உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 43; என் கணவரின் வயது, 45. எங்களுக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது; குழந்தையில்லை. திருமணமானதில் இருந்து கூட்டு குடும்பமாக இருந்து வருகிறோம். எங்களுடன் என் கணவரின் இரண்டு சகோதரிகளின் குடும்பமும் இருந்தது. வீடு நிறைய மனிதர்கள், வேலை என்று எனக்கு மூச்சு முட்டும்.எங்களுக்கு, சிறிது கூட தனிமையே கிடைத்ததில்லை. என்னிடம் பேசுவதற்கு, என் கணவருக்கு நேரமே இருக்காது. என் கணவர், மாலை அலுவலகம் முடிந்து வந்து விட்டால் கூட, அவரது அக்கா, தங்கைகள் மற்றும் மாப்பிள்ளைகள் தேவையை கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். அப்படியே நேரம் கிடைத்து வெளியே சென்றாலும், என் மாமியார், நாத்தனாரின் முகம், அஷ்ட கோணலாகி விடும்.இந்த எட்டு ஆண்டுகளில், நாங்கள் ஒருநாள் கூட தனியாக இருந்ததில்லை. வெளியே சென்றாலும், சினிமாவிற்கு போனாலும் கூட, நாத்தனாரின் பிள்ளைகளையும் அழைத்துச் செல்ல வேண்டும்.என் மாமியாருக்கு, அவரின் பெண்கள் மற்றும் மாப்பிள்ளைகள் கூறுவதே வேத வாக்கு. அவர்களுக்கு பிடித்ததைத் தான் சமைக்க வேண்டும்.திருமணமாகி மூன்று மாதம் கழித்து தான் எங்களின் தாம்பத்யம், ஆரம்பித்தது. இருவருக்குமே ஆரம்பத்தில் உடலுறவு பற்றிய புரிதல் இல்லை. பின், இன்டர்நெட், புத்தகங்கள் மூலம் அறிந்து கொண்டோம். இதற்கிடையில், நாத்தனாரின் கணவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு, அவருடன் அலைவதற்கே, என் கணவருக்கு நேரம் சரியாக இருந்தது. இப்படியே, எங்கள் வாழ்க்கை போனது.இதற்குள், மூன்று ஆண்டுகள் ஓடி விட்டன. எல்லாரும், குழந்தை பற்றி பேச ஆரம்பித்ததும், என் கணவரிடம், 'மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்...' என்ற போது, மறுத்தார். 'தற்கொலை செய்து கொள்வேன்...' என்று மிரட்டியதால், அழைத்துச் சென்றார்.எங்களிடையே தாம்பத்யம் சரியாக நடக்கவில்லை என்றும், சிறுசிறு பிரச்னைகள் மற்றும் வயதும் ஆகி விட்டதால், செயற்கை கருத்தரிப்பு மூலமே, குழந்தை பிறக்கும் என்று கூறினார் மருத்துவர்.இதை, என் மாமியார் ஒத்துக் கொள்ளவில்லை. மேலும், 'இம்முறை மூலம் குழந்தை பிறந்தால், எங்கள் குழந்தை என ஒத்துக் கொள்ள மாட்டேன்...' என்று கூறி விட்டார்; என் கணவரும் இதுபற்றி ஒன்றும் பேசவில்லை.சகோதரிகளுக்கு குழந்தைகள் இருந்ததால், தனக்கு என்று ஒரு குழந்தை வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்தார் என் கணவர். என் நச்சரிப்பு தாங்காமல் தான், என்னுடன் தாம்பத்யம் வைத்துக் கொள்வார்.தற்போது, என் நாத்தனார்கள் இருவரும், வேறு வேறு காரணங்களுக்காக, தனித்தனியாக சென்று விட்டனர். இப்போது, தனக்கென ஒரு குழந்தை இல்லையே என்ற குறை, என் கணவரையும் வாட்டுகிறது; ஆனால், இதை வெளியே கூறுவதில்லை.நானும், என் கணவரும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறோம். எங்களின் தேவைக்கு அதிகமாகவே சம்பாதிக்கிறோம்.எனக்கு ஒரு தம்பி மற்றும் தங்கை உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, குழந்தை பிறந்து நன்றாக உள்ளனர். என் உடன் பிறந்தோர்களிடமோ, என் வயதான தாயிடமோ இவ்விஷயங்களை கூறினால், அவர்கள் கவலைப்படுவார்களோ என நினைத்து, எதையும் நான் கூறுவதில்லை.என் மனதில் உள்ளதை உங்களிடம் கொட்டி விட்டேன். செயற்கை கருத்தரிப்பு மூலமாகவோ, தத்து எடுப்பதன் மூலமாகவோ ஒரு குழந்தையை வாரிசாக்கலாம் என்று என் கணவருக்கு எப்படி புரிய வைப்பது என்று எனக்கு தெரியவில்லை. தாங்கள் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்.இப்படிக்கு,பெயர் சொல்ல விரும்பாத வாசகி.அன்புள்ள மகளுக்கு —தாமதமாய் செய்யப்படும் திருமணங்களில் பல நுட்பமான சிக்கல்கள் உள்ளன. மகன் அல்லது மகள் பருவ வயது எட்டும் போது, பெற்றோருக்கு தாத்தா பாட்டி வயதாகி விடும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உழைக்க, பெற்றோரின் உடல் ஒத்துழைக்காது. பெற்றோரின் வயோதிக தோற்றத்தால், அவர்களை, பெற்றோர் என, பிறரிடம் அறிமுகம் செய்ய பிள்ளைகள் கூசுவர். பிள்ளைகளின் இளம் பிராயத்தில், சகிப்புத்தன்மையுடன், கூடிய பெற்றோரின் இளமையான அன்பு கிடைக்காது.அத்துடன், தாமதமாய் திருமணம் செய்யும் பெண்களின் பிரசவம், சுகப் பிரசவமாய் அமையாது. குழந்தை பெற்றுக் கொள்ள, முழு உடல் தகுதி இல்லாத ஆண் செய்யும் பாவனை, உன் கணவர் செய்வது.தாம்பத்யத்தில் ஆர்வம் உள்ள ஆண், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்வான். உன் கணவருக்கு தாம்பத்யத்தில் ஆர்வம் குறைவு; அதனாலேயே கூட்டுக் குடும்பத்தை சாக்காக கூறுகிறார்.நீ தத்து எடுத்துக் கொள்வதை விட, செயற்கை கருத்தரிப்பு மூலம், குழந்தை பெற்றுக் கொள்வது நலம். செயற்கை கருத்தரிப்பை பற்றிய தவறான எண்ணங்களை, உன் மாமியாரிடமிருந்து களைய, உன் மாமியாரை, செயற்கை கருத்தரிப்பு மைய மகப்பேறு மருத்துவரிடம் அழைத்து சென்று, கவுன்சிலிங் கொடுக்கச் செய்.மருத்துவரிடம் அழைத்து செல்லும் முன், நீயும், உன் கணவரும் நைச்சியமாய் பேசி, மகப்பேறு மருத்துவரை சந்திக்க சம்மதிக்க வைக்கலாம். கவுன்சிலிங்கில், மாமியாரை மட்டுமல்ல, கணவரையும் உட்கார வைக்கலாம்.உன் பிரச்னைகளை, உன் தாய் மற்றும் கூடப் பிறந்தவர்களிடம் பகிர்ந்து கொள்; தப்பேயில்லை. உள்ளக் கிடக்கையைக் கொட்டிவிட்டால், மன இறுக்கம் தீரும். அவர்களும், உனக்கு தேவையான ஆலோசனை வழங்குவர். அவர்களை, உன் மாமியரிடம் பேசக் கூறலாம்.அத்துடன், கூட்டுக் குடும்பத்தின் மீதான வெறுப்பை களைந்தெறி. குடும்ப உறுப்பினர்களிடம் நல்லுறவை பேணு. செயற்கை கருத்தரிப்பு, இயற்கைக்கு புறம்பானது அல்ல என்கிற சிபாரிசை, குடும்ப உறுப்பினர்கள், உன் மாமியாரிடம் தருவர். உன் கணவர், முழு வீரியம் பெற, ஹோமியோபதியில் சிறந்த மருந்துகள் உள்ளன; உபயோகிக்கலாம்.செயற்கை கருத்தரிப்பு மூலம், அடுத்தடுத்து இரு குழந்தைகள் பெற வாழ்த்துகிறேன்.கூட்டுக்குடும்ப கதாநாயகியாகவே தொடர்ந்து இருந்து, வாழ்க்கையில் வெற்றி பெறு மகளே!— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !