வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், முத்தம் கொடுக்கலாம்; இதுதவிர, வளர்ப்பு பிராணியாக பன்றியை வளர்க்கலாம். ஆனால், அவற்றிற்கு, நாட்டின் பிரபல தலைவர்களின் பெயர்களை சூட்டுவது குற்றம்* ஜெர்மனியில், ஹைவேயில் பயணிக்கும்போது, எரிபொருள் தீரக்கூடாது. அப்படி தீர்ந்து வண்டி நின்றால் தண்டனை* சூடானில், கற்பழிக்கப்பட்ட பெண், நடு வீதியில் வைத்து கொல்லப்படுவாள். பின் தான், கற்பழித்தவருக்கு தண்டனை* துருக்கியில், பண நோட்டுக்களை பாழ்படுத்தினால், தேசிய கொடியை பாழ்படுத்தியதற்கு சமமான குற்றமாக எடுத்துக்கொள்ளப்பட்டு தண்டனை வழங்குவர்* மொராக்கோ, ஒரு காலத்தில், அமெரிக்காவுக்கு அடுத்து, பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நாடாக இருந்தது. இப்போது, அங்கு பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால், தண்டனை உண்டு. ருவாண்டாவில், தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், ஆறு மாத தண்டனை. கென்யாவிலும், பிளாஸ்டிக் பயன்படுத்தினால், 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் அல்லது நாலு ஆண்டு சிறை தண்டனை உண்டு.பஒரு நகரத்தில் உள்ள, நட்சத்திர ஹோட்டலின் ஓர் அறையில், 'உடல் பருமன் குறைய ஆலோசனை சொல்லப்படும். கட்டணம், 100 ரூபாய்' என்று, எழுதி வைத்திருந்தனர். கட்டணத் தொகை, 100 ரூபாயை கட்டி விட்டு, அந்த அறைக்குள் நுழைந்தார், ஒருவர்.அறையின் கதவு பூட்டப்பட்டது. விளக்கு அணைக்கப்பட்டது. மீண்டும் வெளிச்சம் வந்தபோது, அறையின் பின்புறமிருந்து ஓர் இளம்பெண், அரை நிர்வாணமாக உள்ளே நுழைந்தாள். அவளைப் பார்த்ததும், அந்தப் பெண்ணை தொட, இவர் முயன்றார். அறைக்குள்ளேயே வட்டமாக ஓடத் துவங்கினாள், அந்தப் பெண். இவரும் விரட்டத் துவங்கினார். வியர்க்க விறுவிறுக்க அவர், ஓடிக்கொண்டே இருந்தார்.முப்பது சுற்று முடிந்ததும், அறையின் விளக்கு அணைக்கப்பட்டது. ஒலிபெருக்கி மூலம், ஓர் அறிவிப்பு கேட்டது. 'இதே வேகத்தில் தினமும், 30 சுற்று ஓடினால், உங்கள் பருமன் நிச்சயம் குறையும்...'நொந்து போனவர், மீண்டும் வெளிச்சம் வந்தபோது, அறையை திறந்து வெளியே வந்தார். அந்த ஹோட்டலை சுற்றி வந்தபோது, இன்னொரு இடத்திலும் ஓர் அறிவிப்பு இருந்தது.'உடல் பருமனை குறைக்க, சிறப்பு ஆலோசனை சொல்லப்படும். கட்டணம், 200 ரூபாய்...''இதுவும் என்ன என்று பார்த்து விடலாம்...' என்று, உள்ளே நுழைந்தார், அவர்.உடனே, விளக்கு அணைந்தது. விளக்கு எரிந்தபோது, அங்கே, 90 வயது கிழவி நின்று கொண்டிருந்தார். கிழவி, இவரை நெருங்கி வந்தார். இவர், ஓடத் துவங்கினார்.அப்போது, 'இப்படி தினமும் மிக வேகமாக ஓடினால், விரைவில் உடல் பருமன் குறையும்...' என்று, ஓர் அறிவிப்பு வந்தது.எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.