அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 36 வயது பெண். எம்.ஏ., சமூகவியல் பட்டப்படிப்பில், கோல்டு மெடல் பெற்றவள். கல்லுாரியில் படிக்கும் ஒரு தம்பியும், தங்கையும் உள்ளனர். எனக்கு பாட்டு, பரதம் ஆகியவற்றில் நல்ல பயிற்சி உண்டு. வீட்டிலும், உறவினர் மத்தியிலும் நல்ல மரியாதை உண்டு. அப்பாவுக்கு, மாநில அரசு பணி; அம்மா இல்லத்தரசி.மேற்கொண்டு படிக்க விரும்பினேன். ஆனால், 'திருமணம் செய்து கொண்டு படி...' என்று கூறி விட்டார் தந்தை. அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டு, 25வது வயதில், தந்தை பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டேன்.புகுந்த வீட்டில், மேற்படிப்புக்கு தடை விதித்தனர், இது, எனக்கு கிடைத்த முதல் அடி. அடுத்து, அரசு பணியில் செல்வாக்காக இருந்த அப்பாவிடம், எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு, வரதட்சணை என்ற பெயரில் கறக்க முயன்றனர். தம்பி - தங்கையின் படிப்பு செலவு, குடும்ப செலவு, அம்மாவின் வைத்திய செலவு என, ஏகப்பட்ட நெருக்கடியில் தவித்த அப்பாவால், இவர்கள் கேட்கும் போதெல்லாம் பணம் தர இயலவில்லை; என்னையும் வேலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை.இதனால், ஆத்திரமான கணவர், தினமும், மது அருந்தி, என்னை அடித்து கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். இதற்கிடையில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பிரசவத்துக்கு கூட தாய் வீட்டிற்கு அனுப்ப மறுத்தார், கணவர்.கணவரது கொடுமை தொடரவே, என் குழந்தையுடன் அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன். இரண்டு ஆண்டுகள் கழித்து, கடும் போராட்டத்துக்கு பின், விவாகரத்து பெற்றேன்.தற்சமயம், தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். நானும், 11 வயது மகளும் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளோம். இன்னொரு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகின்றனர் தோழியர். விடலை பருவத்தில் பெண்ணை வைத்துக் கொண்டு, இன்னொரு திருமணத்தை நினைத்து பார்க்க முடியவில்லை.ஆனாலும், எனக்கென ஒரு உறவை அமைத்துக் கொள்ள, மனம் விரும்புகிறது. இப்போது என்ன முடிவு எடுப்பது; சொல்லுங்கள் அம்மா.— இப்படிக்கு, உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —வெஞ்சிறையிலிருந்து சட்டப்படி விடுதலை பெற்ற உன்னை நெஞ்சார வாழ்த்துகிறேன். 11 வயதாகும் உன் மகளை படிக்க வைத்து, திருமணமும் செய்து வைக்க, இன்னும் எப்படியும், 13 ஆண்டுகள் ஆகும். ஒரு பெண்ணுக்கு குறைந்த பட்சம், 45 வயது வரை தாம்பத்யம் தேவை. அதன்பின், இறுதி பயணத்துக்கு ஓலை வாங்கும் வரை அனுசரனையான ஒரு வாழ்க்கைத்துணை தேவை. இரு தேவைகளையும் ஒரு கணவனால் தான் பூர்த்தி செய்ய முடியும்.காலம் மாறிவிட்டது. பத்து வயது குழந்தைகள், 25 வயதினர் போல வாழ்க்கையின் உள்ளும்புறங்களை அவதானித்து வைத்திருக்கின்றனர். தன் தேவைகள் தனக்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோல், பெற்றோரின் தேவைகள் பெற்றோருக்கு அவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருக்கின்றனர். தங்களது சுயதேவைகள் பூர்த்தியாகும் பட்சத்தில், பெற்றோர் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தடை விதிக்க மாட்டர்.மறுமணம் செய்துகொள்ளப் போகும் தாய் - தந்தையிடம், சில விஷயங்களை குழந்தைகள் எதிர்பார்ப்பர். அவை:* பதினோறு வயதானாலும், மகன், மகள் இருப்பை, மறுமணம் செய்து கொள்ளப் போகும், தாயோ - தகப்பனோ அங்கீகரிக்க வேண்டும்.* மறுமணத்திற்கு, குழந்தைகளின் முழு மனம் ஒப்பிய அனுமதியை, தாயோ - தகப்பனோ, கேட்டுப் பெற வேண்டும்.* மறுமணத்திற்கு முன், வரப்போகும் வாழ்க்கைத் துணையை, அவர்களிடம் அறிமுகப்படுத்தி, அரை மணி நேரம் மனம் விட்டு பேசச் சொல்லி, இறுதி அனுமதி பெறுதல் நலம்.* மறுமணம் செய்துகொள்ளப் போகும் ஜோடி, முதல் திருமண உயிரியல் தாய் - தந்தை வயதினராய் இருத்தல் சிறப்பு.* மாற்றாந் தந்தைகள், தங்களது இரண்டாவது மனைவியின் மகள்களை வேறு மாதிரியாக நினைக்காமலும், மகன்களை உள்நாட்டு அகதிகளாக பாவிக்காமலும் இருந்தால், புதிய திருமணம் மிகப்பெரிய வெற்றி பெறும். இந்த புரிதல் பரஸ்பரம் மிக அவசியம்.மகளே... உன் பெற்றோரிடம் மறுமண விருப்பத்தை நாசூக்காக பதிவு செய். மகளிடம் மறுமணத்திற்கான காரண காரியங்களை பக்குவமாக கூறு. மறுமணத்திற்கு பின், தாய் பாசத்தில் ஒரு 'மில்லி மைக்ரான்' அளவும் குறை வைக்க மாட்டேன் என வாக்குறுதி கொடு. மறுமண திட்டம் உனக்கும், உன் மகளுக்கும் சேர்த்தே பயனளிக்கக் கூடியது என தெளிவுபடுத்து. 'மேட்ரிமோனியல்' பகுதியில், '40 வயது விதவன் அல்லது முதிர் கண்ணன் தேவை' என விளம்பரம் கொடு. பணியிடத்தில் தூண்டில் போடும் திருமணமான ஆண்களின் பசப்பு வார்த்தைக்கு மயங்காதே.பாட்டு, பரதம் சொல்லித் தரும் ஒரு பயிற்சி பள்ளியை வீட்டிலேயே நடத்து. கற்றது மறக்காது, புதியவர்களை திறமைசாலி ஆக்கலாம். ஒரு தீபம், நூறு தீபங்களுக்கு ஒளியேற்றும்.தனிமைத் துயர் போக்க, மனப் பதற்றம் அகல, ஒரு நாயையோ, பூனைக் குட்டியோ, கிளியோ அல்லது மைனாவோ நீ வளர்க்கலாம்.அலுவலகம் முடிந்து, வீடு திரும்பும் நீ, பள்ளி முடிந்து வீடு திரும்பும் உன் மகளிடம், அலுவலக விஷயங்களை, ரேடியோ ஜாக்கி போல சுவைபட கூறு. பள்ளி விஷயங்களை, உன் மகள், உன்னிடம் ஒலி சித்திரம் போல கதைக்கட்டும். இருவரிடமும் எந்த ஒளிவு மறைவும் வேண்டாம். நல்ல தோழிகளாக இருக்கப் பாருங்கள்.'மேட்ரிமோனியல்' மூலம் வரும் மாப்பிள்ளை குடிப்பழக்கம் உள்ளவனா, பெண்கள் விஷயத்தில் எம்மாதிரியானவன் என்பதை தீர விசாரி. மாப்பிள்ளைக்கு குழந்தைகள் இல்லாமல் இருப்பது நல்லது. உன் இரண்டாம் திருமணம் மாபெரும் அற்புதத்தை அரங்கேற்றா விட்டாலும் பரவாயில்லை... பத்துக்கு, ஐந்து பழுதில்லா வாழ்க்கையையாவது அமைத்து தரட்டும். இம்முறையாவது உனக்கு நல்ல கணவன் அமைய, உன் மகளுக்கு, நல்ல தகப்பன் கிடைக்க, திருப்பதி வெங்கடாஜலபதியை மனமுருக பிரார்த்திக்கிறேன். — என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.