உள்ளூர் செய்திகள்

நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (9)

தமிழ் திரைப்படத்துறையில், 'மேக் - அப்' கலைக்கு முன்னோடியாக கருதப்படுபவர் ஹரிபாபு. பெரிய ஹீரோக்கள், ஹீரோயின்கள் எல்லாம், அவர் வீட்டிற்கு சென்று, அவரிடம், 'மேக்-அப்' போட்டு, பின், படப்பிடிப்பிற்கு செல்வர். இவர், சிவாஜியின் குடும்ப நண்பர். லட்சுமியும், சிவாஜியும் நடித்த மற்றொரு படம், ஆனந்த கண்ணீர் இப்படத்தின் படப்பிடிப்பின் போது, ஹரிபாபுவின் மகன், நன்னு இறந்து விட்டதாக, செய்தி வந்தது. நன்னு, சிவாஜிக்கு ரொம்ப நெருக்கம். பல வெற்றிப்படங்களுக்கு மூலக்கதை அளித்தவர். 'என்னம்மா, எனக்கு நெருக்கமானவங்க ஒவ்வொருத்தரா போயிகிட்டு இருக்காங்க...' என்று லட்சுமியிடம் வருத்தப்பட்டவர், 'சிவாஜி கணேசனுக்கு தான் நண்பன் போயிட்டான்னு துக்கம். இந்தப்படத்தில் இருக்கிற பிராமணனுக்கு இல்லை. (இப்படத்தில் அவருக்கு அந்தணர் வேடம்) டயலாக் கொணடு வாப்பா. அடுத்த ஷாட் எடுக்கலாம்...' என்று கூறி, ஷாட்டுக்கு தயாராகி விட்டார். சொந்த துக்கத்தினால் கூட, படப்பிடிப்பு பாதித்து விடக்கூடாது என்பதில், தெளிவாக இருந்தார் சிவாஜி.பெண் வேஷம் பற்றிய விஷயத்தில், மற்றொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. போஸ்ட் மார்ட்டம் என்ற சூப்பர் ஹிட் மலையாளப் படத்தை, தமிழில் ரீ-மேக் செய்ய முடிவு செய்திருந்த. தயாரிப்பாளர் பிலிம்கோ காதர் சாதிக், சிவாஜியுடன் மேனா தியேட்டரில் படம் பார்க்க ஏற்பாடு செய்திருந்தார். டைரக்டர் ஏ.ஜெகன்னாதனும் உடன் இருந்தார்.அப்போது, சிவாஜி, எனக்கு போன் செய்து, 'மேனோ தியேட்டருக்கு வா. ஒரு படம் பார்க்கணும். என் உதவியாளராக உனக்கு கான்ஸ்டபிள் ரோல்...' என்றார். அவருடன் உட்கார்ந்து, மலையாளப் படத்தை பார்த்தேன். சிவாஜி, பாதிரியராகவும், போலீஸ் அதிகாரியாகவும் இரட்டை வேடங்களில் நடித்து, பெரிய ஹிட்டான, வெள்ளை ரோஜா படம் தான் அது. படத்தை பார்த்துக் கொண்டடிருந்த போது, 'அந்த கான்ஸ்டபிள் ரோலை நல்லா கவனி. எங்கே எல்லாம், 'இம்ப்ரூவ்' செய்யலாம் என்று பார்த்துக்கோ. குறிப்பாக பெண் வேடம் போடும் சீனை உன்னிப்பாக கவனி...' என்றார் சிவாஜி. 'நாகூர் பக்கத்தில நம்பளோட பேட்டை...' என்ற பாடல் காட்சி. சிவாஜியும், நானும், மாறு வேடத்தில் துப்பறியும் கட்டம். ஹார்மோனியம் வாசிக்கும், கவாலி பாடகராக சிவாஜியும், நடனமாடும் பெண் வேடத்தில் நான். ராஜேந்திரன் எனக்கு, 'மேக்- அப்' போட்டுக் கொண்டிருந்தார். அவரிடம், சிவாஜி, 'நீ கொஞ்சம் தள்ளிக்கோ. நானே இவனுக்கு, 'மேக் - அப்' போடுறேன்...' என்றார். 'இல்லை சார், பரவாயில்லை....' என்று, நான் சொன்னதை சட்டை செய்யாமல், 'மாறுவேடம் போடும் போது, பக்காவாக, 'மேக்-அப்' போட்டுக்கணும். நீ சோம்பல்பட்டு, அரை குறை, 'மேக்-அப்' போடு போதும்ன்னு வந்துவிடுவே. அதனால, நானே, 'மேக்-அப்' போட்டு விடுறேன்...' என்றார்.நிறைய பசை ஒட்டி, தலைக்கு, 'விக்' வைப்பதிலிருந்து நகைகள், காஸ்ட்யூம்கள், அணிவதையெல்லாம் சரி பார்த்தார். அவருக்கு திருப்தியாகும் வரை, 'மேக்-அப்' போட்ட பின்தான், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தோம்.கிட்டத்தட்ட, 300 படங்களுக்கு மேலே நடித்திருக்கிறேன். வெள்ளை ரோஜா படத்தில், கான்ஸ்டபிள் பெருமாள் நாயுடுவாக, பெண் வேடம் போட்டு, நடனம் ஆடும் காட்சி தான், அதிகம் பேசப்பட்டது.இன்றும் பல, 'டிவி' சேனல்களிலே, அந்த பாடல் காட்சி ஒளிபரப்பாகும் போது, பலர் என்னை அழைத்து பாராட்டுவர். அந்த பாராட்டுகள் சிவாஜியையே சேரும்.லட்சுமியிடம் இது பற்றி நான் பேசிய போது, 'கம்ப்யூட்டரிலே நமக்கு ஏதாவது தகவல் வேண்டும் என்றால், 'கூகுளை' தட்டுகிறோம். நடிப்புக் கலையை பொறுத்தவரை, நமக்கு உள்ள ஒரே, 'கூகுள்' தளம், சிவாஜி தான்...' என்றார்.பாசமலர் மற்றும் புதியபறவை படங்களில், ஏதோ, 'ட்ரினிட்டி காலேஜ் ஆப் மியூசி'க்கில் படித்து, டிப்ளமோ வாங்கியவர் போல, நேர்த்தியாக பியானோ வாசித்திருப்பார் சிவாஜி. தில்லானா மோகனம்மாள் படத்தில், சிக்கல் சண்முகசுந்தரம் பாத்திரத்தில், சிவாஜி நாதஸ்வரம் வாசித்த அழகை மறக்க முடியாது. ஆனால், அதற்கு பின், எத்தகைய உழைப்பு இருந்துள்ளது என்பதை, அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். எங்கள் குழுவின் கதாசிரியரும், குடும்ப நண்பருமான, பி.வி.ஒய். ராமன் அன்று பிரபலமாக இருந்த, 'தி மெயில்' பத்திரிகைக்காக, சிவாஜியை பேட்டி காணச் சென்றிருந்தார். 'ராமா, பேட்டி எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம். முதலில், ஒரு கச்சேரி கேட்போம், வா...' என்று, தன் வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கே, சிறுமேடையில், மதுரை என்.பி.என். சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள், நாதஸ்வரம் இசைக்க தயாராக இருந்தனர். அவர்களிடம், 'என் வீட்டில் வாசிக்கிறதாலே அடக்கம், ஒடுக்கமாக வாசிக்கணும்கிற அவசியம் இல்லை, நீங்க தான், இப்போ சிக்கல் சண்முக சுந்தரம் குழுவினர். அதனால், நாதஸ்வரத்தை உறையிலேயிருந்து எடுக்கிறதிலேயிருந்து, சிவாலியை ஊதிப் பார்க்கிறது, ஒருத் தருக்கு ஒருத்தர், 'ரியாக்ட்' செய்யறது எல்லாம், ஒரு பெரிய கச்சேரியில எப்படி செய்வீங்களோ, அதை, நான் பார்க்கணும்...' என்றார் சிவாஜி. இரண்டு மணி நேரம், அவர்கள் வாசித்ததை, கண் கொட்டாமல் கவனித்திருக்கிறார் சிவாஜி. கச்சேரி முடிந்ததும், அவர்களை சாப்பிடச் சொல்லி, சன்மானம் கொடுத்து, அனுப்பி வைத்தார். பின், இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம், 'நாதஸ்வர கச்சேரி காட்சிக்கு நான் தயார்...' என்று சொன்னாராம். இதை, நேரில் பார்த்த ராமன், இன்றும், இது குறித்து பேசும் போது, ஒரு வியப்பு கலந்த மரியாதையோடு தான் பேசுவார். இந்தப் படத்தில், 'நலம் தானா...' பாடல் காட்சியைப் பற்றி, சிவாஜி என்னிடம் பேசிய போது, 'நடிப்புக்கு கண் ரொம்ப முக்கியம்டா... இக்காட்சியில், பத்மினி, தன்னுடைய அபிநயம், அங்க அசைவுகள் மூலம் வெளிப்படுத்திவிட முடியும். ஆனால், என் நிலைமையை பார்... கையில், நாதஸ்வரம். அதை வாசிக்கும் போது, பாதி முகம் மறைந்து விடும். அதனால தான், ரியாக்ஷன் பூராவும், கண்களிலே கொடுத்தேன்...' என்றார். 'நலம் தானா...' என்று பத்மினி கேட்கும் போது, இவர் கண்ணை சிமிட்டுவதும், 'புண்பட்டதால் உன் மேனியில்...' என்ற வரிகளுக்கு, சிவாஜியின் கண்கள் சிவந்து, நீர் கொட்டும் காட்சியை மறக்க முடியுமா?ஏ.ஆர்.எஸ்., நாடக ரசிகர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான பெயர். எங்கள், யு.ஏ.ஏ.,குழுவில் நடிகராக அறிமுகமாகி, பல வெற்றி நாடகங்களில், முக்கிய பாத்திரங்களில் நடித்து, தன் திறமையை நிரூபித்தவர். 1967 முதல் 1975 வரை, எங்கள் யு.ஏ.ஏ., நாடகங்களை திறம்பட டைரக்ட் செய்தவர். திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். எப்போதும், ஸ்டைலாக ஆடை அணிவார்.என்னைப் போல், அவரும் சிவாஜி ரசிகர்; வெறியர். சிவாஜியின் நடிப்பின் நுணுக்கங்களைப் பற்றி நிறைய பேசுவார். சிவாஜியின், முதல் படமான 'பராசக்தி படத்தை, ஏ.ஆர்.எஸ்., முதல் நாள், முதல் காட்சிக்கு சென்று, பார்த்து ரசித்திருக்கிறார். நானும், அவரும் பேசும் போது, 'பராசக்தி படம் பார்த்த அனுபவத்தை மீண்டும் ஒரு முறை சொல்லுங்க, ப்ளீஸ்...' என்று, கேட்பேன். அவர் சொன்னதை, அவர் வார்த்தையில், இங்கே அப்படியே தருகிறேன். ஏ.ஆர்.எஸ்., 'பராசக்தி படம் பார்த்த அனுபவம் குறித்து கூறியது: கடந்த, 1952ல், தீபாவளியை என்னால் மறக்க முடியாத நாள். காரணம், அன்று தான், 'பராசக்தி படம் ரிலீஸ் ஆனது. பாரகன் டாக்கீசில் முதல் நாள், முதல் ஷோ பார்த்த ரசிகர் கூட்டத்தில், நானும் ஒருவன். அந்த நடிகனுக்கு முதல் படமா அது; நம்பவே முடியவில்லை. ரசித்தோம், மகிழ்ந்தோம், பிரமித்தோம்! தமிழ் சினிமாவில், இப்படியெல்லாம் கூட நடிக்க முடியும் என்று, ஒரு பாடமே நடத்தியுள்ளார் பராசக்தி கணேசன்.தூங்கிக் கொண்டிருக்கும் சிவாஜியை, எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுப்புவது தான், அவருக்கு படத்தில் முதல் ஷாட். அப்போது, புரியவில்லை, எழுந்தவர் ஒரு சாதாரண மனிதனல்ல; தன்னுடைய மாபெரும் நடிப்புத் திறமையால், தமிழ்ப்பட சாம்ராஜ்யத்தையே தன் வசமாக்கிக் கொள்ளப் போகிற சக்கரவர்த்தி என்று.எனக்கு, முன் வரிசையில், பிரபல வீணை விற்பன்னர், நடிகர் மற்றும் டைரக்டர் எஸ்.பாலசந்தர் உட்கார்ந்திருந்திருந்தார். புதுமுகம் கணேசனின் நடிப்பை மிகவும் ரசித்த அவர், 'இந்தப் பையனிடம் (அப்போது, சிவாஜிக்கு 23 வயது இருக்கும்) பிரமாதமான காமெடி சென்ஸ், டைமிங் இருக்கு...' என்றார். சிவாஜியின் வசனத்திலும், குணசித்திர நடிப்பிலும், மனதை பறி கொடுத்திருந்த எனக்கு, அப்போது, அவர் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. ஆனால், பிற்காலத்தில், சிவாஜியின் அனாயசமான ஹாஸ்ய நடிப்பை, கலாட்டா கல்யாணம், சபாஷ் மீனா மற்றும் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போன்ற படங்களில் பார்த்து, பிரமித்த போது, எஸ். பாலசந்தரின் கண்ணோட்டம் புரிந்தது.முதல் காதல், முதல் சம்பளம், முதல் பாராட்டு போன்றவைகளுக்கு நிகரானது, நான், முதன் முதலில் அனுபவித்து பார்த்த சிவாஜியின் நடிப்பு.- இப்படி சிலாகித்து கூறினார் ஏ.ஆர்.எஸ்.,- தொடரும்.எஸ்.ரஜத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !