திண்ணை!
டி.என்.இமாஜான் எழுதிய, 'வாழ்வையே மாற்றும் வளமான கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:காமராஜர், முதல்வராக பதவி வகித்த சமயம் அது. காங்கிரஸ் தலைவர் ஒருவரின் சிபாரிசு கடிதத்தை பெற்று, தன் மகனுடன், காமராஜர் இல்லத்திற்கு வந்தார், ஒருவர்.காமராஜரிடம், 'பையன் பி.காம்., படித்திருக்கிறான். இன்னாரிடம் நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் போதும், வங்கி உத்தியோகம் கிடைத்து விடும்...' என்றார்.அந்தப் பையனை தம் அருகில் அழைத்து, 'இனிமேல் எங்கேயாவது வேலை கிடைக்கணும்ன்னு சொன்னால், உன் அப்பாவை அழைத்துப் போகாதே. அவருக்கு, உன் மீதோ, உன் படிப்பிலோ, திறமையிலோ நம்பிக்கை கிடையாதுன்னேன். சிபாரிசு தேடுகிறார். 'நேரே அந்த அதிகாரிகிட்ட போய், படிப்பு, தகுதி எல்லாவற்றையும் தைரியமாக சொல்லு; வேலை தன்னால கிடைக்கும்ன்னேன். இந்த இடம் இல்லேன்னா வேற இடம். தைரியமும், தன்னம்பிக்கையும்தான் வேணும்...' என்றார், காமராஜர்.***ஒருசமயம், பிரதமராக இருந்த நேருவின் அலகாபாத் ஆனந்தபவன் பங்களாவில், காந்திஜி தங்கியிருந்த போது, முகம் கழுவ, ஒரு கோப்பையில் தண்ணீர் எடுத்தார். அது, கை தவறி கொட்டி விட்டது.'அடடா, தண்ணீரை வீணாக்கி விட்டேனே...' என வருந்தினார், காந்திஜி.அந்த சமயம், அங்கே வந்த நேரு, 'ஐயா, இது திருவேணி சங்கமம். மூன்று ஜீவநதிகள் கலக்கும் இடம். இங்கே, ஒரு கோப்பை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான கோப்பைகள் தண்ணீர் வீணானாலும் கவலைப்படத் தேவையில்லை...' என்றார்.அதற்கு, 'ஒரு பொருள் எவ்வளவு தாராளமாக கிடைக்கிறது என்பது முக்கியமில்லை. மனிதன், தன் தேவைக்கு மேல் இயற்கையிலிருந்து எடுத்து பயன்படுத்துவது, திருட்டிற்கு சமம்...' என்றார், காந்திஜி.***கருணாநிதி, முதல்வராக இருந்த சமயம். அழைப்பின்படி, அவரை சந்திக்க அவர் இல்லம் சென்றிருந்தார், போலீஸ் கமிஷனர்.முதல்வரின் அறையில் சென்று சந்தித்தபோது, 'ஏசி'க்கு அருகில் நின்று பேசிக் கொண்டிருந்ததால், கமிஷனருக்கு குளிர் தாங்க முடியவில்லை. நடுங்கியபடியே முதல்வரிடம் பேசிக் கொண்டிருந்தார்.அதைக் கவனித்த முதல்வர், 'என்னய்யா இப்படி உடம்பு நடுங்குது உனக்கு...' எனக் கேட்டார்.அதற்கு, 'ஏசி முன்னாடி நிற்கிறதால நடுங்குது...' என்றார், கமிஷனர்.'கமிஷனருக்கு முன்னாடி, ஏ.சி., தான் நடுங்கணும். 'ஏசி'க்கு முன்னாடி கமிஷனர் நடுங்கக் கூடாதுய்யா...' என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார், கருணாநிதி.- நடுத்தெரு நாராயணன்