உள்ளூர் செய்திகள்

வளையலுக்குள் இவ்வளவா!

ஆக., 11, ஆடிப்பூரம்ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழா, ஆடிப்பூரம். இதை, காதல் திருவிழா, காப்பு திருவிழா என்றெல்லாம் புகழ்வர். பூரம் நட்சத்திரத்திற்கு அதிபதி, சுக்கிரன். இவரே, உயிர்களுக்கு காதல் உணர்வை ஊட்டுபவர். இதனால் தான் பூமாதேவி, தன் காதலை திருமாலிடம் வெளிப்படுத்த, ஆடி மாதம், பூரம் நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து, உலகில் அவதரித்தாள். அவளை ஒரு துளசி தோட்டத்தில் கண்டெடுத்த பெரியாழ்வார், கோதை என பெயரிட்டார். இதற்கு, நல்வாக்கு அருள்பவள் மற்றும் பூமாலை என, பொருள்.காதலை வெளிப்படுத்துபவர்கள், பூவுடன் செல்வது வழக்கமாக உள்ளது. திருமாலுக்கு செல்லும் பூமாலை அழகாக இருக்கிறதா என, தன் கழுத்தில் அணிந்து பார்த்து, பிறகு அவருக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள், கோதை. அந்த மாலையே அவர்களை இணைத்து வைத்தது. காதலால் திருமாலை ஆண்டதால், ஆண்டாள் என்ற பெயர் தொற்றிக்கொண்டது.ஆடிப்பூரத்தை, காப்பு திருவிழா என்றும் சொல்வர். பார்வதிதேவியை, கர்ப்பவதியாகக் கருதும் பக்தைகள், அவளது வயிற்றுப்பகுதியை பெரிதாக அலங்கரித்து, வளைகாப்பு நடத்துவர்.'காப்பு' என்றால் காப்பாற்றுவது. கிராமக் கோவில்களில் அம்பாளுக்கு காப்பு கட்டி விட்டால், அவ்வூர் மக்கள் வெளியூர் செல்வதைத் தவிர்த்து விடுவர். வெளியூர் சென்றால் விபத்துக்கள் நேரலாம். ஏதாவது அசம்பாவிதத்தால் ஊர் திரும்ப முடியாமல் போகலாம். இதனால், விழா தடைபட்டு போய் விடக்கூடாது. இதனாலேயே வேப்பிலை காப்பு (வளையல்) சூட்டி, அம்பாளை அலங்கரிப்பர். ஒரு நுால் எழுத துவங்கும் போது, காப்பு செய்யுள் என்ற ஒன்றை வடிப்பர். இதற்கு, தெய்வ வணக்கம் என்று பொருள். காப்பு அணிவதும், ஒரு வகை வழிபாடே. இதனால் தான், கர்ப்பிணி பெண்களுக்கு ஏழு அல்லது ஒன்பதாம் மாதத்தில் வளைகாப்பு நடத்துவர். தற்காலத்தில் தான் கண்ணாடி வளையல்கள் பிரபலம். முற்காலத்தில், தங்கம், வெள்ளி, செம்பு, வேப்பிலை வளையல்கள் தான் அணிவிக்கப்படும். தங்க வளையல், இறைவனுடன் மனதை ஒன்ற செய்யும். இது வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு நற்சிந்தனையை வளர்க்கும்.வெள்ளி வளையல், எதிர்மறை எண்ணங்களில் இருந்து பாதுகாக்கும். செம்பு வளையல், ரத்த ஓட்டத்திற்கு நல்லது. தேவையான அளவு வெள்ளை அணுக்களையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு என்பர். ஏழு, ஒன்பது மாதங்களுக்கு பின், கர்ப்பிணி பெண்கள் தாம்பத்யம் கொள்வதால், வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு ஆபத்து வரலாம் என, அக்கால மக்கள் கருதினர். அதிலிருந்து பாதுகாக்கவே, 'காப்பு' என்ற நிகழ்ச்சியையே வீட்டில் உருவாக்கினர். வளையல் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆடிப்பூர விழாவை நடத்தினால், அதன் முழு பலனையும் நாம் அடையலாம். தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !