துணை நிற்பாள் துர்கா!
ஆக்., 12- துர்காஷ்டமி!மதுராபுரி சிறையில், கிருஷ்ணன் பிறந்த வேளையில், ஆயர்பாடியில் வசித்த நந்தகோபரின் மனைவி யசோதைக்கு, ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமால், கிருஷ்ணாவதாரம் எடுப்பதற்கு முன்னதாக, ஒரு மாயசக்தியை உருவாக்கினார். அவளை, 'மாயா' என்றனர். மாயா தான், யசோதையின் மகளாகப் பிறந்தாள். கிருஷ்ணரின் தாய் தேவகியின் சகோதரன் கம்சன். இவனை அழிப்பதற்கே, கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்தது. தன் தந்தை வசுதேவரிடம், கிருஷ்ணர்,'என்னை ஆயர்பாடியில் விட்டுவிட்டு. அங்கு, நந்தகோபர் வீட்டிலிருக்கும், பெண் குழந்தையை, இங்கே கொண்டு வந்து விடுங்கள்...' என்று, கட்டளை யிட்டார். வசுதேவரும், அவ்வாறே செய்தார்.அந்தப் பெண் குழந்தை, மதுராபுரி சிறைச்சாலைக்கு வந்து சேர்ந்தது. அப்போது கம்சன் வந்தான். வசுதேவர்- தேவகிக்கு பிறக்கும், எட்டாவது ஆண் குழந்தையால் தான், கம்சனுக்கு அழிவு என்று, விதிக்கப்பட்டிருந்தது. அதனால், பெண் குழந்தையை பார்த்து, கம்சனுக்கு குழப்பம். இருந்தாலும், பயம் காரணமாக, அந்தக் குழந்தையை கொலை செய்ய, அதன் கால்களைப் பிடித்து, தூக்கி வீசி எறிந்தான்.அந்தக் குழந்தை, எட்டு கைகளுடன் ஆயுதங்களைத் தாங்கிய மாயசக்தியாக மாறியது. அவளே, துர்கா என்னும் பெயர் பெற்றாள்.'கம்சனே... உன்னைக் கொல்லப் பிறந்த குழந்தை, வேறு இடத்தில் இருக்கிறது. நான் மாயசக்தி. என்னாலேயே உன்னைக் கொல்ல முடியும். ஆனாலும், நீ, என் கால்களைப் பிடித்து தூக்கி எறிந்தாய். என் திருவடிகளைப் பற்றுபவன், எதிரியாகவே இருந்தாலும், அவனுக்கு அருளாசி வழங்குவேன். அதனால், நீயும் பிழைத்துப் போ...' என்று சொல்லி, மறைந்து விட்டாள்.எதிரிக்கு கூட, கருணை செய்யும் இரக்கமுள்ள தெய்வமே துர்கா. அவளை வழிபட ஏற்ற தினம் துர்காஷ்டமி. நவராத்திரியின் எட்டாவது நாள் வரும் அஷ்டமியை, 'துர்காஷ்டமி' என்கிறோம். துர்கா என்ற சொல்லுக்கு, கோட்டை அல்லது அரண் என்று பொருள். ஆம்...அன்னை துர்கா, தன் பக்தர்களுக்கு துன்பம் வராமல், அரண் போல் நின்று பாதுகாக்கிறாள்.சில கோவில்களில், அவள், விஷ்ணு துர்கையாக, கையில் சங்கு சக்கரம் ஏந்தி இருப்பதையும், பெரும்பாலான கோவில் கருவறை சுற்றுச் சுவரில், வடக்கு நோக்கி, மகிஷாசுரனை காலில் மிதித்தபடியும், சில இடங்களில், சங்கு, சக்கரமின்றி சிவதுர்கையாகவும், காட்சியளிக்கிறாள்.மகிஷாசுரனை அழித்ததால், இவள், மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படுகிறாள்.மகிஷாசுரனை எருமைத்தலை கொண்டவனாக, ஏன் சித்தரித்தனர் தெரியுமா?எருமை மந்த குணம் உடையது. வெயிலோ, மழையோ எதையும் கண்டுகொள்ளாது. அதே நேரம், அதற்கு கோபம் வந்து விட்டால், கண்டபடி பாயும்; எதிரே வருவோரை முட்டித்தள்ளும். மந்த குணமும் ஆகாது; ஆவேசமும் கூடாது. மனிதன், எப்போதும் சுறுசுறுப்புடனும், சோதனைகள் வரும் நேரத்திலும், மன ஒருமையுடனும் இருக்க வேண்டும் என்பதையே, இது சுட்டிக்காட்டுகிறது.எருமை போல், தாவும் மனதை அடக்கி வைக்கணும் என்பதற்காகவே, அவள் எருமையை, காலுக்குள் அடக்கி வைத்திருக்கிறாள். சிங்கம் போல் வீறுநடை போட்டு, வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக, சிம்மவாகனம் கொண்டிருக்கிறாள். துர்கைக்கு மிகவும் பிடித்தது, செவ்வரளி மாலை. சிவப்பு பட்டு சாத்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து, அவளை வழிபடலாம்.துர்காஷ்டமியன்று, இவ்வாறு செய்பவர்கள், அன்னையின் அருளைப் பெற்று, பாதுகாப்பான வாழ்வைப் பெறுவர்.***தி. செல்லப்பா