உள்ளூர் செய்திகள்

பிடிச்சு வைச்சா பிள்ளையார்!

செப்., 18 விநாயகர் சதுர்த்திபசுவின் சாணம் அல்லது மஞ்சளை கையில் ஒரு பிடி பிடித்து, இலையில் வைத்து விட்டால் போதும்; அங்கே, பிள்ளையார் எழுந்தருளி விடுவார். இதில், பசுஞ்சாண பிள்ளையார், நோய் தீர்ப்பவர். பிள்ளையாரின் தாய் பார்வதி தேவி தான், முதன் முதலில் மஞ்சள் பிள்ளையாரை உருவாக்கியவள்.தங்களுக்கு பிடித்த அலங்காரப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் தருவர், பெண்கள்.பார்வதி தேவிக்கு மஞ்சள் என்றால் உயிர். அவள், மஞ்சள் முகத்தவள், மஞ்சள் நிறத்தவள். அம்மன் கோவில்களில் மஞ்சள் காப்பு, மஞ்சள் நீராட்டு என்ற சடங்குகள் நடப்பது, இதனால் தான்.கிராமத்து பெண் குழந்தைகள் இரண்டு பேர் எதிரெதிரே நின்று, கையை உயரமாகத் துாக்கி இணைத்து நிற்பர். அந்த கைகளுக்கு இடையே நான்கைந்து குழந்தைகள் புகுந்து செல்வர். 'மாக்காப்பு மஞ்சக்காப்பு பூக்காப்பு புள்ளையார் காப்பு புடிச்சா காப்பு...' என்று பாடிக் கொண்டே, 'புடிச்சா காப்பு' என்று சொல்லும் போது, எந்தக் குழந்தை அவர்களுக்கு இடையே வருகிறாளோ, அவளைப் பிடித்துக் கொள்வர்.இப்படியாக, ஒவ்வொரு குழந்தையாகப் பிடிப்பர். எந்தக் குழந்தை கடைசி வரை பிடிபடாமல் இருக்கிறாளோ, அவளே வெற்றி பெற்றவளாக அறிவிப்பர்.விளையாட்டுகளில் கூட, ஆன்மிகத்தை புகுத்தினர், நம் முன்னோர். குறிப்பாக, யானை முகத்தோனான பிள்ளையார், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தெய்வம். எனவே, அவரை முன்னிலைப்படுத்தி, கிராமத்து ஜனங்கள் இந்த விளையாட்டை, தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளனர்.'பிடித்து வைத்தாலே பிள்ளையார்' என்ற கருத்து, இதில் வலியுறுத்தப்படுகிறது. இதில், இன்னொரு விசேஷம் என்னவென்றால், பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிய வழிபாடாக உள்ளது. 10 ரூபாய்க்கு மஞ்சள் துாள் வாங்கிப் பிடித்து வைத்தால் போதும். அங்கே பிள்ளையார் எழுந்தருளி விடுவார். அதையும் விட எளிமையாக, தொழுவத்தில் இலவசமாக கிடைக்கும் சாணத்தை பிடித்து வைத்தால் போதும். பிள்ளையார் வந்து அமர்ந்து விடுவார். தனக்கு ஒரு பாதுகாவலர் வேண்டுமென நினைத்தாள், பார்வதி தேவி. தன் உடலில் இயற்கையாகவே இருக்கிற மஞ்சளை வழித்து, ஒரு பிடி பிடித்தாள். அந்த உருண்டைக்கு உயிர் கொடுக்க, அழகான வாலிபனாக உயிரெடுத்தது.தாய், தந்தை இணைப்பின்றி யானை முகத்துடன் பிறப்பவரால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் என்ற வரத்தைப் பெற்றவன், கஜமுகாசுரன்.சிவனுக்கு வேறு வழி தெரியவில்லை. பார்வதி கோபப்படுவாள் என்று தெரிந்தும், அவள் உருவாக்கிய பிள்ளையிடம் வம்பிழுத்து, தலையை வெட்டி விட்டார். வடக்கு நோக்கி படுத்திருந்த யானையின் தலையை வெட்டி, இந்தக் குழந்தைக்கு பொருத்தி விட்டார்.கஜமுகாசுரனை கொல்ல, தன் பிள்ளையை அனுப்பினார். ஆக, முதல் மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்தவள், பார்வதி என்பது உறுதியாகிறது.எது நமக்கு பிடிக்கிறதோ, அதை வைத்தாலே போதும். ஏன், இரண்டு அருகம்புல் போதும். பிள்ளையார் ஏற்றுக் கொள்வார்.விநாயகர் சதுர்த்தியன்று, இந்த விஷயங்களை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, பிள்ளையாரை வணங்குங்கள்.- தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !