திண்ணை!
'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து: மன்னார்குடியில், தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று நடந்தது. ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து, பிரசாரம் செய்ய வந்திருந்தார், பட்டுக்கோட்டை அழகிரி. அவர் பேச எழுந்ததும், கூட்டத்திலிருந்து வீசப்பட்ட ஒரு கல், மேடையில் விழுந்தது. அதை பார்த்த அழகிரி, சற்றும் அலட்டிக் கொள்ளாமல், தொடர்ந்து பேசலானார். சற்று நேரத்தில், மீண்டும் ஒரு கல் வந்து விழுந்தது. உள்ளூர் காங்கிரஸ் புள்ளி ஒருவரால் ஏவப்பட்ட, சில விஷமிகள் செய்த திருவிளையாடல் இது. பேச்சை நிறுத்தி, மேடையிலிருந்து இறங்கினார், அழகிரி. அங்கே கிடந்த சில கற்களை பொறுக்கி எடுத்து, மேடைக்கு திரும்பி, மேஜை மீது வைத்தார்.'இந்த ஊர் பழக்கம், எனக்கு இப்போது தான் தெரிகிறது. இனி நீங்கள், என் மேல் கற்களை வீசிக் கொண்டே, என் பேச்சை கேளுங்கள். நானும், பதிலுக்கு உங்கள் மேல் கற்களை வீசிக்கொண்டே உரையாற்றுகிறேன்...' என்றார்.அதன் பின், கூட்டத்திலிருந்து ஒரு கல் கூட வரவில்லை.'கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து: பாமா விஜயம் படத்தின் இயக்குனர், கே.பாலசந்தர். பாட்டெழுத வந்த, கண்ணதாசனிடம், படத்தின் கதையை விளக்கினார்.'ஒரு நடுத்தர குடும்பம். பக்கத்து பங்களாவில் குடியிருக்கும் சினிமா நடிகை, பாமா, தங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வரவேண்டும் என்று விரும்புகின்றனர். அவள் வந்து பார்க்கும்போது, வீடும், தங்கள் வாழ்வும் பணக்காரத்தனமாக இருக்க வேண்டும் என்று, போலி கவுரவத்திற்காக, அனாவசிய செலவு செய்கின்றனர். 'ஆடம்பரத்திற்காக, இரவல் நகை வாங்கி அணிகின்றனர். அதில், வைர நெக்லஸ் தொலைந்து போகிறது. குடும்பத்தினர் எல்லாரும் பதறி துடிக்கின்றனர். இது தான் கதை...' என்றார், பாலசந்தர்.'புரிகிறது. வரவு எட்டணா; செலவு பத்தணா; கடைசியில் துந்தணா...' என்றார், கண்ணதாசன்.'ஆகா... இது தான் கதை. இதையே பல்லவியாக வைத்து பாட்டு எழுதிக் கொடுங்கள்...' என்றார், பாலசந்தர். அப்படி உருவான பாடல், பெரிய, 'ஹிட்' ஆனது!முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து: காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாதுரை வீட்டில், எண்ணெய் கிண்ணம் தயாராக இருந்தது. இடுப்பில் துண்டை கட்டியபடி, எண்ணெய் தேய்த்து குளிக்க வந்தார், அண்ணாதுரை. தான் எடுக்கவுள்ள நல்ல தம்பி படத்தின் கதை சம்பந்தமாக பேச, திடீரென அங்கு வந்தார், என்.எஸ்.கிருஷ்ணன். உடனே, குளியலை கைவிட்டு, வேட்டி, சட்டை அணிந்து, கிருஷ்ணனுடன் புறப்பட காரில் ஏறி விட்டார், அண்ணாதுரை. 'ஏன், எண்ணெய் குளியல் பண்ணவில்லையா... சட்டென்று புறப்பட்டு விட்டீர்களே...' என்று கேட்டார், கிருஷ்ணன்.'ராமர் பட்டாபிஷேகத்திற்கு நாள் பார்த்தார், வசிஷ்டர். அது கூட திடீரென்று நின்று விட்டது. என் எண்ணெய் அபிஷேகம் நின்று போனால் என்ன...' என்றார், அண்ணாதுரை.பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது: என் தந்தை பாரதியார், ஷத்ரியனை போன்று வீர மரணத்தை விரும்பினார்.'போர் முனையிலே முன்னணியில் நிற்பேன். துண்டிக்கப்பட்டு விழுந்த என் சிரசை, பல்லக்கில் வைத்து கொணர்வர். செல்லம்மா... ஜனங்கள் அப்போது, உனக்கு சேனை தலைவனின் மனைவிக்குரிய மரியாதை செய்வர்...' என்பார்.'நரைகூடி கிழப் பருவமெய்தி, கொடுங்கூற்றுக்கு இரையென பின் மடியும் பல வேடிக்கை மனிதரைப் போல, நான் வீழ்வேனென்று நினைத்தாயோ...' என்று, ஒவ்வொரு நாளும் ஸ்நானம் செய்யும்போது, கோபத்துடன், பராசக்தியிடம் கேட்பது போல பாடுவார்.சிறு குழந்தையான என் மனதில் அவரது வார்த்தைகள், பசுமரத்தாணி போல பதிந்தன. நடுத்தெரு நாராயணன்