உள்ளூர் செய்திகள்

அந்த வீடும் சில மரங்களும்!

மணிக்கட்டில் கட்டியிருந்த கடிகாரத்தை அடிக்கடி திருப்பி பார்த்து, தனக்கிருக்கும் வேலைகளின் அவசரத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தான் சரவணன்.''எப்படா வர்றதா சொன்னான், அந்த குமாரு? எனக்கு வேலை இருக்குடா,'' என்று, தம்பி செந்திலைப் பார்த்து கேட்டான் சரவணன்.''வந்துடுவார்ணே, அதுக்கு முன்னால, அப்பாகிட்ட எல்லாத்தையும், சொல்லி புரியவச்சுட்டியா... அவர் பாட்டுக்கு உளறி, காரியத்த கெடுத்துடப் போறாரு.''மகன்கள் பேசிக் கொள்வது, கல்யாண முருங்கை மரத்தடியில் அமர்ந்திருந்த, சத்திய மூர்த்திக்கு துல்லியமாய் கேட்டது. கண்களை மூடி, அப்படியே மரத்தடியில் அமர்ந்திருந்தார்.பத்து நிமிடத்தில், குமார் வந்து விட்டான். கண்களில், முதல் நாள் குடித்த பீரின் மிச்ச கிறக்கம், எஞ்சியிருக்க, கனத்த சரீரத்தை தூக்கிக் கொண்டு, உதவியாள் பின் தொடர வந்தான். அவனைக் கண்டதும் சரவணனும், செந்திலும், வாயெல்லாம் பல்லாக, குனிந்து, நெளிந்து வரவேற்றனர்.கல்யாண முருங்கை மரத்தை அன்பாய் தடவிய சத்தியமூர்த்திக்கு, பழைய எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, அணிவகுத்து வரத்துவங்கியது. மனைவி காந்திமதி நகை, நட்டுகளை, அடமானம் வைத்து, இந்த இடத்தை வாங்கிப் போட்டதுடன், மூன்றே வருடத்தில், அழகாய் வீட்டையும் கட்டி விட்டாள். வீட்டைச் சுற்றி இருந்த இடத்தில், ஒரு செவலை பசுவும், முட்டைக் கோழிகளையும் வளர்த்தாள். அந்தப் பகுதியிலேயே மிக அழகான, வீடு இதுதான். காந்திமதியைப் போல், வீட்டை நேசிக்கிற மனுஷியை பார்ப்பது, அரிது என்று தோன்றும் சத்தியமூர்த்திக்கு. சரவணன், செந்திலோடு சேர்த்து, இந்த வீட்டை மூன்றாவது குழந்தையாய் தான், அவள் பேணிப் பாதுகாத்தாள். அவளுடைய மறைவிற்கு பின், மருமகள்கள், இந்த வீட்டை கூட்டிப் பெருக்கவே அழுதனர்.'நாலு இடத்துக்கு போய் பாருங்க, கண்ணாடி மாதிரி பிளாட்டுகளெல்லாம் எப்படி, 'பள பள'ன்னு இருக்குன்னு. நாம மட்டும், இந்த மாயாபஜார் காலத்து வீட்டிலே இருந்து, இரண்டு வேளையும் பூவும், இலையுமா கூடை கூடையா வாரிக்கொட்ட வேண்டியிருக்கு...'மருமகள்கள் ரேவதியும், சாந்தியும் தினமும் பாடிய இந்த பாட்டு, மிகச் சரியாய் வேலை செய்து, இன்று குமார் மூலம், அவர்கள் நினைத்த காரியம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இரண்டு பிளாட்டும், எழுபது லட்சம் ரொக்கமும் தருவதாய் பேரம் படிந்திருந்தது. ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் கறாராய் இருந்தான் குமார்.'பாருங்கோ மிஸ்டர் சரவணன் அண்ட் செந்தில்... என்னதான், நமக்குள்ள டீலிங் முடிஞ்சிருந்தாலும், இந்த இடம், உங்க அப்பா பேர்லதான் இருக்கு; சோ, நான் அவர்கிட்ட, ஒரு வார்த்தை பேசிடணும். அப்பத்தான் எனக்கும், திருப்தி...' கறாராய் சொல்லி விட்டான் குமார். அதற்காகத்தான் இன்று, அப்பாவை பார்க்க, நேரில் வந்திருந்தான்.''உங்கப்பாவ பாக்கலாமா சரவணன்?'' குமார் கேட்டபோது, மனைவி ரேவதியைப் பார்த்து, அப்பாவை அழைத்து வருமாறு கண் அசைத்தான். காம்பவுண்ட் சுவரில், பந்தலில்லாமல் படர்ந்து கிடந்த ரோஜாச் செடிகளையும், மல்லிச் செடிகளையும் கவலையோடு பார்த்துக் கொண்டு இருந்தார் சத்தியமூர்த்தி.''மாமா... உள்ளே வாங்க; குமார் சார் உங்க வாயால சம்மதம் கேட்க வந்திருக்காரு,'' குரலை தாழ்த்தி சொன்னாள் ரேவதி.''ம், ஆகட்டும். யம்மாடி ரேவதி, பரண்ல வெட்டுக்கத்தி கிடந்ததே பாத்தியா,'' என்றார் அமைதியாய்.சம்பந்தமில்லாமல் பேசுகின்ற மாமனார் மீது, எரிச்சலாய் வந்தது ரேவதிக்கு. அதைக் காட்டுகின்ற நேரம் இதுவல்ல என்று நினைத்து, பல்லை கடித்துக் கொண்டாள்.''இப்போ எதுக்கு மாமா வெட்டுகத்தியும், சுருள் கத்தியும்... உள்ளே குமார் உட்காந்துட்டு இருக்காரு.''''இருக்கட்டும்மா...வந்தவர் இங்க தானே இருப்பாரு. அங்க பாரேன்... ரோஜா செடியும், மல்லிச் செடியும் படர வழியில்லாம, தவியா தவிச்சிட்டு நிற்குது. அதுங்களை, சரியா கத்தரிச்சு, நூல் வேலி கட்டி விடலாம்ன்னு பாத்தேன்,'' என்றார் அப்பிராணியாய்.மருமகள் பார்வையில் அமிலம் கக்கவே, மெதுவாய் கையை ஊன்றி எழுந்தார். வேஷ்டியில் உதிர்ந்திருந்த கல்யாண முருங்கை பூக்களை, தட்டி விட்டு, மெதுவாய் நடந்தார். குமார் சாவதானமாய் சோபாவில் சாய்ந்திருந்தான். இவரைக் கண்டதும் நிமிர்ந்து அமர்ந்து, வணக்கம் சொன்னான்.''ஐயா... இந்த இடத்த, எங்களுக்கு குடுக்றதுல உங்களுக்கு சம்மதம் தானே?''மகன்கள் இருவரையும் முகம் உயர்த்தி பார்த்தார்; சன்னமாய் பெருமூச்சு வந்தது.''ஐயா... இவங்க என்னை, விற்கறதுக்கு கிரயம் பேசி இருந்தாக்கூட, சம்மதம்தேன்,'' என்றார் விட்டேத்தியாக. அப்பாவை முறைத்தான் செந்தில்.''இதனால, உங்களுக்கு எந்த மனக்கஷ்டமும் இல்லையே... இதோ பாருங்க பெரியவரே, இந்த வீட்டை நாங்க எடுத்துட்டு, உங்களுக்கு இதையே நவநாகரீகமா மாத்தி தர்றதோட, கைநிறைய பணமும் தர்றோம். அதனால, இங்க இருந்து விலகிப்போயிடுவோமோன்னு நினைச்சு, எந்த வருத்தமும் பட தேவை இல்லை.''குமார், வார்த்தைகளில், வெண்ணெய் தடவி, பேசினான். சூழலுக்கு பொருந்தாத அமைதி, அந்த இடத்தில் நிலவி, தர்மசங்கடப்படுத்தியது.''சொல்லுங்க ஐயா... உங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லையே?''''இல்லங்க. எதையும் ஆட்சேபிக்குற கட்டத்தையெல்லாம், நான் தாண்டி வந்துட்டேன். பழுத்துப் போன இலைக்கு ஆதாரம் வேரா, கிளையான்னு கேட்டா, யாருக்கும் சொல்லத் தெரியாது. என்னை மாதிரி, பழுத்த இலையோட நெலமையும் அப்படித்தான். எனக்கு ஆதரவு இந்த வீடா, என் பிள்ளைகளான்னு கேட்டா, என்னால பதில் தர முடியாது. என் வீடு எனக்கு ஜீவாதாரம்... நான் சம்பாதிச்சு, அரும்பாடுபட்டு சேர்த்த சொத்து; என் மனைவியோட ஞாபகங்கள் வாசம் செய்ற இடம். ஆனா, என் பிள்ளைக, என் வாழ்க்கையோட மொத்த சொத்து. அவுங்களோட தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு தலையாட்டுறது தானே, நல்ல தகப்பனோட கடமை.''சத்தியமூர்த்தியை அதிசயமாய் பார்த்தான் குமார். மகன்கள் வெற்றி புன்னகையுடன், கைகுலுக்க குமாரிடம் கரம் நீட்டினர். வெளியில் வந்தார் சத்தியமூர்த்தி. வானம் களங்கமாய் இருந்தது. 'ஓ'வென, ரத்தக் கண்ணீர் வடிப்பதுபோல், கல்யாண முருங்கை, பூக்களை கொத்து கொத்தாய் இரைத்தது போல் பூக்கள், தரையில் குவிந்திருந்தன.மனிதர்களின் பிடிமானங்களும், விருப்பங்களும், வேறுபடுகிற களங்களை நினைக்கும் போது, வேடிக்கையாய் இருந்தது சத்தியமூர்த்திக்கு. காந்திமதிக்கு இந்த காற்றோட்டமும், அத்தோடு சேர்ந்த வீடும் நிரம்ப பிடிக்கும். சருகுகளையும், இலைகளையும் சுத்தப்படுத்துவதே, ஒரு உயர்ந்த பணியாய் நினைத்து வாழ்ந்தாள். ஆனால், ரேவதிக்கும், சாந்திக்கும் இவை அசவுகரியங்களாய் தோன்றியிருக்கிறது. இந்த நிதர்சனங்களை ஏற்றுக் கொள்வது, காலத்தின் கட்டாயம்.படர பந்தலற்ற கொடிகள், பச்சை குழந்தைகளாய், காற்றில் கைநீட்டி இவரைப் பார்த்து அழைத்தன. நெஞ்சு பொறுக்காமல், பக்கத்து வீட்டு பட்டாபியிடம், வெட்டுக்கத்தி வாங்கி வந்து, அதன் முனைகளை சீறாய் கத்தரித்து விட்டார். கிணற்று மேட்டில் கிடந்த மூங்கில் கொம்புகளை ஒழுங்காய் சீவி, ஊன்றி, சணலால் பிணைத்து, மெல்லிய பந்தலாய் உருவாக்கி, கொடிகளை படர விட்டார். விளக்கு மாற்றை தேடி எடுத்து, வாசலில் படர்ந்து கிடந்த குப்பைகளை வாரிக் குவித்தார். வெளியில் வந்த குமாருக்கு, இந்த விஷயங்கள் ஆச்சரியமாய் இருந்தது.''மிஸ்டர் சத்தியமூர்த்தி, உங்களுடைய வீடு கிரயமாயாச்சு; இன்னும், ஒரு மாசத்துல இந்த இடத்த நீங்க காலி செய்தாகணும். கரெக்டா அந்த தேதியிலிருந்து ஏழாவது மாசம், நாங்க உங்களுக்கு போர்ஷன்களை தந்திடுவோம். அப்படியிருக்க, பிய்த்து வீசப்போற செடிகளுக்கு, ஏன் கொடி கட்டறீங்க,'' என்று கேட்டான் குமார்.மந்தகாசமாய் சிரித்தார் சத்தியமூர்த்தி.''ஒரு மாசம் இருக்கே... இப்போ, இந்த செடிகளும் உயிரோட இருக்கு; நானும் உயிரோட இருக்கேன். அப்படியிருக்கயில, அந்த வாயில்லா ஜீவன்களை வாட விடலாமா? எழுபது வயசுல இறக்கத்தானே போறோம்ன்னு, அறுபது வயசுல இருந்து சாப்பிடாமயா இருக்கோம்... என் மனைவி காந்திமதி சொல்லுவா, 'எல்லா உயிர்களும் ஒருநாள் மடியத்தான் போறது. அதனால, எல்லா உயிர்களுக்கும், தங்களுடைய கடைசி நிமிஷம் வரைக்கும், வாழ்ந்தாக வேண்டிய உரிமை, இருக்கு'ன்னு. இப்போ நானிருக்கேன், இவைகளை பராமரிக்கிறேன். நாளைக்கு நான் இல்லாம போனா, உண்மையாகவே வருத்தப்படற உயிர்கள், இவையாத்தானிருக்கும்.''அவருடைய அழுத்தமான, நெகிழ்வான பேச்சு, குமாரைக் கட்டிப் போட்டது போலிருந்தது. அவர் முகத்தையே கூர்ந்து பார்த்து, பின் கேட்டான்...''ஐயா... இந்த வீட்டையும், சூழலையும் இவ்வளவு நேசிக்கிறீங்களே... பின்னே எப்படி விற்க சம்மதிச்சீங்க,'' என்றான் வாஞ்சையாக.மீண்டும் சிரித்தார் சத்தியமூர்த்தி. பின், மகன்களை நோக்கினார்.''இந்த வீட்டை விட, என் குழந்தைகளுடைய சந்தோஷம் எனக்கு பெரிசா தெரியுது. அதனால சரின்னு சொன்னேன். நிச்சயமாய் மற்ற வீடுகளில் நடக்கிற மாதிரி, என் பிள்ளைக என்னை எந்தக் கட்டாயமும் படுத்தல, 'என் காலத்துக்கு பின் என்னவோ செய்ங்க'ன்னு, ஒரு வார்த்தையில தடுத்திருக்கலாம்; அது சுயநலம். என்னால, அதுபோல என் குழந்தைகளுடைய விருப்பு, வெறுப்புகளை தள்ளிப் போட்டுட முடியல.அதேவேளை, இந்தச் செடி, கொடி, நான் காதலிச்ச இந்த கல்யாண முருங்கை, அந்த போகன்வில்லா, கொட்டடி, மரக்கதவு, இதையெல்லாம் பிரியப்போறோமேன்னு மனசு வலிக்குது.''இந்த வீட்டிலேயே மறுபடி வந்து வாழத்தான் போறோம்ன்னாலும், இது எதுவுமில்லாத இடத்துல, வாழப் போறோங்கிறத நினைச்சா, அடிவயித்துல இருந்து துக்கம் பந்தா உருளுது. ஆனாலும், எல்லாம் மாறும்... அந்த புதுவீட்ல கூட, நான் நேசிக்க, ஏதாவது புதுவிஷயம் இருக்கலாம்,'' அப்பாவியாய் சொன்னார் சத்தியமூர்த்தி.குமார், அப்படியே கரைந்து போயிருந்தான். மண்ணையும், மரங்களையும், மகன்களுக்கு இணையாய் நேசிக்கிற அற்புதமான மனிதரை, இந்த இருபத்தைந்து வருட, கட்டட வாழ்க்கையில், இதுபோன்ற வீட்டோடு கட்டுண்ட போன, மாமனிதனை கண்டதில்லை. பிள்ளைகளையும், உணர்வுகளையும் ஒன்றாய் பார்த்து, அதில் பிள்ளைகளுடைய உணர்வுகளுக்கே முதல் உரிமை தந்த நல்ல மனிதனை, உயர்ந்த தகப்பனை, அன்று தான், முதன்முதலாய் சந்தித்த திருப்தியுடனும், அங்கு புதிதாய் கட்டப்போகும் வீட்டிலும், இது போன்று மரம், செடி வளர்க்க இடம் விட வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டான். எஸ்.பர்வீன் பானு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !