அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள சகோதரிக்கு —நான், 75 வயதாகும் ஆண். மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மகனுக்கு திருமணமாகி விட்டது. இரு பேரக் குழந்தைகள் உள்ளனர்.நான், சொந்தமாக துணிக் கடை வைத்து, கார், பெரிய வீடு என்று வாழ்ந்தவன். பற்றாக்குறை இல்லாமல், வருமானத்துக்கு தக்கபடி குடும்பம் நடத்தியவன். வந்த மருமகள், ஆடம்பர பிரியை; வரவுக்குள் செலவு செய்ய தெரியாதவள்.நாங்கள் குடியிருக்கும் வீடு, பழைய மாடலில் இருப்பதாக கூறி, அதை மாற்றி, புது மாடல் பங்களா கட்ட விரும்பினாள்.'வியாபாரம் சற்று நலிந்துள்ளது. அதை சரி செய்த பின், வீட்டை புதுப்பிக்கலாம்...' என்று, மகனும், மனைவியும் கூறினர்.ஆனால், இது எதையும் கண்டு கொள்ளாமல், தன் அப்பாவிடம் சொல்லி, வீட்டை புதுப்பிக்க, 'கான்ட்ராக்டரை' ஏற்பாடு செய்து விட்டாள். விஷயம் கை மீறி போனதும், கவுரவம் கருதி, இந்த ஏற்பாட்டுக்கு உடன்பட வேண்டியதாகி விட்டது.வீடு புதிதாக, ஆடம்பரமான உள் அலங்காரம் என, கம்பீரமாக காட்சியளித்தது. இதற்காக பல லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டது.தற்சமயம், துணிக் கடை நஷ்டமடையவே, விற்று விட்டோம். கிடைத்த பணத்தில் கொஞ்சம் கடனை அடைத்தோம். வீடும் அடமானத்தில் உள்ளது.என் மகன், குறைவான சம்பளத்தில், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு செல்கிறான்.நானும், மனைவியும் தனியாக ஒரு குடிசை வீட்டில் வசிக்கிறோம். மகன் குடும்பம் தனியாக உள்ளது. அவன் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்படுகிறான். எங்களாலும் உதவ முடியாத நிலை. முதலாளியாக பல பேருக்கு சம்பளம் கொடுத்த நானும், வேறு ஒரு, 'ரெடிமேட்' துணி கடையில், மாத சம்பளத்துக்கு வேலைக்கு செல்கிறேன்.இவ்வளவுக்கு பிறகும், மருமகள் திருந்தவில்லை. குழந்தைகளை உயர்தர, 'கான்வென்டில்' சேர்த்து, மேலும் மேலும் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறாள்; மகனும் இதை தடுக்க முடியாமல், விழி பிதுங்கிக் கொண்டுள்ளான்.மருமகளை திருத்தவும், மீண்டும் வசதியுடன் வாழ்வில் உயரவும், வழி சொல்லுங்கள்.— இப்படிக்கு,உங்கள் சகோதரன்அன்பு சகோதரருக்கு —வீண் ஆடம்பரமும், கடன் வாங்குதலும், புற்றுநோயை விட ஆபத்தான உயிர்கொல்லிகள். குடி நோயாளி கூட, ஒருநாள் திருந்துவான். ஆனால், கடன் வாங்கி பழக்கப்பட்டவன், ஆயுளுக்கும் திருந்த மாட்டான். கடன் வாங்கும்போது, குறிப்பிட்ட காலத்துக்குள் கடனை திருப்பி தரவேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்.ஏமாந்தவனிடம் கடன் வாங்கி, திருப்பி தராமல் ஏமாற்றி விடுவோம் என்ற எண்ணத்துடன், தொடர்ந்து கடன் வாங்க வாங்க, முற்றும் நனைந்த மனோபாவம் வந்து விடும். உங்கள் மருமகள் இந்த பட்டியலில் இருக்கிறாள்.மருமகளின் வீண் ஆடம்பரத்தை கண்டித்து, தடுக்காதது உங்களின் குற்றமே.பல லட்சம் செலவு செய்து வீட்டை புதுப்பிக்க, உங்கள் மருமகள் கிளம்பும்போதே, நீங்கள் நெற்றிக்கண் காட்டி தடுத்திருக்க வேண்டும். அப்போதே தடுக்காமல், வீண் புலம்பல் எதற்கு?மேலும், இரு பேரக் குழந்தைகளை, உயர்தர, 'கான்வென்டில்' சேர்ப்பதை, நீங்களும், உங்கள் மகனும் கறார் கண்டிப்புடன் தடுத்து, அரசு பள்ளியில் சேர்த்திருக்கலாம்.மாமனார் ஸ்தானத்தில் நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பார்ப்போம்...* மருமகள் என்ன படித்திருக்கிறாள் என்பதை, உங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை. அவளை ஏதேனும் வேலைக்கு அனுப்புங்கள். ஒவ்வொரு ரூபாய் சம்பாதிக்கவும் எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது என்பதை உணர்வாள்; பணத்தின் அருமை புரிபடும். வீண் ஆடம்பரமும், கடன் வாங்குதலும் எவ்வளவு தவறான விஷயங்கள் என்பதை, ஒரு மனநல ஆலோசகர் மூலம், மருமகளுக்கு வலியுறுத்துங்கள். தவறான வழிகாட்டல் வேண்டாம் என, சம்பந்தி வீட்டாரை கண்டியுங்கள். மருமகள் திருந்தினாலே, கவிழ்ந்த உங்கள் குடும்பம் மீண்டும் தலைதுாக்கும்* இரு பேரக் குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேருங்கள். வீட்டிலேயே துணி வியாபாரம் செய்யுங்கள். இது, தற்காலிக ஏற்பாடு* அடுத்த, 10 ஆண்டுகளுக்கு, 10 ஆண்டு திட்டம் வடிவமையுங்கள். அடமானத்தில் உள்ள வீட்டை நல்ல விலைக்கு விற்று, அடமான தொகையை கட்டியது போக மீதி பணத்தை, இரண்டாக பிரியுங்கள். ஒரு பங்கில், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் நிலம் வாங்கி, எளிமையாக ஒரு வீட்டை கட்டுங்கள் அல்லது சொற்ப விலைக்கு ஏற்கனவே கட்டிய வீட்டை வாங்குங்கள். இரண்டாவது பங்கில், புதுப்பிக்கப்பட்ட நிர்வாகத்திறனுடன் ஒரு மிகச்சிறிய துணிக்கடையை மீண்டும் ஆரம்பியுங்கள்* கடை வருமானம், குடும்ப செலவுகளை, தினசரி கணக்கு எழுதுங்கள். 10 ரூபாய் வரவு வந்தால், செலவு, எட்டு ரூபாயை தாண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்* உங்களது சீர்திருத்தங்களுக்கு, மருமகள் அடங்க மறுத்தால், அவளது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். சிறிது காலம் கணவரையும், குழந்தைக ளையும் பிரிந்திருந்தால், அவள் திருந்த வாய்ப்பு உண்டு* கஞ்சத்தனம் வேறு, சிக்கனம் வேறு. ஆடம்பரம் அறவே கூடாது. கடன் வாங்காமல் வருமானத்திற்குள் வாழ வேண்டும் என்பதை, பேரக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்* வீட்டில் நான்கு கைபேசி இருந்தால், இரண்டாக குறையுங்கள். 45 வயது மகனை, நவீன உலகத்தில் வெற்றிகரமாய் வாழக்கூடிய குடும்பஸ்தனாக மாற்றுங்கள்* கிடைக்கும் சொற்ப வருமானத்திலும் சிறிதளவை சேமிக்க பழகுங்கள். பூட்டுகள், சாவி இல்லாமல் உருவாக்கப் படுவதில்லை. அழுது புலம்பாமல், பிறர் மீது குற்றச்சாட்டு வைக்காமல், துவண்டு விழாமல், சமயோசிதமாக செயல்பட்டால், வெற்றி நமதே.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.