திண்ணை!
'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் வாழ்க்கை வரலாறு நூலான, 'கடல் தாமரை'யில், தி.முத்துகிருஷ்ணன் எழுதியது:'எனக்கு ஒரு ஆசை உண்டு. தினமலர் நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் ஒரு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்; அவருக்கு, நான் மாலை அணிவித்து, மகிழ வேண்டும். அவர், என்னை, 'வாழ்க...' என்று, வாயார வாழ்த்த வேண்டும்...' என்று எம்.ஜி.ஆர்., போற்றி புகழ்ந்து பேசிய, தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின், 32வது நினைவு தினம், வரும் ஜூலை, 21ம்தேதி வருகிறது.எம்.ஜி.ஆர்., எங்கே இப்படி பேசினார், இன்னும் என்னவெல்லாம் பேசினார் என்பதை அறிந்து கொண்டால், அவர், தினமலர் நாளிதழ் மீதும், ஆசிரியர் டி.வி.ஆர்., மீதும் வைத்திருந்த அன்பையும், மரியாதையையும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., மார்ச், 13, 1984ல், தினமலர் நாளிதழின் ஈரோடு பதிப்பை, துவக்கி வைத்து பேசுகையில், 'திருநெல்வேலி பதிப்பு, தினமலர் நாளிதழை படித்த போது, சென்னையில், தினமலர் பதிப்பை கொண்டு வர வேண்டுமென்று, அதன் நிருபரிடம் கூறினேன். சென்னையில் இருந்து, தினமலர் நாளிதழ் வெளி வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களில் நானும் ஒருவன்!'சில நேரங்களில், மற்றவர்களிடம் இருந்து கிடைக்காத தகவல்களை, தினமலர் நாளிதழ் மூலம் தெரிந்து கொண்டதுண்டு. மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக விளங்க வேண்டும் பத்திரிகை. அப்பணியை சிறப்பாக செய்கிறது தினமலர் நாளிதழ்.'நல்ல தமிழில், சீரிய கருத்துகளை கூறும் தினமலர் நாளிதழுக்கு, 'மலர்' என்று பெயர் வைத்தது, மிக பொருத்தமானது. தினமலர் இதழில், குழந்தைகள் பட கதை ஒன்று வெளி வருகிறது. அப்பட கதைகளை, என் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு காட்டி, படிக்க வைக்கிறேன். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே வீரம், ஆண்மை, பண்பு, நேர்மை, அன்பு, இணைப்பு, பிணைப்பு மற்றும் பாசம் ஆகியவற்றை உணர்த்த வேண்டும். 'அந்த வேலையை, தினமலர் நாளிதழ் செவ்வனே செய்கிறது. 'இவ்வளவு படங்களுடன் பத்திரிகை வெளியிடுகின்றனரே...' என, தினமலர் நாளிதழ் மீது, பலருக்கு பொறாமையும், 'நம்மால் இது போல செய்ய முடியவில்லையே...' என்ற இயலாமையில் கோபமும், கவலையும் அடைகின்றனர். மேலும், ஞாயிற்றுகிழமை தோறும் வெளிவரும், வாரமலர் இதழ் பார்த்து, பலரும் அது போல தர ஆரம்பித்துள்ளனர். இப்படி பல சிறப்புகளுடன் வரும், தினமலர் நாளிதழ் எல்லா மாவட்டங்களிலும் வர வேண்டும்...' என்றார், எம்.ஜி.ஆர்.,ஏப்.,14, 1953ல், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விழாவில், தொழில் அதிபர் ஜி.டி.நாயுடு ஆற்றிய உரையிலிருந்து: கடந்த, 1937ல் கிறிஸ்துவ மாநாடு சென்னையில் நடந்தது. மிக பிரமாண்டமான ஊர்வலமாக இருந்ததால், ஆர்வத்தால் உந்தப்பட்டு, அந்நிகழ்ச்சிகளை சலனப்படமாக, சினிமா படமாக எடுத்தேன். மற்றவர்கள் எடுத்த படங்களை விட, என் படம் சிறப்பாக அமைந்திருந்ததால், சென்னை லயோலா கல்லூரி முதல்வர், வரீன், அப்படங்களை, தம் கல்லூரியில் திரையிட்டு காட்டும்படி வேண்டினார். அவரின் அழைப்பை ஏற்று, கல்லூரிக்கு சென்றேன். அதுதான், என் வாழ்க்கையில், முதன்முதலாக கல்லூரியில், காலடி வைத்தது. அன்று, படம் திரையிட்டு காண்பிப்பதற்கு முன், ஒரு நிபந்தனை விதித்து, மாணவர்களை அதற்கு ஒப்புக் கொள்ளும்படி செய்தேன்.அந்த நிபந்தனை என்னவெனில், 'அவர்கள் விரும்பும் மாநாட்டு படத்தை பார்த்த பின், சில கல்விப் படங்களையும் தொடர்ந்து பார்க்க வேண்டும். படம் முடியும் வரை யாரும் எழுந்து போகக் கூடாது...' என்பது!ஆசிரியர்களும், மாணவர்களும் என் நிபந்தனையை ஏற்றனர். மாலை, 5:00 மணிக்கு துவங்கிய படக்காட்சி, நள்ளிரவு, 1:00 மணி வரை தொடர்ந்தது. இடையில் யாரும் உணவு உண்ணக்கூட எழுந்திருக்கவில்லை.நள்ளிரவு, 1:00 மணிக்கு பார்வையாளர்களை நோக்கினேன். கல்லூரி முதல்வரும், ஒரு சில மாணவர்களையும் தவிர, அனைவரும், தம் இருக்கைகளில் தூங்கினர். மேலும், அவர்களை சோதிக்க விரும்பாமல், படக்காட்சியை அத்துடன் முடித்தேன். அன்று தான், கல்லூரி என்றால் என்ன என்று முதன் முதலாக தெரிந்து கொண்டேன்.நடுத்தெரு நாராயணன்