உள்ளூர் செய்திகள்

உங்களுக்கு தெரியுமா? - நவநாரி குஞ்சரம்!

நவநாரி குஞ்சரம்... பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா! இது, சமஸ்கிருதப் பெயர். நவ என்றால், ஒன்பது. நாரி என்றால், பெண். குஞ்சரம் என்றால், யானை. ஒன்பது பெண் யானை. சரி... இப்படி மொழி பெயர்த்தால் சரியாகப் புரியாதே! அப்படியானால், இது என்ன?சிற்பக்கலையில் இது ஒரு வகை. குறிப்பிட்ட சில கோவில்களில் மட்டுமே இதைப் பார்க்க முடியும். திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோவில்; துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஆதிநாதசுவாமி கோவில் (நவ திருப்பதியில் ஒன்று); திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி பெருமாள் கோவில் ஆகியவற்றில், இந்த சிற்பத்தைக் காணலாம்.இதன் விசேஷம் என்னவென்றால், ஒன்பது பெண்கள், தங்கள் முகத்தில் நவரசத்தையும் காட்டியபடி, யானை போல் வடிவமைக்கப் பட்டிருப்பர்.சாதாரணமாக இந்த சிற்பத்தைப் பார்த்தால், யானை போல் தான் தோன்றும். கூர்ந்து கவனித்தால், அது யானை அல்ல, ஒன்பது பெண்கள், யானையின் வடிவில் தங்களை வடிவமைத்துக் கொண்டுள்ளது தெரிய வரும். நவரசங்கள் என்னென்ன தெரியுமா?முதல் சுவை, சிருங்காரம். அதாவது, ஆழ்ந்த பக்தி அல்லது அன்பை முகத்தில் வெளிப்படுத்துவது. அடுத்தது, ஹாஸ்யம் - மனம் விட்டு சிரிக்கும் பாவனை; மூன்றாவது, கருணை - இரக்க சுபாவமுள்ளவர் என்று முகம் பார்த்தே தெரிந்து கொள்ளுதல்; அடுத்தது, வீரம் - தைரியத்தை வெளிப்படுத்துதல்.ஐந்தாவதாக, பயனகா - முகத்தில் பயத்தைக் காட்டுதல்; அடுத்தது, பிபத்சா - வெறுப்பைக் காட்டுதல்; ஏழாவது, அத்பூதா - ஆச்சரியம் கொள்ளுதல்; எட்டாவது, ரவுத்ரம் - கோபத்தை வெளிப்படுத்துதல்; கடைசியாக, சாந்தம் - அமைதி கொள்ளுதல்.இப்படி நவரச உணர்வையும், தங்கள் முகத்தில் காட்டும் இந்தப் பெண்கள், யானை போல தங்களை வடிவமைத்துக் கொள்ளும் சிற்பக்கலையே, நவநாரி குஞ்சரம். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இந்த குணங்கள் வந்து போகும். எந்த உணர்வு வந்தாலும், யானை போல் வலிமையுடன் இருந்து, அதற்கு காரணமான நிகழ்வை சமாளிக்க வேண்டும் என்பதற்காக, இத்தகைய சிற்பங்கள் உருவாக்கப்பட்டன.இதை கோவில்களில் வைக்கக் காரணம், என்ன தான் நாம் சமாளித்தாலும், இறை சித்தப்படி தான் எல்லாம் நடக்கும். எனவே, இறைவனைச் சரணடைந்து, இந்த குணங்கள் வர காரணமாக எந்த நிகழ்வு வந்தாலும், அதை சமாளிக்கும் ஆற்றலைத் தர வேண்டும் என, வேண்டிக் கொள்ள வேண்டும்.இந்த சிற்பங்கள் இருக்கும் கோவில்களுக்கு சென்று வாருங்கள்; இறைவனை வணங்கி, தெளிவான மனநிலையைப் பெறுங்கள். தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !