திண்ணை
வ.உ.சிதம்பரனார் எழுதிய, 'திலகர் நினைவுகள்' எனும் கட்டுரையிலிருந்து: என் அரசியல் குரு, லோகமான்ய பால கங்காதர திலகர். என், 21வது வயதில் இருந்து, அதாவது, 1893ம் ஆண்டிலிருந்து, அவருடைய எழுத்தையும், பேச்சையும் படித்தும், கேட்டும் வந்துள்ளேன்.கடந்த, 1914ல், திலகர் உத்தரவின்படி, பூனாவுக்கு சென்று, அவர் வீட்டில் ஒரு வாரம் தங்கினேன். தினமும் காலை, 5:00 மணிக்கு என் அறைக்கு வந்து, தம் அறைக்கு என்னை அழைத்துச் செல்வார், திலகர். இரவு, 10:00 மணி வரை, அவருடன் பேசுவேன். யாராவது அவரை பார்க்க வந்தால், நான், என் அறைக்கு சென்று விடுவேன். வந்தவர் பேசிச் சென்றதும், மீண்டும் என் அறைக்கு வந்து, என்னை, தன் அறைக்கு அழைத்துச் செல்வார்.ஒவ்வொரு நாளும், காலை, பகல், மாலை மற்றும் இரவு வேளைகளில், என்னுடன் அமர்ந்து சாப்பிடுவார்; வீட்டில் உள்ளவர்கள் பழக்கமான பின், அவர்களுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன்.என்னை மகிழ்விப்பதற்காக, ஒருநாள், தம் வீட்டில் சங்கீத கச்சேரி ஏற்பாடு செய்தார். இத்தகைய அன்பும், மரியாதையும், என் மாமனார் வீட்டில் கூட எனக்கு கிடைத்ததில்லை.'தெரிந்து கொள் தம்பி' நூலிலிருந்து: செகந்திராபாத் என்று எழுதுவது தவறு; சிக்கந்தர் + ஆபாத் - சிக்கந்தராபாத் என்பது தான், சரி. காரணம், இது, சிக்கந்தர் ஜா எனும், மூன்றாம் நிஜாமின் பெயரால் விளங்கும் நகரம். இவர் ஆட்சி புரிந்த காலம், 1806. ஐதராபாத்தை கடைசியாக ஆண்டது, ஏழாம் நிஜாம்; நிஜாம் என்றால், உருது மொழியில், கவர்னரை குறிக்கும். முகலாய மன்னர்களின் கவர்னர்களாக விளங்கிய நிஜாம்கள், முகலாய சாம்ராஜ்யம், ஆட்டம் காண ஆரம்பித்த போது, இங்கு ஆட்சியை கைப்பற்றி, மன்னர்களாகி விட்டனர்.'ஒரு கூடை செய்திகள்' நூலிலிருந்து: புகழ் பெற்ற மனிதர்கள், தங்களின் புகழ் பெற்ற நூலை, அவர்களது சிறைச்சாலை வாழ்வின் போது தான் எழுதியுள்ளனர்.செர்வாண்டிஸ் - டான் குவிக்சாட்.ஜவஹர்லால் நேரு - உலக வரலாறு.ஹிட்லர் - எனது போராட்டம். (மெயின் காம்ப்.)ஓ ஹென்றி - தி ஜென்டில் கிராப்ட்டர்.மார்க்கோ போலோ - பயணக்குறிப்புகள்.ஆஸ்கார் ஒயில்டு - புரோபவுண்டீஸ் அண்டு அப்போலோஜியா.'தமிழ்ப்புலவர்கள்' நூலிலிருந்து: யாழ்ப்பாண தமிழ்ப்புலவர்கள் சிலர், ஒரு சமயம், உ.வே.சாமிநாத ஐயரை கண்டு உரையாடியபடி இருந்தனர். அப்போது, ஐயரிடம், 'நீங்கள், மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம், தமிழ் பதங்களுக்கு பொருள் கற்றுக் கொண்டீர்கள்; அவர் பெரிய தமிழ்க்கடல் அல்லவா...' என்று அவர்கள் சொல்லவும், சட்டென்று எழுந்து நின்ற உ.வே.சா., 'என் குருநாதர் இப்போது இல்லயே என எண்ணும் போது, கண் கலங்குகிறது; அவர் பெயரை, நீங்கள் கூறியதை கேட்ட பின்னும், நான் அமர்ந்திருப்பது முறையல்ல; எனவே தான் எழுந்து நிற்கிறேன்...' என்றார்.இவ்வளவுக்கும், மீனாட்சி சுந்தரம் பிள்ளை இறந்து, ஏழு ஆண்டுகள் கடந்திருந்தன.'ரீடர்ஸ் டைஜஸ்ட்' புத்தகத்தில் படித்தது: மகாபாரதத்தில், திரவுபதியை துகில் உரியும் காட்சி, கல்லுாரியில் நாடகமாக நடித்துக் கொண்டிருந்தனர். ஒரே மாதிரி எட்டுப் புடவைகளை ஒன்றாக தைத்து, ஏழாவது புடவை இழுக்கப்பட்டதும், கிருஷ்ணன் உள்ளே நுழைய வேண்டும் என்பது திட்டம்!ஏழாவது புடவை இழுக்கப்பட்டதும், அனைவருக்கும் ஷாக்! காரணம், திரவுபதி வேடமிட்டிருந்த மாணவன் ஜட்டி, பச்சை நிற ஜாக்கெட்டுடன் காட்சி அளித்தது தான்!ஏன், கிருஷ்ணன் காப்பாற்றவில்லையா என்று கேட்கிறீர்களா...யாரோ வேண்டுமென்றே, ஒரு புடவையை அதிலிருந்து நீக்கியிருந்தனர்.நடுத்தெரு நாராயணன்