வேண்டுதலை நிறைவேற்றா விட்டால்...
உயிரைக் கொடுத்தேனும், கொடுத்த வாக்கை காப்பாற்றுவர் சிலர்; இன்னும் சிலரோ, தன் பிரச்னை தீர, கடவுளுக்கு நேர்ந்த காணிக்கையையே ஏமாற்றத் துணிவர். அத்தகைய ஒருவரைப் பற்றிய கதை இது: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில், நகிலன் எனும் வியாபாரி வாழ்ந்து வந்தான். வியாபாரத்தின் மூலம், அளவில்லாத செல்வத்தை சேர்த்து வைத்திருந்த போதும், அதிலிருந்து அரைக்காசு கூட, பிறருக்கு ஈயும் எண்ணம் இல்லாதவன்.தானும் அனுபவிக்காமல், அடுத்தவர்களுக்கும் உதவாமல், செல்வம் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தான், நகிலன். ஆனால், அவன் மனைவியோ, செல்வத்தின் மீது பற்றற்றவளாகவும், ஸ்ரீவில்லிபுத்துார் அருகிலிருக்கும் மடவார் வி(வ)ளாகம் எனும் திருத்தலத்தில், வைத்தியநாத சுவாமி எனும் திருநாமத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானிடம் பேரன்பும், பக்தியும் கொண்டவளாக விளங்கினாள்.இத்தலத்து ஈசன், பக்தர்களின் நோய் நீக்கி, அருளுவதில் ஈடு இணை அற்றவர்.பணம் சம்பாதிப் பதிலேயே கவனமாக இருந்ததால், தன் உடலை பேணாமல், நோயில் விழுந்தான், நகிலன். மனைவியின் வேண்டு கோளின்படி, அவளோடு, வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு வந்து, 'சிவபெருமானே... என் நோயை நீக்கு; பெரும் பொருளை காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்...' என, பிரார்த்தித்தான். சில நாட்களிலேயே சிறிது உடல் நலம் தேறவே, மகிழ்ச்சியடைந்த நகிலன், சுவாமிக்காக, சிறிதளவு பொருளை தனியாக எடுத்து வைத்தான்.மேலும், சில நாட்களில், நகிலனின் நோய் முழுவதுமாக குணமானது. அதனால், அவன் மனைவி, 'கோவிலுக்கு சென்று, பிரார்த்தனையை நிறைவேற்றி வரலாம்; வாங்க...' என்றாள்.செல்வத்தின் மீது பற்று கொண்ட நகிலனோ, 'போடி பைத்தியக்காரி... சாமி என்ன, நாம குடுக்குற காசுக்கா ஏங்கி நிற்குது...' என்று, அலட்சியப்படுத்தி, கடவுளுக்கு என, எடுத்து வைத்திருந்த பொருளை தன் பணப் பெட்டியில் வைத்து பூட்டினான். சில மாதங்களில், மறுபடியும் நோய் வரவே, திரும்பவும் பிரார்த்தனை செய்து, சுவாமிக்காக பொருளை எடுத்து வைத்தான், நகிலன். ஆனால், மனதில், 'நோய் நீங்கட்டும்; அதன்பின் எடுத்து வைத்த செல்வத்தை, மறுபடியும் நம் காசோடு சேர்த்து விடலாம்...' என்று எண்ணினான். கடவுளையே ஏமாற்ற எண்ணிய நகிலனுக்கு நோய் தீரவில்லை; அத்துடன், அவனிடம் இருந்த செல்வம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போனது. அந்த ஏக்கத்திலேயே இறந்தும் போனான்.வாக்கு சுத்தமும், மனத் துாய்மையும் இல்லாவிட்டால், இறைவன் நம் கோரிக்கையை நிராகரித்து விடுவார் என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம்.பி.என்.பரசுராமன்அறிவோம் ஆன்மிகம்!கோவில்களில் தீர்த்தம் தருவது ஏன்?வாழ்வியல் ஆதாரங்களில் தண்ணீருக்கு முக்கிய பங்குண்டு. திருக்குறளில் வள்ளுவர், 'நீரின்றி அமையாது உலகு' என்கிறார். கோவிலுக்கு செல்லும்போது நீராடி, துாய்மையோடு செல்கிறோம். உடல் துாய்மையோடு, உள்ளத் துாய்மையும் பெற வேண்டும் எனும் அடிப்படையில், தீர்த்த பிரசாதத்தை கையில் வாங்கி, தலையில் தெளித்து, பருகவும் செய்கிறோம்.