திண்ணை
வேணு சீனிவாசன் எழுதிய, 'ஹிட்லர்' நுாலிலிருந்து: 'பிரிட்டனும், பிரான்சும் மனித குலத்தின் எதிரிகள். இந்த இரண்டு நாடுகளும், தேச வரைபடத்திலிருந்தே அப்புறப்படுத்த வேண்டியவை. இவைகளை ஒழிப்பதே என் லட்சியம்...' என்ற ரீதியில், தன் கருத்துக்களை கொஞ்சம் கூட மறைக்காமல், மே 10, 1940ல், அறிக்கையாக வெளியிட்டார், ஜெர்மானிய சர்வாதிகாரியான, ஹிட்லர்.பிரான்சுக்கு எதிராக ஒருவர் இப்படி பேசுவதற்கு, மகா துணிச்சல் வேண்டும். அந்த தைரியம், ஹிட்லருக்கும் இருந்தது.இத்தாலியை சேர்ந்த, பெனிட்டோ முசோலினிக்கு எப்போதுமே, பிரான்ஸ் எதிரி தான். ஆனாலும், அவர் கூட ஒளிவு மறைவில்லாமல் தன் பகையை இப்படி வெளிப்படுத்தியது கிடையாது.முசோலினிக்கு எப்போதுமே, ஹிட்லரின் மீது நல்ல அபிப்ராயம் இருந்து வந்தது. 'இவன் தான் புதிய சக்தி, இவன் தான் ஐரோப்பிய நாடுகளின் தலையெழுத்தை மாற்றி எழுதப் பிறந்தவன்...' என்று மகிழ்ச்சி அடைந்தார். ஹிட்லருக்கு உதவி செய்ய காத்திருந்தார்.இதை அறிந்த ஹிட்லர், அவரது உதவியை பிரான்சை தாக்கும்போது பயன்படுத்திக் கொண்டார்.பிரான்சின் மீது படையெடுக்க, இப்போது, கூட்டணியின் பலமும் சேர்ந்தது. அதோடு எதிர்பார்க்காத அளவிற்கு ஆயுதப் பெருக்கமும் கிடைத்து விட்டது. வேறு என்ன வேண்டும், ஜெர்மனியின் முப்படைகளுக்கும் தளபதி, ஹிட்லர் தான்.ஆனாலும், கடற்படை விஷயத்தில் மட்டும், அதிக அக்கறை எடுத்துக் கொண்டார், ஹிட்லர். நீர் வழியாகத்தான் எல்லா தேசங்களும் வர்த்தகத்தை நடத்தி வந்தன. அதை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடிந்தால், நான் வைத்தது தான் சட்டம் என்றாகிவிடும் என, அவர் நினைத்தார்.எதிரி நாடுகளின் கடலை முற்றுகையிட்டாலே போதும், அவர்களுடைய பலத்தில் பாதியை சுருட்டிக் கொண்டதாகி விடும்.இந்த கொடிய யுத்தத்தில், 'யூ - படகுகள்' என்ற நீர்மூழ்கி படகுகளை திறமையாக பயன்படுத்தினார், ஹிட்லர்.நார்வே முதல் இத்தாலி வரையிலான ஐரோப்பிய கண்டம் முழுவதும், இந்த, 'யூ - படகுகள்' எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு கடற்போர் சாகசங்களை நடத்திக் காட்டின.எதற்கும் நிலைகுலையாத பிரிட்டன் பிரதமர், வின்சன்ட் சர்ச்சில், 'போர்க்காலங்களில், ஜெர்மனியின், 'யூ - படகுகள்' என்னை மிகவும் பயமுறுத்தின. இதன் காரணமாக, பல இரவுகள் என்னால் துாங்க முடியாமல் தவித்தேன்...' என்று புலம்பியிருக்கிறார்.ஹிட்லரின் போர்முனை தாக்குதல் திட்டங்கள் மிக துல்லியமாக இருந்தன. அதில் இம்மியளவு கூட பிசகாமல், ராணுவம் கடைப்பிடித்தது. அதனால் தான் மிகப்பெரிய வெற்றிகள் கூட, எளிமையான முறையில் சாத்தியமாகியது.ஜெர்மனி, தன்னை தாக்க வரும் அபாயத்தை மிக தாமதமாக தான் அறிந்தது, பிரான்ஸ். விமானப்படை உஷார்படுத்தப் பட்டு, மிகப்பெரிய ராணுவம் புறப்பட்டது.ஜெர்மானிய ராணுவம், பிரான்சுக்குள் ஓரளவு நுழைந்த பிறகு, முசோலினிக்கு சிக்னல் கொடுத்தார், ஹிட்லர்.புயல் வேகத்தில் பிரான்சுக்குள் ஊடுருவியது, இத்தாலிப் படை. காட்டுத்தனமான வேகம், குலை நடுங்கச் செய்யும் பீரங்கி வெடிச் சத்தம்.இதுநாள் வரையில், கட்டிக்காத்த பெருமைகளை, கலாசாரத்தை, பழமையை, வீரத்தை காப்பாற்றிக் கொள்ள போராடியது, பிரான்ஸ். ஆனால், மே 15, 1940ல், தன் ராணுவ பலத்தை இழந்து, வீரர்கள் பலரை பலி கொடுத்தது.மக்களை பலியாக்கி, பல நுாற்றாண்டு பாரம்பரியம் மற்றும் கலாசார சின்னங்களான கட்டடங்களை தரைமட்டமாக்கி, தோல்வியை சந்தித்தது.பிரான்ஸ் அடைந்த தோல்வி, உலக நாடுகளையே அதிர வைத்தது.'என் வாழ்க்கையில், இதைவிட பேரதிர்ச்சி தரக்கூடிய விஷயம் எதுவும் இருக்க முடியாது...' என்றார், சர்ச்சில்.முதல் உலக யுத்தத்தில், 1918ல், எந்த இடத்தில், ஜெர்மனி தோற்றுப்போய், பிரான்சிடம் அவமானப்பட்டு, கை கட்டி நின்றதோ, அதே இடமான, கம்பெய்ன் என்ற இடம் தான் அது.ஹிட்லருக்கு பெருமை தாங்கவில்லை.'தாய்நாட்டை பழித்தவர்களை பழிக்கு பழி வாங்கி விட்டேன்; தலைகுனிய வைத்து விட்டேன். இதுபோதும், என் நீண்ட நாளைய கனவு நிறைவேறி விட்டது...' என்று பூரித்து போனார், ஹிட்லர்.நடுத்தெரு நாராயணன்